வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 93
யோடு கூடிய தனித்து நிற்கும் சமையல் அறை; காற்றோட்டமான படுக்கையறை; அதை அடுத்து சாமான்கள் வைக்கும் அறை; முற்றத்தின் மத்தியிலே செங்கற்களால் கட்டப்பட்ட கிணறு; குளிக்குமிடம் முதலிய வசதிகளோடு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடு சாதாரண வியாபாரியின் வீடே. இரண்டு அல்லது மூன்று மாடிகள் வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. அந்த அசுர நகரத்தின் அழகை நான் எப்படி வருணிக்க முடியும்? அதற்கு உவமை இல்லாத போது தேவலோகம் என்று தானே சொல்ல முடியும்?”
“கிழக்கேயும் அசுரர்களுடைய நகரங்கள் இருக்கின்றனவாம். ஆனால் எங்களுடைய மத்ரப் பிரதேசத்துக்கும் அதற்கும் வெகு தூரம்.”
“நான் நேரே பார்த்திருக்கிறேன் நண்பா! இப்படிப்பட்ட நகரங்களை அமைத்திருக்கிறார்களே, அவர்கள் ஆரியர்களாகிய நம்மைப் பார்க்கிலும் பெரிய நிபுணர்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சமுத்திரத்தைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“சமுத்திரம் என்ற பெயரைக் கேட்டிருக்கிறேன்.”
“பெயரையோ அல்லது வர்ணனைகளையோ கேட்பதினால் அதைச் சரியாக உணர்ந்து கொள்ள முடியாது. சமுத்திரத்தின் கரையிலே நின்று கொண்டு பார்த்தால், ஏதோ ஓரளவு புரிந்து கொள்ளமுடியும். எதிரிலே நீலநிறத் தண்ணீரும் நீலநிற ஆகாயமும் ஒன்றாகக் கலந்திருப்பதைக் காண்போம்.”
“நண்ப! தண்ணீர் ஆகாயத்தோடு கலந்திருக்குமா?”
“ஆம். கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே தண்ணீர் மயம். முடிவிலே அது ஆகாயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு நிறமும் ஒன்றாகக் காட்சியளிக்கிறது. இந்த எல்லையற்ற சமுத்திரத்திலே, அசுரர்கள் தங்கள் பெரிய படகுகளை நிர்ப்பயமாகச் செலுத்துகிறார்கள். மாதக் கணக்கிலும் வருடக்கணக்கிலும் பிரயாணம் செய்து கடலிலிருந்து விதவிதமான ரத்தினங்களைக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய தைரியத்திற்கும் திறமைக்கும் இது ஓர் எடுத்துக்காட்டு. இன்னொரு அற்புதம் நீ கேள்விப்பட்டிருக்கவே மாட்டாய். அசுரர்கள் வாய் திறந்து பேசாமலே சம்பாஷிக்கிறார்கள்!”
“வாய் திறந்து பேசாமலே சம்பாஷிக்கிறார்களா?”
“ஆம். வாய் திற்து பேசாமலே அவர்களால் சம்பாஷிக்க முடிகிறது. மண், கல் அல்லது தோல் முதலிய ஏதாவது ஒன்றில் ஓர் அசுரன் சில அடையாளங்களைக் கிழித்து மற்றவனிடம் கொடுப்பான்; அடுத்தவன் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்வான். நாம் இரண்டு மணி நேரம் பேசியும் விளங்க வைக்கமுடியாத ஒரு விஷயத்தை அவன் இரண்டு மூன்று கோடுகளை இழுத்து விளங்க வைத்துவிடுகிறான். இந்த விஷயத்தை ஆரியர்களாகிய நாம் இதுவரை அறியவேமாட்டோம். இப்பொழுதுதான் நம்முடைய ஆரியர்கள் இந்தக் கோடுகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் வருஷக் கணக்காக முயன்றும் அவர்கள் இன்னும் பூரணமாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை.”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டு, பேசாமலே, அல்லது, நாம் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்