பாகவத புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
பாகவத புராணம் 12 ஸ்காந்தங்களையும், 335 அத்தியாயங்களையும், 18,000 பாடல்களையும் உடையது. பாகவத புராணத்தின் 12 ஸ்காந்தங்களில் பத்தாவது ஸ்காந்தம் கிருஷ்ணனுடைய பிறப்பு வளர்ப்பு அவனுடைய லீலைகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது. பதினொன்றாவது ஸ்காந்தம் யாதவ குலத்தின் அழிவு, கிருஷ்ணன் விஷ்ணு லோகம் செல்லுதல் ஆகியவற்றையும் பேசுகிறது.
பொதுவாக விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து என்றும், அவற்றுள் ஒன்பது அவதாரங்கள் முடிந்துவிட்டன என்றும், கலியுகத்தின் கடைசியில் பத்தாவதாகிய கல்கி அவதாரம் தோன்றும் என்றும், பேசவும் எழுதவும் பட்டுள்ளன. பாகவத புராணம் ஒன்றுதான் விஷ்ணு எடுத்தவை இருபத்தி ஒன்று எனவும், இனி எடுக்கப் போவது கல்கி அவதாரம் என்றும், மீதி இரண்டு அவதாரங்களுக்கும் பெயரைக் குறிப்பிடாமல் அவை உண்டு என்றும் சொல்கிறது.
பாகவத புராணப்படி விஷ்ணு யாராலும், எக்காலத்தும் காணப்பட முடியாதவர். ஆயிரக்கணக்கான முகங்களும், கைகளும், கால்களும் உடையவர். இந்த ஆயிரக்கணக்கான முகங்களிலிருந்துதான் தேவை ஏற்படும் பொழுது குறிப்பிட்ட அவதாரங்கள் தோன்றுகின்றன.
நாம் அறிந்த பத்து அவதாரங்களை இடை இடையே சேர்த்துக் கொண்டு 22 அவதாரங்களை பாகவத புராணம் விரிவாகப் பேசுகிறது. அவை வருமாறு: எல்லா வகையிலும் பண்பட்ட ஒரு பிராமணனாகத் தோன்றியது முதல் அவதாரம். இரண்டாவது பன்றியாக உருவெடுத்துக் கடலுக்கடியில் மறைந்து போன பூமியைத் தோண்டி எடுத்து வந்து உரிய இடத்தில் வைத்த வராக அவதாரம். மூன்றாவது நாரதராகத் தோன்றியதாகும். இந்த அவதாரத்தில் விஷ்ணு பக்தியின் அவசியத்தை உலகிற்கு விளக்கினார். நான்காவது, நர-நாராயண அவதாரம். இவர்கள் இருவரும் மிகக் கடுமையான தவத்தை மேற்கொண்டு உலகிற்கு வழிகாட்டினர். ஐந்தாவது கபில முனியாகத் தோன்றிய அவதாரம். கபில முனி மற்றொரு முனிவராகிய அசுரி என்ற முனிவருக்கு உபதேசம் செய்யும் வகையில் சாங்கிய தரிசனம் என்ற கொள்கையைப் பரப்பினார். (மூன்றாவது அவதாரம் பக்திப் பெருக்கையும், நான்காவது அவதாரம் புலன்களை அடக்கித் தவம் செய்வதையும், ஐந்தாவது அவதாரம் அறிவு வளர்ச்சி பெற்று அறிவின் துணை கொண்டு புதிய சிந்தனைகளை வளர்ப்பதைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன.)
ஆறாவதாக உள்ளது தத்தாத்ரேயர் அவதாரமாகும். அத்ரி முனிவருக்கும், அனுசுயைக்கும் பிள்ளையாகத் தோன்றிய தத்தாத்ரேயர் அலாகா, பிரகலாதா ஆகியோருக்கு உண்மையான பரம்பொருள் யாது என்பதை அறியும் அறிவைப் புகட்டினார். ஏழாவது அவதாரம் யக்ஞன் என்ற பெயருடன் தோன்றியதாகும். சுவயம்புமனு மன்வந்திரத்தில் ருச்சி, அருதி என்பவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்த அவதாரம். முதல் மன்வந்திரத்தில் யக்ஞன், இந்திரன் எனப் பெயர் கொண்டிருந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 2 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அவதாரம், பாகவத, என்றும், விஷ்ணு, பாகவதம், பேசுகிறது, தேவி, அவதாரங்கள்