வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 28
கொண்டு இருக்கும் யுவனின் மீது அவள் பார்வை விழுந்தது. அவனுக்கும் இவளைப் போலவே அழகிய மிருதுவான கூந்தல். ஆனால் திவா தன்னுடைய கூந்தலோடு அதை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. ஏன்? அது அவளுக்கு மிக்க அழகாகத் தென்பட்டதுதான் காரணம். அவனுடைய முகத்திற்கு எடுப்பாய் அமைந்துள்ள மீசையின் அழகையும், அதற்குமேலுள்ள எடுப்பான மூக்கையும், அகன்ற நெற்றியின் காந்தியையும் அவளுடைய கண்கள் அமைதியாகப் பருகிக் கொண்டிருக்கின்றன. அடுத்து அவ்விழிகள் அவனது புஜங்களைத் தொட்டதில் என்ன ஆச்சரியம்! அப்பொழுது அவளுக்கு முந்திய சம்பவம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. முன்னொரு நாள், நீண்ட கோரத்தந்தங்களையுடைய முரட்டுப் பன்றியின் விலா எலும்பை ஒரு கல்லால் செய்த கத்தியின் உதவியால் ‘நரநர’ வென்று ஒடித்த இந்த உருண்டு திரண்ட புஜங்கள், இன்று பூக்களைக் கொய்யும்போது எவ்வளவு மிருதுவாய்த் தெரிகின்றன! ஆயினும் ஓடி ஓடித் திரளும் சதைகளும், சதைகள் திரளும் போது நரம்புகள் நிமிர்வதும் அந்தப் புஜங்களின் பராக்கிரமத்தை இப்பொழுதும் வெளிக்குத் தெரிவிப்பன போல் காட்சியளிக்கின்றன. ஓடோடியும் சென்று அந்தப் புஜங்களை முத்தமிடலாமா என்று நினைத்தது அவள் நெஞ்சம். அடுத்து அவனுடைய
தொடைகள் திவாவின் கண்களுக்கு இலக்காயின. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அந்தச் சதைகள் திரண்டு ஆடுவதைப் பாருங்கள். அவைகள் திவாவிற்கு ஒரு அபூர்வப் பொருளாய்த் தோன்றுவதில் ஆச்சரியமில்லையல்லவா? சூரஷ்ரவன் பல தடவை அவளுடைய காதலைப் பெறுவதற்கு முனைந்திருக்கிறான்; வாயினாலன்று; சைகையால். நடனத்தில் தன்னுடைய சாதுர்யத்தையெல்லாம் காட்டி, அவளைச் சந்தோஷப்படுத்தி விடலாமென நினைத்தான். ஆனால், அப்பொழுதெல்லாம் அவள், அவளுடை சம்பூரண மேனி, பரிவாரத்தின் இதர வாலிபர்களுக்கே உரிமைப் பொருளாயிருந்தது. திவாவின் சிவந்த உதடுகளை ஒட்டி முத்தமிடுவது அந்த யுவர்களின் உதடுகள்தான். நடனமாடும்போது அவளுடைய நீண்ட அழகிய கைகளோடு பின்னிக் கிடப்பது அவர்களுடைய கைகள்தான் அவளுடைய நீல விழிகளோடு படிந்து கிடப்பது அவர்களுடைய கண்களே தான். அவளுடைய மார்பையும் தோளையும் தழுவி ஆலிங்கனம் செய்வது அந்த வாலிபர்களின் மார்பும் தோள்களும்தான். அப்பொழுதெல்லாம், பாவம், சூரஸ்ரவனுக்கு, திவாவின் ஒரு முத்தம், ஓர் ஆலிங்கனம், ஏன், அவளுடைய காதல் பார்வையுங்கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இன்று திவாவின் இதயத்தில்-?
தன்னுடைய உள்ளங்கைகளில் புஷ்பங்களை நிரப்பிக் கொண்ட சூரன், திவாவை நோக்கி வந்தான். திவாவின் மிதக்கும் விழிகள், அவனுடைய திறந்து கிடக்கும் அவயவங்களையும், அவற்றின் பூரணப் பொலிவையும் அப்படியே பருகிக் கொண்டிருக்கின்றன. அவனுடைய அகன்ற மார்பும் அதற்கு
உள்ளடங்கிய வயிறும் அவளை ஆகர்ஷிப்பதில் ஆச்சரியமில்லையே! ஆனால் இவற்றைப் பார்த்த அவளுடைய இதயத்தில் கொஞ்சம் துக்கமும் உண்டாயிற்று. இதுவரை இந்தக் கட்டழகன் மீது கவனம் செலுத்தாதிருந்து விட்டோமே என்று நினைத்தது அவளுடைய நெஞ்சம். உண்மையில் குற்றம் அவளுடையதல்ல. சூரனுடைய வாய்க்குப் பூட்டப்பட்டிருந்த அவனுடைய கூச்சமும் நாணமுமே குற்றவாளிகள். தட்டினால்தானே கதவு திறக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவளுடைய, திவாவின், அவனுடைய, ஆனால், தன்னுடைய, அவள் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்