சேதுபதி மன்னர் வரலாறு - தொன்மையும், தோற்றமும்
சேதுபதிமன்னர்களது தொன்மையும் தோற்றமும்
பன்னெடுங்காலமாக வடக்கேயுள்ள வேங்கடமலைக்கும், தெற்கேயுள்ள குமரிமுனைக்கும் இடைப்பட்டதாகத் தமிழகம் அமைந் துள்ளது. இதனை 12ஆம் நூற்றாண்டு இலக்கண நன்னுல் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்' என வரையறுத்துள்ளது. இந்த நூற்றாண்டின் மாபெரும் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும்,
'நீலத்திரைகடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு'
எனப் புகழ்ந்துள்ளார்.
இந்தப் பெரு நிலப்பரப்பைச் சங்ககாலந்தொட்டு முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் ஆட்சி செலுத்தி வந்தனர் என்பது வரலாறு. பாண்டிய மன்னர்களது கிழக்கு எல்லையான வங்கக் கடற்கரைப் பகுதி பிற்காலத்தில் மறவர் சீமை அல்லது சேதுநாடு என வழங்கப்பெற்றது. இதிகாசநாயகனான இராமபிரான் அமைத்த திருவணை எனப்படும் சேது. இந்தப் பகுதியின் கிழக்கே அமைந்து இருப்பதாலும், பல நூற்றாண்டு காலமாக மறவர் இன மக்கள் மிகுதியாக, இங்கு வாழ்ந்து வந்ததாலும், இந்தப் பகுதிக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டது.
மறவர் இன மக்களது ஏழு பிரிவினர்களில் இறுதிப்பிரிவினரான செம்பிநாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த நாட்டின் அதிபதிகளாக, சேதுபதிகள் என்ற சிறப்புப் பெயருடன் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த சேதுபதிகளைப் பற்றிய செய்திகள் குறிப்பாக இவர்கள் எந்த நூற்றாண்டிலிருந்து இந்தப் பகுதியின் ஆட்சியாளராக மாறினர் என்பதும், அவர்களது ஆட்சி, மாட்சி பற்றிய செய்திகளும் வரலாற்றில் தெளிவாக இடம் பெறவில்லை. சேதுபதி மன்னர்களது பூர்வீகம் பற்றிய ஒன்றுக்கொன்று முரணான கதைகள் பலவும் உள்ளன.
முதலாவதாக இலங்கை சென்று சீதாப்பிராட்டியை மீட்டுவந்த இராமபிரானைப் பிரம்மஹத்தி தோஷம் தொடர்ந்து வந்ததால், அதற்கு தோஷநிவர்த்தியாக இராமேஸ்வரம் கடற்கரையில் சீதாப்பிராட்டி மண்ணால் சமைத்த லிங்கத்தை இராமபிரானும் சீதாப்பிராட்டியும் வழிபாடு செய்தனர் என்றும், அதற்குப் பிறகு அவர்கள் அயோத்தி திரும்புவதற்கு முன்னர் அங்கு மிகுதியாக வாழ்ந்த மறவர் இனத் தலைவரைச் சேது அணையைக் காத்து வருமாறு நியமித்தார் என்றும் அந்த மறத் தலைவரது வழிவந்தவர்கள்தான் சேதுபதிகள் என்பதும் செவிவழிச் செய்தி.
மற்றொன்று, இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்குக் கள்வர்களால் ஏற்படும் அபாயம் பற்றித் திருச்சியை ஆட்சி புரிந்த திருமலை நாயக்க மன்னருக்கு முறையீடுகள் வரப்பெற்றதாகவும் அதனை அடுத்து அவர் தமது பணியாளர்களில் ஒருவராகிய உடையாத் தேவர் என்பவரை இராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள கள்வர் பயத்தை நீக்கச் செய்தார் என்றும், அந்த உடையாத் தேவர் வழியினரே சேதுபதிகள் என்பது ஒரு செய்தி[1].
சோழப் பேரரசை நிறுவிய இராஜராஜ சோழனும் அவர் மகன் இராஜேந்திர சோழனும் இலங்கை நாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டபோது, அவர்களது தானைத் தலைவர்களில் ஒருவரை இராமேஸ்வரம் பகுதிக்குப் பொறுப்பானவராக நியமனம் செய்தார் என்பதும், அவரது வழியினர்தான் சேதுபதி மன்னர்கள் என்பதும் பிறிதொரு செய்தி[2]
இந்தச் செய்திகள் வரலாற்றுக்கு முரண்பட்ட வகையில் அமைந்திருந்த போதிலும் சேதுபதி மன்னர்கள் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நிலைத்திருந்த தன்னரசு மன்னர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின்படி இந்த மன்னர்களின் ஆட்சி இந்தப் பகுதியில் கி.பி. 15ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் இருந்ததாகத் தெரிகிறது[3].
இதனை உறுதிப்படுத்தும் மற்றொரு செய்தியும் உள்ளது இராமேஸ்வரம் தீவிற்கு எதிர்க் கரையில் உள்ள இலங்கை நாட்டின் யாழ்ப்பான நல்லூரில் முதன்முறையாகக் குமரவேளுக்குக் கோயில் அமைத்தபோது அங்கு ஆறுகால பூஜை முதலியன முறையாக நடப்ப தற்குத் தகுதியான பிராமண சிரேஷ்டர்களை அனுப்பி வைக்கு மாறு யாழ்ப்பாண மன்னர், ஆரியச் சக்கரவர்த்தி, சேதுபதி மன்ன ரைக் கேட்டுக் கொண்டார். அப்பொழுது இருந்த சேதுபதி மன்னரும் ஆகம சாஸ்திரங்களில் வல்ல 10 பிராமணர்களை யாழ்ப்பாணத் திற்கு அனுப்பி வைத்தார். இந்தச் செய்தியினை 15ஆவது நூற்றாண்டு இலக்கியமான முத்து ராஜக் கவிராயரது கைலாய மாலை தெரிவிக்கின்றது.
- ↑ 1. கீழ்த்திசை சுவடி நிலையம், சென்னை - சேதுபதிகள் உண்டான விதம் (MSS)
- ↑ 2. Seshadri. Dr. - Sethupathis of Ramnad. (1974) thesis.
- ↑ 3. James Fergusson - History India and the Eastern Architecture (1911).
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொன்மையும், தோற்றமும் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - இராமேஸ்வரம், சேதுபதி, மறவர், ஆட்சி, இந்தப், என்பதும், மன்னர்கள், செய்தி, என்றும், பற்றிய, நாட்டின், சேதுபதிகள், நூற்றாண்டு, இலங்கை