சேதுபதி மன்னர் வரலாறு - ரகுநாத கிழவன் சேதுபதி

மதுரை தஞ்சை மன்னர்களது படையெடுப்பு
இந்தப் புதிய பிரதானி சேதுபதி மன்னருக்குத் தக்க உதவிகளைச் செய்தவற்குப் பதிலாக மன்னரது சொந்த நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக நோட்டமிட்டு வந்தார். நாளடைவில் சேதுபதி மன்னரைத் திடீரெனத் தாக்கிக் கைது செய்து திருச்சிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார். இதனையறிந்த சேதுபதி மன்னர் அந்தப் பிரதானி சிறிதும் சந்தேகப் படாத முறையில் அவரைக் கொன்றழித்துவிடும்படி செய்தார். சொக்கநாத நாயக்கர் இவ்விதம் சேதுபதி மன்னரை ஒழித்துக்கட்டத் தீட்டிய இந்தச் சதித் திட்டம் நிறைவேறவில்லை. ஆனால் அந்த மன்னரையடுத்து மதுரையின் அரசியாக பொறுப்பேற்ற இராணி மங்கம்மாள் எவ்வித காரணமும் இன்றி சேதுநாட்டின் மீது கி.பி. 1702ல் படையெடுப்பை மேற்கொண்டார். இந்த படையெடுப்பை எதிர் கொண்ட சேதுபதி மன்னர் மதுரைப் படைகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கினார். திருமலை நாயக்கர் மன்னர் காலம் முதல் மதுரை நாயக்க மன்னரிடம் மறைந்திருந்த பொறாமையும், பகைமையும் அறிவதற்கு இந்தப் போர் இறுதிக் காலமாக அமைந்தது.
இதனைப் போன்றே தஞ்சை மராட்டிய மன்னரும் சேதுபதி மன்னரிடம் நண்பராக நடித்து வந்தவர். கி.பி. 1709 ஆகஸ்டு மாதம் திடீரென ஏற்பட்ட புயல்மழை வெள்ளத்தினால் சேதுநாட்டுக் குடிமக்கள் சொல்லொனாத துன்பங்களினால் அல்லல் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சேதுநாட்டின் வடபகுதி வழியாகச் சேதுநாட்டை ஆக்கிரமிக்கப் பெரும் படை ஒன்றை அனுப்பினார் தஞ்சை மன்னர். அந்தப் படையெடுப்பையும் சேதுபதி மன்னர் நசுக்கி அழித்தார். இவ்விதம் எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய சேதுபதி மன்னருக்கு உறுதுணையாக இருந்தது வள்ளல் சீதக்காதி மரைக்காயர் ஆவார். ஒருபுறம் தெய்வீகப் பணிகளும், இன்னொரு புறம் தமிழ் வளர்ச்சிப் பணிகளையும் தொடர்ந்த சேதுபதி மன்னர் தமது நாட்டில் வேளாண்மையும், வணிகமும் செழித்து வளருவதற்கு ஆவன செய்த காரணத்தினால் மக்களது பொருளாதார வசதியைக் கொண்டு எதிரிகளை எளிதாகச் சமாளித்து வெற்றிபெற முடிந்தது.
வள்ளல் சீதக்காதியின் தோழமை
மன்னரது சாதனைகளுக்கு மூலபலமாக விளங்கியவர் மன்னரது நண்பரும் வணிக வேந்தருமான கீழக்கரை சீதக்காதி மரைக்காயரே ஆவார். வள்ளுவரது வாக்கின்படி சீதக்காதி மரைக்காயரை நட்பு பாராட்டித் தமது உடன்பிறப்பிலும் மேலாக மன்னர் மதித்து நடந்து வந்தார். கீழ்த்திசை நாடுகள் பலவற்றுக்கும் வணிகம் நிமித்தமாகச் சென்றுவந்த சீதக்காதி மரைக்காயரது அனுபவ முதிர்ச்சியும் நிர்வாகத் திறனும் சேதுபதி மன்னரது சிறந்த ஆட்சிக்குப் பயன்பட்டன என்றால் அது மிகையாகாது.
முதலாவது சடைக்கன் சேதுபதி முதல் சேதுநாட்டின் தலைநகராகப் போகலூர் என்ற கிராமம் இருந்து வந்ததை மாற்றி இராமநாதபுரம் கோட்டையைச் சேது மன்னர்களது தலைநகராக விளங்கும்படி செய்தது சீதக்காதி மரைக்காயர் தான். மேலும் அதுவரை மண்கோட்டையாக இருந்து வந்த இராமநாதபுரம் கோட்டையை மிகச்சிறந்த கற்கோட்டையாக மாற்றியதும், மன்னருக்கு எனக் கோட்டைக்குள் கொலு மண்டபம் ஒன்றையும் அமைத்து அரண்மனை நிர்வாக நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தவரும் சீதக்காதி மரைக்காயரே ஆவார். மேலும் இவரது வணிகக்கப்பல்கள் கீழ்த்திசை நாடுகளான இலங்கை, வங்கம், கடாரம், மலாக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்று பலவகையான வணிகப் பொருள்களைச் சேதுபதிச் சீமைக்குக் கொண்டு வந்து சேர்த்ததுடன் பாண்டியநாட்டுப் முத்துக்கல், சோழநாட்டு தானியங்கள். கைத்தறி ஆடைகள், கேரளத்து மிளகு, இலங்கை நாட்டுக் கொட்டைப்பாக்கு ஆகியவைகளைப் பெருமளவில் அந்த நாடுகளுக் கெல்லாம் அவரது கப்பல்கள் எடுத்துச் சென்றன. சேதுநாட்டின் முக்கிய துறைமுகங்களாக கீழ்க்கரை, பாம்பன், தேவிபட்டினம், தொண்டியும் செழித்து விளங்கின. இத்தகைய வியாபாரச் செழுமையில் ஈடுபட்டிருந்த பல ஊர்களைச் சேர்ந்த முஸ்லீம் வணிகர்கள் சேதுமன்னரது குடிகளாக இந்த நாட்டில் நிலைத்து வாழ்ந்தனர். இவர்களைப் போன்றே டச்சுக்கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரும், ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரும், சேது நாட்டில் அவர்களுக்குத் தேவையான கைத்தறிகள், தானியங்கள், மிளகு ஆகிய பொருள்களைக் கொள்முதல் செய்து வந்ததால் அவர்களது நாணயங்களும் சேது நாட்டின் செலாவணியில் இடம் பெற்றன.
இவ்விதம் சேது நாட்டின் அரசியல் வலிமையையும், வணிகச் செழுமையையும், சமுதாய அமைதியையும் மிக நீண்ட ஆட்சிக்காலமாக முப்பத்திரண்டு ஆண்டுகள் நீடித்த ரெகுநாத கிழவன் சேதுபதி ஆட்சி கி.பி. 1710இல் அவரது மரணத்துடன் முடிவு பெற்றது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரகுநாத கிழவன் சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி, மன்னர், சீதக்காதி, சேதுநாட்டின், சேது, மன்னரது, நாட்டில், இவ்விதம், தஞ்சை, ஆவார்

