தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்
1905 ஆம் ஆண்டு வங்கப்பிரிவினை தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை முன்னின்று நடத்திபவர்களில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1907 மே திங்களில் பாரதியார் காங்கிரஸ் இயக்கத்தின் தீவிரவாத தலைவர்களில் ஒருவரான பிபின் சந்திரபால் என்பவரை சென்னை நகருக்கு வரவழைத்து உரை நிகழ்த்தச் செய்தார்.
 |
சுப்ரமணியபாரதி |
1907 ஆம் ஆண்டு சூரத் பிளவுக்குப் பிறகு வ.உ.சி.யும் மற்ற தேசியவாதிகளும் இணைந்து சென்னை ஜன சங்கத்தை தோற்றுவித்தனர். சுப்ரமணியபாரதி சிறந்த முற்போக்குவாதியாகவும், பழமைவாதத்தை சாடுபவராகவும், புரட்சிகரமான அரசியல் சமூக சிந்தனைகளைக் கொண்டவராகவும் விளங்கினார். அவர் 'இந்தியா' என்ற தமிழ் வார இதழின் ஆசிரியராகவும் இருந்தார். 'சுதேச கீதங்கள்' என்றழைக்கப்படும் தேசிய பாடல்களை அவர் எழுதினார்.
 |
சுப்ரமணிய சிவா |
வ.உ. சிதம்பரம் பிள்ளை ஒரு வழக்குரைஞராக தமது வாழ்க்கையைத் தொடங்கினார். 1905ல் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். பால கங்காதர திலகரின் சீடராக அவர் திகழ்ந்தார். 1908ல் தூத்துக்குடியில் நடைபெற்ற பவழ ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார்.
 |
வ.உ.சிதம்பரம்பிள்ளை |
1906ல் தூத்துக்குடியில் சுதேசி நீராவிக்கப்பல் கழகத்தை நிறுவினர். எனவே "கப்பலோட்டிய தமிழன்" என்று அவர் அழைக்கப்பட்டார். சுதேசி நீராவிக்கப்பல் கழகத்திற்கும் பிரிட்டிஷ் இந்திய நீராவிக்கப்பல் கழகத்திற்குமிடையே கடுமையான போட்டி நிலவியது. பிரிட்டிஷ் இந்திய நீராவிக்கப்பல் கழகத்தை புறக்கணிக்குமாறு வ.உ.சி. பிரச்சாரம் செய்தார். இதனால் 1908 மார்ச் திங்களில் திருநெல்வேலி கலகம் நடைபெற்றது. இவருக்கு உறுதுணையாக செயல்பட்டவர் சுப்ரமணிய சிவா. இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டனர். ஆறு ஆண்டு காலம் கடும் சிறைவாசத்தை இருவரும் அனுபவித்தனர். சிறைக்குள் அவர்கள் கடுமையான தண்டனைகளுக்குட்படுத்தப்பட்டனர். செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளானதால் வ.உ.சி. "செக்கிழுத்தச் செம்மல்" என்று அழைக்கப்பட்டார்.
தேசியத் தலைவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டது, சிறைக்குள் சித்ரவதைகளுக்குட் படுத்தப்பட்டது, சுதேசி கப்பல் கழகத்தின் சிதைவு போன்ற காரணங்களால் சினந்தெழுந்த சிலர் பாரதமாதா சங்கம் என்ற புரட்சி அமைப்பை ஏற்படுத்தினர். இதில், நீலகண்ட பிரம்மச்சாரியின் பங்கு மகத்தானதாகும். இச்சங்கத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் 1911 ஜூன் மாதத்தில் ராபர்ட் வில்லியம் டி. ஆஷ் என்ற வன்செயலுக்கு பெயர்பெற்ற பிரிட்டிஷ் அதிகாரியை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றார்.