சேதுபதி மன்னர் வரலாறு - கூத்தன் சேதுபதி
மேலும் இந்தச் செப்பேட்டில் தந்துள்ள வாசகத்தின்படி இந்த மன்னரது மனச்சான்று எவ்விதம் இருந்தது என்பதனையும் அறிய முடிகிறது. இந்த மன்னரது உத்தரவுப்படி இராமேஸ்வரம் திருக்கோயிலில் இரண்டு வகையான கட்டளைகள் இருந்து வந்தன. திருக்கோயிலுக்கு வரப்பெறுகின்ற அன்பளிப்புகள், காணிக்கைகள், நேர்ச்சை ஆகிய அனைத்து வருவாய்களையும் பொன், வெள்ளி அணிகளையும் கோயில் கட்டளையில் சேர்க்க வேண்டும் என்பதுடன், அவை தவிர சேது மன்னர்கள் உடையான் சடைக்கன் சேதுபதி காலம் முதல் சேது மன்னர்கள் வழங்குகின்ற சொந்தத் திரவியங்களும் அணிமணிகளும் மட்டும் தனியாகச் சேது மன்னர் கட்டளையில் சேர்க்க வேண்டும் என்பதும் அந்த உத்தரவு. இதற்கான காரணத்தை விளக்கம் தருகின்ற அந்தச் செப்பேட்டின் வாசகம் வருமாறு[2]:
(...."நம்முடைய கட்டளைக்கு நமது சொந்தத் திரவியம் கொண்டு அபிஷேக, நைவேத்தியம், உச்சபம், நடப்பித்து. அந்தப்பலன் நம்மை வந்து சேருகிறதேயல்லாமல், பிறத்தியாருடைய திரவியம் பாவத் திரவியமாக இருக்கும் ஆனபடியினாலே, நம்முடைய கட்டளையிலே அவைகளை வாங்கி நடப்பிக்கத் தேவையில்லை')
அறக்கொடைகள்
இந்தக் கோயிலின் ஆண்டுவிழாக்கள் அன்றாட பூஜைகள் ஆகியவற்றை நடப்பித்து வருவதற்காக இந்த மன்னர் கமுதி வட்டத்தில் உள்ள மருதங்க நல்லூர் என்ற கிராமத்தையும் பரமக்குடி வட்டத்திலுள்ள சேது.கால் என்ற ஊரினையும் கோவிலுக்காகச் சர்வமானியமாக வழங்கியிருப்பதை அவரது இரு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த மன்னர் கி.பி. 1624ல் வழங்கப்பட்ட செப்பேட்டின்படி மன்னார் வளைகுடாவில் முத்துச் சலாப காலங்களில் இரண்டு படகுகள் வைத்து முத்துக் குளிக்கும் மன்னரது உரிமையினை இந்தக் கோவிலுக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதனைப் போன்றே அப்பொழுது மக்களால் மிகுந்த மரியாதையுடன் மதிக்கப்பெற்ற திருவாடானை திருக்கோயிலுக்கும் அந்த வட்டத்தில் உள்ள கீரணி, சேந்தணி, கீரமங்கலம் ஆகிய மூன்று ஊர்களையும் தானம் வழங்கியிருப்பதை இன்னொரு ஆவணம் தெரிவிக்கின்றது.
மேலும் இந்த மன்னரது தெய்வீகத் திருப்பணியின் பட்டியலில் போகலூரில் பகழிக்கூத்த ஐயனார் கோயில் அமைப்பும், இராமநாதபுரம் கோட்டையின் மேற்குச் சுவற்றினை அடுத்து நிர்மாணித்த கூரிச்சாத்த ஐயனார் கோயில் அமைப்பும் இடம் பெற்றுள்ளன.
சேதுபதிச் சீமையில் இந்த மன்னருக்கு முன்னால் கிராமப்புறக் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஐய்யனாருக்கு வழிபாடும் விழாவும் நடந்ததாகச் செய்திகள் இல்லை. ஆனால் எத்தகைய சூழ்நிலையில் ஐய்ய னார் வழிபாடு இந்த மன்னரால் தொடங்கப்பெற்றது என்பது தெரிய வில்லை. இவரை அடுத்து வந்த மன்னர்களது ஆட்சியில் சிவவழிபாடு, வைணவ வழிபாடு, அம்பாள் வழிபாடு ஆகிய வெவ்வேறு வழிபாடு களுடன் குறிப்பாகக் கிராமங்களில் ஐய்யனார் வழிபாடு பரவலாக நடைபெற்றதைப் பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மற்ற பகுதிகளை விட சேதுநாட்டின் வடக்குப் பகுதியில் இராஜசிங்க மங்கலம் வட்டகையில் ஐய்யனாருக்கு மிகுதியான ஆலயங்கள் அமைக்கப்பட்டு இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஆன்மீகப் பணியிலும் சமுதாயப் பணியிலும் வரலாற்றில் தமக்கு எனச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள இந்த மன்னர் கி.பி. 1635ல் இயற்கை எய்தினார்.
இந்த மன்னரது ஆட்சியில் நிகழ்ந்த சுவையான செய்தி ஒன்று. இந்த மன்னர் ஒருமுறை இராமேஸ்வரம் திருக்கோயிலினைச் சுற்றிப் பட்டத்து யானையில் அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது முதியவர் ஒருவர் அதற்கு முன்னர் மன்னரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டாததால் மன்னர் அமர்ந்திருந்த யானையின் அருகே சென்று அதன் வாலைப் பிடித்து யானை மேலும் நடந்து செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார். உடன் வந்த வீரர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரை விசாரித்த பொழுது தமது அன்றாட உணவிற்கு வழியில்லை என்ற விண்ணப்பத்தைத் தெரிவிக்கவே அவ்விதம் செய்ததாகச் சொன்னார். இதனை அறிந்த மன்னர் அந்த முதியவரது வல்லமையை அறிந்து மகிழ்ந்து அவருக்கு நாள்தோறும் இருவேளை உணவைக் கோயிலி லிருந்து வழங்குமாறு ஆணையிட்டார். இந்தச் செப்பேடு அரசு சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த முதியவரது பெயர் முத்து விஜயன் சேர்வை என்பதாகும்.
நிர்வாகச் சீரமைப்பு
இந்த மன்னரது சாதனைகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இன்னொரு சாதனையும் உள்ளது. அதாவது இராமேஸ்வரம் திருக் கோயிலில் நாற்புறமும் கடலால் சூழ்ந்த தீவுப் பகுதியாக அமைந்து இருப் பதால் அங்கு நடைபெறும் சமுதாயக் குற்றங்களை உடனுக்குடன் விசா ரித்துத் தக்க தண்டனைகள் வழங்குவது சேதுபதி மன்னருக்கு இயலாத காரியமாக இருந்தது. ஆதலால் ஸ்ரீ இராமநாத சுவாமிக்குச் சேதுபதி மன்னர் அறக்கொடையாக வழங்கியுள்ள இராமேசுவரம் தீவுக் கிராமங்களில் உள்ள மணியக்காரர். கணக்கப்பிள்ளைமார், குடியானவர்கள், இராமேசுவரம் திருக்கோயில் பணியில் உள்ள பணியாளர்கள், பரிசுபட்டர், கோயில் தோப்புக்காரர். நந்தவனக்காரர்களை அவரவர் செய்த குற்றங்களுக்கு மறவர் சீமை மன்னர் என்ற முறையில் அவர்களை விசாரித்து ஆக்கினை செய்வதற்கு மன்னருக்குச் சகல அதிகாரங்கள் இருந்தாலும் அவைகளைத் தமது பிரதிநிதியாக இருந்து செயல்படுவதற்கு இராமநாத பண்டாரத்திற்கு அந்த அதிகாரங்களை மன்னர் வழங்கினார். அத்துடன் புனித பூமியான இராமேஸ்வரம் தீவில் குற்றங்கள் பெருகாமல் அவைகளை ஒடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும் இறையுணர்வுடனும் இராமநாத பண்டாரம், குற்றங்களைக் களைந்து நியாயம் வழங்குவதில் சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபுறமும் சாராமல் மேன்மையுடன் நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையிலும், சேதுபதி மன்னர் ஆதினக்கர்த்தருக்கு இந்த அதிகார மாற்றத்தை அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பின்னர் எதுவாக இருந்த போதிலும் இந்த செப்பேடு தமிழகக் குற்றவியல் வரலாற்றின் சிறப்பு ஏடாக என்றும் விளங்கும் என்பதே இயல்பு[3].
- ↑ 2. கமால் Dr. S.M. சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)
- ↑ 3. S.M. கமால், Dr. - சேதுபதி மன்ன்ர் செப்பேடுகள் (1994 பக்கம்)
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூத்தன் சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், மன்னரது, அந்த, வழிபாடு, சேதுபதி, உள்ள, சேது, இராமேஸ்வரம், கோயில், இராமநாத, வேண்டும், ஆகிய, மேலும்