முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 110
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 110
முதலியவைகளைத் துண்டு துண்டாகப் பிரித்து, பொழுது அஸ்தமிப்பதற்கு முன்னமேயே பெரிய பெரிய பாத்திரங்களில் போட்டு, அடுப்பேற்றியிருந்தனர். பாக்கி மாமிசத் துண்டுகளை உப்பைத் தடவி நெருப்பிலே சுட்டுக் கொண்டிருந்தனர். அந்த வீட்டுக்குப் பக்கத்திலே சுத்தம் செய்யப்பட்ட மைதானமும், அதற்குச் சமீபமாக ஒரு சிறிய குளமும் இருந்தன. வேலையிலிருந்து திரும்பிய ஆண்களும் பெண்களும் அந்தக் குளத்திற்குச் சென்று தங்கள் கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டனர். குளிக்க விரும்பியவர்கள் குளித்தார்கள். இருட்டடைந்ததும் யாவரும் வரிசை வரிசையாக உட்கார்ந்தனர். அவர்களுக்கு மாமிசம், ரொட்டி, மது முதலியவைகள் பரிமாறப்பட்டன. சுதாஸினுடைய கூச்சத்தைத் தெரிந்த அபாலா, அவனைத் தன் அருகே உட்காரும்படி கேட்டுக் கொண்டாள். அவனுடைய கூச்சத்தைப் பற்றிய கவலையை விட வெளியேறிச் சென்று விட்ட தன் சகோதரனைப் பற்றிய ஞாபகமே அவனைப் பக்கத்திலே உட்கார வைப்பதற்கு முக்கியக் காரணம். உணவு முடிந்ததும் நாட்டியம் ஆரம்பமாயிற்று; அந்த நடனத்தில் சுதாஸ் அன்று கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும், பிற்காலத்தில் அவன் எல்லோருக்கும் பிரியமான பாடகனாகவும், சிறந்த நாட்டியக்காரனாகவும் ஆகி விட்டான்.
வயலில் கதிர் அறுப்பு, அடிப்பு, தான்யத்தைப் பிரித்தல் முதலிய வேலைகள் ஒன்றரை மாதம் வரை நடைபெற்றன. ஆனால் இங்கு வந்த
இரண்டே வாரங்களில் சுதாஸ் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி செழுமையடைந்து விட்டான். அவனுடைய பெரிய நீலக்கண்கள் பிரகாசமடைந்திருந்தன. கன்னங்கள் சிவந்திருந்தன. நரம்புகளும் எலும்புகளும் சதைக் கோளங்களுக்குள் மறைந்துவிட்டன. வந்த ஒரு வாரத்தில் ஜேதா அவனுக்குப் புதிய ஆடைகளும் கொடுத்திருந்தான்.
ஜேதா, அபாலா, சுதாஸ், இன்னும் இரண்டொரு வேலையாட்கள் தவிர, ஏனையோர் யாவரும் தங்கள் தங்கள் கூலிக்காகத் தானியத்தைப் பெற்றுக்கொண்டு அவரவர் வீட்டுக்குப் போய்விட்டனர். இவர்களுக்கு நிலங்கள் குறைவு. ஆகையால் தங்கள் சொந்தக் கதிர் அறுப்பு, அடிப்பு வேலைகளைக் காலா காலத்தில் முடித்துவிட்டு, இங்கு ஜேதாவின் நிலங்களில் வேலை செய்யவந்தார்கள். ஜேதா, அபாலா இவர்களின் அன்பிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட சுதாஸ் மெது மெதுவாக அவர்களுடன் நெருங்கிப் பழகிவிட்டான். ஏன்? அவர்களுடைய குடும்ப அங்கத்தினர்களில் இவனும் ஒருவனாகவே ஆகிவிட்டான் என்று சொல்ல வேண்டும். ஒருநாள் மாலை வேளையில் யாவரும் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபொழுது, கிழக்குப் பகுதியைப் பற்றிய பேச்சை ஜேதா ஆரம்பித்தான்; அபாலாவும் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
“சுதா, நான் கிழக்கே வெகு தூரம் சென்றது கிடையாது. ஆனால் பாஞ்சாலபுரத்தை (அகிச்சத்திரம்) நான் பார்த்திருக்கிறேன். குளிர்காலத்தில் என்னுடைய குதிரைகளை விற்பதற்காக அங்கே சென்றிருந்தேன்.”
“பாஞ்சாலம் (ரஹில்கண்டு) உங்களுக்கு எப்படி இருந்தது?”
“தேசத்தில் ஒன்றும் குற்றமில்லை. மத்ரர்களைப் போல அந்த ஜனங்களும் ஆரோக்கியமுள்ளவர்களாகவும், நல்லவர்களாகவும் இருக்கிறார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 108 | 109 | 110 | 111 | 112 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுதாஸ், தங்கள், ஜேதா, பற்றிய, யாவரும், அந்த, பெரிய, அபாலா - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்