சேதுபதி மன்னர் வரலாறு - தொன்மையும், தோற்றமும்
ஆனால், இவர்கள் கி.பி. 1607 - கி.பி. 1792 வரை வழங்கியுள்ள செப்பேடுகளின்படி இவர்களது பூர்வீக நகரமாக இன்றைய இளையான்குடி வட்டத்தைச் சேர்ந்த விரையாத கண்டன் என்ற ஊர் குறிப்பிடப் படுவதிலிருந்து இவர்களது தொன்மை புலப்படுகிறது. மகாவித்துவான் ரா. ராகவய்யங்கார் எழுதிய செந்தமிழ் இதழ்க் கட்டுரையின்படி இவர்கள் சோழ மண்டலத்திலிருந்து மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் தானைத் தலைவர்களாக இந்தப் பகுதிக்கு வந்தவர்கள் என்பது அறியப்படுகிறது. இதனை மேலும் தெளிவு படுத்தக்கூடிய ஆவணங்கள் இல்லையென்றாலும், இந்தச் சேதுபதி மன்னர்களது செப்பேடுகளில் தொடர்ந்து காணப்படும். "துகலுர் கூற்றத்து குலோத்துங்க சோழ நல்லூர்" என்ற ஊரை ஏற்படுத்தி அங்கேயே நிலைத்திருந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் இன்னொரு சான்று மூன்றாம் குலோத்துங்க சோழனைப் பற்றிய இலக்கியமான 'சங்கர சோழன் உலா' வில் 'தஞ்சைக்கும் கோழிக்கும் தாமப்புகாருக்கும் சேதுக்கும்' என்ற தொடரிலிருந்து 3 ஆம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் ஒரு பகுதியாக சேதுநாடும் இருந்தது என்று தெரிகிறது.
சோழ நாட்டிலிருந்து வந்த இந்த தானைத் தளபதிகள் முதலில் கானாடு என்று வழங்கப்பெறும் திருமெய்யம் பகுதியில் முதலில் நிலைத்து இருந்தனர். அப்பொழுது 12ஆம் நூற்றாண்டில் விஜயரகுநாத முத்துவயிரிய முத்துராமலிங்க சேதுபதி என்பவர் திருமெய்யம் கோட்டையைக் கட்டியதாக வரலாற்றுச் செய்திகள் உள்ளன. அவர்கள் அந்தப் பகுதியில் மிகுதியாக உள்ள மறவர் இன மக்க ளிடையே இரண்டு ஊர்களிலிருந்து சேதுபதி மன்னருக்குத் தங்களது பெண்மக்களை மணம் புரிந்துகொள்வதற்கு சிறை கொடுத்ததாகவும் அதற்காக அந்த இரண்டு ஊர் மக்களும் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் சலுகைகள் வழங்கியதை மேலப்பனையூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன[4].
இந்த மன்னர்கள் கானாட்டில் திருமெய்யம் பகுதியில் முதலில் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் நிலைத்திருந்ததை உறுதிப்படுத்தும் சில சான்றுகள் அண்மையில் கிடைத்துள்ளன. முதலாவதாக, திருமெய்யம் குன்றின் அடிப்பகுதியில் அரண் ஒன்றினை கி.பி. 1120ல் விஜயரகுநாத முத்து வயிரிய முத்து ராமலிங்க சேதுபதி என்பவரும் இந்தக் குன்றின் மேல் பகுதியில் கி.பி. 1195-ல் முத்து ராமலிங்க சேதுபதி என்பவரும் அமைத்தனர் என தமக்குக் கிடைத்துள்ள இரு செப்பேடுகளின் ஆதாரத்தைக் கொண்டு கி.பி. 1882-ல் திருமெய்யம் தாசில்தார் புதுக்கோட்டை தர்பாருக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி உள்ளார்[5].
மேலும் கி.பி. 1909ல் தயாரிக்கப்பட்ட ஸ்டாட்டிஸ்டிகல் அக்கவுண்ட் ஆப் புதுக்கோட்டை என்ற அறிக்கையின்படி தற்பொழுதைய திருமெய்யம் கோட்டையின் கிழக்கு - வடக்குப் பகுதிகளை 20 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட கட்சுவர்களால் இராமநாதபுரம் மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி. 1676 ல் அமைத்தார் என்ற செய்தி காணப்படுகிறது.
பாண்டிய நாட்டில் கி.பி. 11ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை சோழர்களது ஆட்சி தொடர்ந்து வந்ததும் அதனை அடுத்து கி.பி. 1311 முதல் 1378 வரை டில்லி சுல்த்தான்களது ஆட்சியும், அதனைத் தொடர்ந்து விசயநகர மன்னர்களது மகாமண்டலேசுரர்களது நிர்வாகமும் நடைபெற்று வந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சோழர்களது தானைத் தலைவர்களாக இருந்த செம்பி நாட்டு மறவர்கள் தம்மைத் தன்னாட்சி மன்னர்களாக அறிவித்து, ஆட்சியாளர்களாக மாறினர் என்பதுதான் பொருத்தமான வரலாற்று ஊகமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக வானாதிராயர்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வது இங்கு ஏற்புடையதாகும். வாணர்கள் என்றும் பின்னர் வாணாதிராயர்கள் என்றும் வழங்கப்பெற்ற பேராற்றல்மிக்க இனத்தவர்கள் பாண்டியர்கள், சோழர்கள். நாயக்கர்கள் ஆட்சிக் காலங்களில் அவர்களது நிர்வாகத் தலைவராகவும். படைத்தளபதிகளாகவும் இருந்து 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் நிலவிய உறுதியற்ற அரசியல் நிலைமைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அழகர்கோவில், மானாமதுரை போன்ற இடங்களைத் தங்களது தலைமையிடங்களாகச் சொந்தத் தன்னரசுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர், [6]அவர்களைப் போல சோழர்களின் தானைத் தலைவர்களாக இருந்த செம்பிநாட்டு மறவர்கள். அப்பொழுது அவர்களது பொறுப்பில் இருந்த பகுதிக்குத் தங்களை அதிபதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். அவர்களது நாடு பின்னர் சேதுநாடு என்று வழங்கப்பட்டது.
ஆனால் சேதுபதி மன்னர்களது தொன்மையைப் பற்றிக் கூறும்போது இலங்கை சென்று திரும்பிய இராமபிரான் அவர் அமைத்த திருவணையாகிய சேது அணையைக் காத்து வர அவரால் நியமிக்கப்பட்ட மக்கள் தலைவரது வழியினர் என்று சொல்லப்படுகிறது.
சேது + பதி --- சேதுபதி
சேனை + அதிபதி --- சேனாதிபதி
மடம் + அதிபதி --- மடாதிபதி
- ↑ 4. புலவர் சேராக சேதுபதி செப்பேடுகள் (1995) - பக்கங்கள்
- ↑ 5. Pudukkottai Durbar Records R.Dis. No: 9/1882 Quoted by Prof. K.V. Viswanathan in his M.phil., Thesis (1980)
- ↑ 6. தனிப்பாடல் திரட்டு
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொன்மையும், தோற்றமும் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி, திருமெய்யம், பகுதியில், தானைத், குலோத்துங்க, இருந்த, அவர்களது, இரண்டு, முத்து, முதலில், தலைவர்களாக, மன்னர்களது, தொடர்ந்து