முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 251
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 251
உளறினாலும் அரசனின் ஆணையல்லவா? ராணியரும் மற்ற பெண்களும் தங்கள் ஆடையாபரணங்களையெல்லாம் கழற்றி விட்டனர். அவர்கள் கூந்தலை அள்ளி முடிந்திருப்பதும் அரசனுக்குப் பிடிக்கவில்லை. அதையும் அவிழ்த்துவிடும்படி சொன்னான். பரந்த கரிய கூந்தல் இடுப்பின் கீழே விழுந்து உடம்பின் பெரும் பகுதியையும் மறைத்துக் கொண்டது. வெறி கொண்ட அரசன் தானும் ஆடையாபரணங்களைக் களைந்து விட்டு அவர்களுடன் ஆடத் தொடங்கினான். தொப்பை வயிறும், துருத்திய சதைகளும், கங்கையும் யமுனையும் கலந்தது போன்ற மீசையும் சதை தொங்கும் முகமும் மடிந்து தொங்கும் மார்புகளும் கொண்ட அவனுடைய விகார உருவத்தைப் பார்த்த எந்த யுவதியும் வெறுக்கவே செய்வாள். ஆனால் இங்கு கூடியுள்ள அழகிகளின் உடலும், உயிரும் இந்தக்
கிழவன் கையிலல்லவா இருக்கிறது. காமத்தைத் தூண்டும் கீதங்களோடு நாட்டியம் நடந்து கொண்டிருந்தது. ராணியர்களுக்கும், வேலைக்கார யுவதிகளுக்கும் இடையிலே, தனித்தாடும் தனது தொந்தியோடு அரசனும் ஆடிக்கொண்டிருந்தான்.
2
“வரவேண்டும் கவிச்சக்கரவர்த்தி” என்று கூறி ஒரு நடு வயது மனிதனை அரசன் வரவேற்றான். அவன் வந்து அமர்ந்ததும், மரியாதையோடு வெற்றிலைத் தட்டை அவன் பக்கம் தள்ளினான். இந்தக் கவிச் சக்கரவர்த்திக்கு வயது ஐம்பது இருக்கலாம். அவனுடைய சிவந்த கம்பீரமான முகத்திலே இன்னும் வசந்தத்தின் நிழல் இருந்தது. அவனுடைய மீசையினின்றும் கறுப்பு மாறவில்லை, அவனுடைய உடம்பிலே ஒரு வெள்ளை வேட்டியும், வெள்ளைப் போர்வையும் தரித்திருந்தான். கழுத்திலே அழகிய ருத்திராட்ச மாலை. சிரசிலே விபூதியின் முப்பட்டை. கவி, வாசனையூட்டிய வெற்றிலைச் சுருள்களை வாயிலே வைத்துக் கொண்டு,
“தேவ! யாத்திரை சுகமாக முடிந்ததல்லவா? உடல் நலந்தானே? இரவில் நிம்மதியாகத் தூக்கம் வருகிறதா? என்று கேட்டான்.
“இப்பொழுது ஆண்மை குறைந்து கொண்டே போகிறது. கவிபுங்கவா!”
“மகாராஜா! தாங்கள் கவி ஸ்ரீ ஹர்ஷனை நன்றாக அவமானப்படுத்துகிறீர்கள்.”
“புங்கவ என்ற சொல் அவமானகரமானதல்ல; புகழ்ச்சிகரமானது.”
“புங்கவ என்ற காளைமாட்டைச் சொல்வது அரசே!”
“எனக்குத் தெரியும், அதோடுகூட உயர்ந்தவர்களையும் சொல்வது.”
“நான் இதைக் காளைமாடு என்ற கருத்திலேயே உபயோகித்தேன்.”
“ஆனால், நான் உயர்ந்தவர் என்ற கருத்திலே கூறினேன், கவி நண்ப; உன்னைப் போன்ற கோவணதாரிகளைக் கேலி செய்யாமல், வேறு யாரோடு கேலி செய்வது!”
“தர்பாரிலே கூடாது, அரசே!”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 249 | 250 | 251 | 252 | 253 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்ற, அவனுடைய - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்