சேதுபதி மன்னர் வரலாறு - ரகுநாத கிழவன் சேதுபதி
ரகுநாத கிழவன் சேதுபதி
மன்னர் திருமலை சேதுபதியை அடுத்துச் சேதுநாட்டின் மன்னர் களான இராஜ சூரிய தேவரும், அதான ரெகுநாத சேதுபதியும் சிறிது காலத்திற்குள் காலமாகி விட்டதால் இந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கிழவன் என்பவர் கி.பி. 1678ல் ரகுநாத கிழவன் சேதுபதி என முடிசூட்டப் பெற்றார். திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் போன்றே இவரது ஆட்சிக்காலமும் நீடித்தாலும் அவரது சாதனைகளை விஞ்சிச் சாதனைகள் படைக்க இயலவில்லை காரணம் இவருக்கு உட்பகை மிகுதியாகத் தோன்றி நாட்டின் பல பகுதிகளிலும் பல குழப்பங்களை ஏற்படுத்தின. என்றாலும் அவை அனைத்தையும் தமது அறிவார்ந்த ஆற்றலினாலும், போர்த் திறமையாலும் நசுக்கி அழித்தார். இவருக்கு மிகுந்த தொல்லை கொடுத்தவர் சேதுபதி அரச குடும்பத்தினரும் செருவத்தி பாளையத்தின் தலைவருமான திரையத் தேவர் ஆவார்.
கள்ளர் சீமை என்று வழங்கிய சேது நாட்டின் வட பகுதியைத் திருமலை சேதுபதி மன்னர் தமது நாட்டின் ஒரு பகுதியாக அமைத்தார் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராகக் குளத்துர் ரெகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார் என, இராமநாதபுரம் மேனுவலில் வரையப் பெற்றுள்ளது.
இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தார். தஞ்சைப் பேரரசின் இராஜ இராஜ சோழனது அன்புக் கிழத்தியான உலக மகா தேவியைப் போன்று இராணியார் சில அறக் கொடைகளை வழங்கியிருப்பதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இராமேஸ்வரம் திருக்கோயிலில் கோயில் உள்துறைக் கட்டளைக்கு திரு உத்திரகோச மங்கையை அடுத்த மேலச் சீத்தை என்ற கிராமத்தை கி.பி. 1693ல் இந்த இராணியார் வழங்கியதைச் செப்பேட்டு வாசகம் ஒன்று தெரிவிக்கின்றது. அடுத்து கி.பி. 1709ல் தனுஷ்கோடியில் அந்தணர்களது அக்கிரஹாரம் அமைவதற்கு தேவகோட்டைப் பகுதி களத்தூர் எனற கிராமத்தை இவர் தானம் வழங்கியது இன்னொரு செப்பேட்டின் மூலம் தெரியவருகிறது. இவைகளைப் போன்றே சேதுப் பயணிகளது பயன்பாட்டிற்கென எம்மண்டலமுங் கொண்டான் என்ற கிராமத்தினைத் தானமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த அன்ன சத்திரம் இன்றும் இராமநாதபுரம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி என்ற இடத்தில் செயலற்று இருந்து வருகிறது. அந்தக் கிராமம் இன்று என்மனம் கொண்டான் என்ற பெயரில் வழக்கில் உள்ளது.
திருமெய்யம் பாளையக்காரன் சிவந்து எழுந்த பல்லவராயர் என்பவர், சேது நாட்டின் வடக்கில் அமைந்திருந்த காவல் அரணாகிய திருமெய்யம் கோட்டையின் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழ்நிலையில் சிவந்து எழுந்த பல்லவராயர் தஞ்சை மராட்டியருடன் இரகசியமான தொடர்புகளைக் கொண்டு இருந்தார். இதனையறிந்த சேது மன்னர் விசாரணைக்காக அவரைத் தமது அரசவைக்கு அழைத்த பொழுது அவர் மறுத்ததால் அவரைக் கொன்று ஒழித்துவிட்டு அவரது பணிக்கு ரகுநாத ராய தொண்டைமான் என்ற கள்ளர் சீமைத் தலைவரை நியமனம் செய்தார். இவரது உடன் பிறந்தவரான காதலி நாச்சியார் என்பவரைச் சேது மன்னர் ஏற்கனவே தமது மனைவியாகக் கொண்டிருந்தார். இதனால் மன்னரது நம்பிக்கைக்கு உரியவராக இரகுநாத தொண்டைமான் கருதப்பட்டார். என்றாலும் மன்னரது மைத்துனர் என்ற உறவையும் மீறித் திருமெய்யம் உள்ளிட்ட புதிய புதுக்கோட்டை தன்னரசினை இவர் ஏற்படுத்தினார்[1]. இதனால் மன்னர் மிகுந்த சீற்றம் அடைந்த பொழுதிலும் தொண்டை மானைத் தண்டிக்க முற்படவில்லை. மனைவி காதலி நாச்சியாரின் வேண்டுதல் ஒருபுறமும், தெற்குச் சீமையில் எழுந்த கலவரங்களும் மன்னரை மற்றொரு புறமுமாகத் தடுத்துவிட்டன
சேதுநாட்டில் கிறித்துவ சமயப்பணி
அப்பொழுது மதுரை கிறித்தவ சபையைச் சேர்ந்த ஜான் டி பிரிட்டோ என்ற போர்ச்சுகல் நாட்டுப் பாதிரியார் சேது நாட்டின் வடபகுதியில் மதமாற்றம் செய்ய வந்தபொழுது செருவத்திப் பாளையக்காரரும் அந்த பாதிரியாரிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டார். அன்றைய சூழ்நிலையில் பாண்டிய நாட்டு கிறித்துவ சமயத்தை ஏற்ற ஒவ்வொரு குடிமகனும் போர்ச்சுகல் நாட்டு மன்னரது குடிமகன் என்ற தகுதியைப் பெறும் வாய்ப்பு இருந்தது. இதனால் செருவத்தி பாளையக்காரருக்குப் போர்ச்சுகல் நாட்டு மன்னரது உதவி கிடைத்தால்..' இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்த சேது மன்னர் பிரிட்டோ பாதிரியாரைச் சோழ மண்டலத்திற்கு நாடு கடத்தி உத்தரவிட்டார்.
- ↑ 1. Sathya Natha Ayyar - History of Madurai Nayaks (1928)
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரகுநாத கிழவன் சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், சேது, தமது, நாட்டின், சேதுபதி, கள்ளர், இராமநாதபுரம், மன்னரது, எழுந்த, இதனால், நாட்டு, கிறித்துவ, திருமெய்யம், போர்ச்சுகல், தொண்டைமான், திருமலை, கிழவன், இராஜ, இவரது, ரகுநாத, காதலி