பாகவத புராணம் - பகுதி 24 - பதினெண் புராணங்கள்
கலியுகமும் ஆள்பவர்களும்
பாகவத புராணத்தை சுகதேவமுனிவர் சொல்லி முடிக்க கேட்டுக்கொண்டிருந்த பரிட்சித்து, கலி தொடங்கிவிட்டது என்றீர்கள். இந்த யுகத்தில் எந்தெந்தப் பரம்பரை ஆட்சி செய்யும் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றான். கிருஷ்ணன் இறந்த பொழுதே கலியுகம் தொடங்கி விட்டது. அவருக்குப் பின் பிரத்யோத பரம்பரை ஆட்சிக்கு வரும். இதில் 5 அரசர்கள் நூற்றிமுப்பத்தெட்டு ஆண்டுகாலம் ஆட்சி நடத்துவர். சிசுநாக பரம்பரையில் பத்து மன்னர்கள் முந்நூற்றி அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள். நந்தா என்ற சூத்திரன் அரசாட்சி ஏற்று 100 ஆண்டுகள் ஆள்வான். அவனும் அவனது எட்டுப் பிள்ளைகளும் சாணக்கியன் என்ற பிராமணனால் அழிவை எய்துவர். சாணக்கியன் சந்திரகுப்தனை அரசனாக்குவான். இந்தப் பரம்பரையில் 10 மன்னர்கள் 137 வருடங்கள் ஆட்சி புரிவர். மெளரிய பரம்பரையில் கடைசி மன்னனான விருகதரதா, அவனுடைய சேனாதிபதி புஷ்யமித்ரா என்பவனால் கொல்லப்படுவான். இதிலிருந்து சுங்கவம்சத்தின் 10 மன்னர்கள் நூறு ஆண்டு களுக்குமேல் ஆட்சி செய்வர். கன்வர் பரம்பரை 345 ஆண்டுகள் ஆட்சி செய்யும். இதன் பிறகு 456 ஆண்டுகட்கு ஆந்திர மன்னர்கள் ஆள்வர். இதன் பிறகு பல வம்சங்களைச் சேர்ந்த பல மன்னர்கள் பல பகுதிகளைப் பிடித்து ஆள்வர். அவர்கள் அனைவரும் தீயவர்களாகவே இருப்பர். நாடு துண்டாடப்படும்.
தீமை என்பதே கலியுகத்தில் இலக்கணமாக இருக்கும். பொருட்செல்வம்தான் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்ற எண்ணம் மக்கள் மனத்தில் புகுந்துவிடும். நேர்மையான வாழ்க்கை என்பதே அரிதாகிவிடும். உறவினர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும் பதவி அளித்தல், லஞ்ச ஊழல் என்பது மலிந்துவிடும். இந்நிலையில் கல்கி அவதாரம் எடுத்துக் கலியுகத்தை ஒழித்துச் சத்திய யுகத்தைத் தோற்றுவிப்பார்.
கல்கி ஆனவர் சம்பாலா என்ற கிராமத்தில், விஷ்ணுயாசா என்ற பிராமணனின் மகனாகப் பிறப்பார். சுகதேவமுனிவர் பரிட்சித்து மன்னனைப் பார்த்து, 'நீ பிறந்த அன்றிலிருந்து ஆயிரத்து நூற்றுப் பதினைந்து ஆண்டுகள் கழித்து, மகாபத்மநந்தாவுக்கு முடிசூட்டு விழா நடைபெறும் என்று கூறினார்.
பரிட்சித்து மன்னன் முடிவு
முடிவுகாலம் நெருங்கியதும் அவன் சுகதேவ முனிவரைப் பார்த்து, 'பாகவத புராணத்தைக் கேட்டதால் தெளிவடைந்து விட்டேன். இறப்புப் பற்றிய அச்சம் ஒரு சிறிதும் இல்லை எனக்கு’ என்று கூறியவுடன் சுகதேவமுனிவர் விடை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். பரிட்சித்தைக் கொல்ல வேண்டிய தட்சகன் என்ற பாம்பு ஒரு பிராமண வடிவம் கொண்டு பரிட்சித்தை நெருங்கிற்று. காரணம், பாம்பு வடிவத்துடன் வந்திருந்தால் யாரும் அதனை அரசன் பக்கத்தில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். பிராமணர் என்ற காரணத்தால் அரசன் பக்கத்தில் செல்லத் தட்சகனுக்கு முடிந்தது. குறிப்பிட்ட நேரத்தில் பரிட்சித்தைத் தட்சகன் கடித்துக் கொன்றுவிட்டது.
பரிட்சித்து மன்னன் மகனுக்குத் தட்சகன் மேல் பெருங் கோபம் உண்டாயிற்று. தட்சகனை மட்டுமல்லாமல் பாம்புகளை பலியிடுவதற்குரிய ஒரு யாகத்தைத் தொடங்க முடிவு செய்தான். இதனை அறிந்த தட்சகன் இந்திரனிடம் ஒடிச் சென்று தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டது. தேவகுருவான பிரகஸ்பதி ஜனமேஜயனிடம் வந்து சமாதானம் சொல்லி அந்த யாகத்தை நிறுத்திவிட்டான்.
பாகவத புராணத்தின் சிறப்பு
புராணங்களில் சிறந்தது பாகவத புராணம். எல்லா நகரங்களையும்விடக் காசி சிறந்துள்ளது போலவும், எல்லா ஆறுகளையும்விட கங்கை சிறந்துள்ளது போலவும், எல்லா தெய்வங்களையும்விட விஷ்ணு சிறந்துள்ளது போலவும், எல்லாப் புராணங்களையும் விட பாகவத புராணம் சிறந்தது. விஷ்ணு பக்தர்கள் பாகவத புராணத்தைப் படித்தும், கேட்டும் பயனடைய வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 24 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பாகவத, ஆட்சி, மன்னர்கள், பரிட்சித்து, தட்சகன், ஆண்டுகள், போலவும், சிறந்துள்ளது, எல்லா, பரம்பரையில், சுகதேவமுனிவர், பரம்பரை