வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 47
நனைத்துவிட்டுக் கொடுத்தாள். பெரியோர்களின் இந்தக் காதல் விளையாட்டுக்களைப் பார்த்துக் கொண்டிருக்க மனமில்லாத அமிர்தாஸ்வன் சட்டென்று எழுந்து தன் வயதையொத்த-பாலர் பாலிகைகளுடன் விளையாட ஓடி விட்டான். போதை வெறியால் கிரிச்ராஸ்வனுடைய கண்கள் கிறங்கிச் சுழல்கின்றன; தலையோ தள்ளாடிச் சாய்கிறது. இந்நிலையில் அவன் “சோமா! நான் பாட்டுப் பாடட்டுமா?” என்றான்.
“நன்றாகப் பாடு. உன்னைப் போன்ற பாடகன் இந்த குரு ஜனங்களிலேயே கிடையாதே. “ந.ன்...றா...க..ச்...சொ...ன்...னா..ய்...எ..ன்....னை..ப்...போ..ன்...ற... பா...ட...க..ன்...இ..ந்...த..ச்...ச...மூ...க...த்...தி...லே...யே...கி...டை...யா...து, ச...ரி...கே..ள்.” பாடுகிறான்.
“ம...து...வே...அ...மி..ர்...த...மே” இதைக் கேட்ட சோமா,
“போதும், போதும், நிறுத்திக்கொள்; இதோ பார்; உன் சங்கீதத்தைக் கேட்டதும் பட்சிகளும், மிருகங்களும், அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றன” என்றாள்.
“சரி, உத்தரவு!”
இம்மாதிரி குடித்துக் களியாட்டம் ஆடும் நேரம் இதுவல்ல. இதற்குகந்தது மாலைப்பொழுதுக்குப் பிறகுதான். ஆனால், கிரிச்ராஸ்வனுக்கு ஏதாவது ‘சாக்கு’ வேண்டியிருந்தது. போதை தலைக்கேறி அவன் தன்னுடைய சுய புத்தியை இழந்து விட்டான். திருஜ்ராஸ்வனும், சோமாவும் குடிப்பதை நிறுத்திவிட்டு நதியின் கரைக்குச் சென்று அங்கு ஒரு பாறையின் மீது அமர்ந்தனர். மலைகளின் நடுவே ஓடி வரும் நதியானது, இந்த இடத்தில் சமதளத்தில் ஓடுகிறது. ஆனால், அங்கே பரவிக் கிடக்கும் சிறியனவும் பெரியனவுமான கற்களிலே மோதிச் செல்வதால் பேரிரைச்சலை உண்டாக்குகிறது. ஆங்காங்கு மீன்கள் கற்களின் மறைவில் நீந்திக்கொண்டு, இங்குமங்குமாகத் திரிந்தன. நதிக்கரையின் அருகே விசாலமான தேவதாரு முதலிய பெரிய பெரிய விருட்சங்கள் நிற்கின்றன. பட்சிகளின் மதுர கானமும் காற்றினூடே வீசி வரும் புஷ்பங்களின் நறுமணமும் ஏனைய இயற்கை அழகும் யாருடைய இதயத்தையும் பரவசப்படுத்தாமல் இரா. வனப்புமிக்க இவ்விடத்தில் அமர்ந்திருக்கும் இவர்களிருவரும் - சோமாவும் திருஜ்ராஸ்வனும் - தங்களது பழைய காதலைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றனர். தனிமையில் அமர்ந்து, இந்த இயற்கையின் வனப்பைப் பருகிக் கொண்டிருக்கும் இந்த மனித ஜோடியின் இதயத்திலே, இவர்களுடைய பழைய கால நிகழ்ச்சிகள் ஞாபகத்துக்கு வருவது இயற்கையல்லவா?
அப்பொழுது சோமாவுக்குப் பதினாறு வயது. தன் தந்தையின் வீட்டிலே வால்ஹீகாவில் இருந்தாள்; வசந்த உற்சவத்துக்காக, திருஜ்ராஸ்வனும் அவள் வீட்டிற்கு வந்திருந்தான். சோமா, திருஜ்ராஸ்வனுடைய மாமன் மகள். அந்தப் பருவத்துக்குத் தக்கபடி சோமாவின் காதலர்கள் கூட்டத்தில் திருஜ்ராஸ்வனும் ஒருவன். இவளுடைய மோகத்தில் மயங்கிய வாலிபர்களுக்கிடையில் போட்டி பலமாயிருந்தது. ஆனால், இந்தப் போட்டியில்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்த, திருஜ்ராஸ்வனும், ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்