சேதுபதி மன்னர் வரலாறு - கூத்தன் சேதுபதி
II. கூத்தன் சேதுபதி (கி.பி. 1622 - 1635)
போகலுரைத் தலைநகராகக் கொண்ட சேதுநாட்டின் இரண்டாவது மன்னராக முடிசூடிக் கொண்டவர் கூத்தன் சேதுபதி ஆவார். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1622ல் தொடங்கி கி.பி. 1635ல் முடிவுற்றது. ஒரு மன்னரது செம்மையான ஆட்சியைச் சுட்டுவதற்கு அவரது ஆட்சிக்காலம் ஒரு முக்கியமான குறியீடு ஆகும். இந்த மன்னரது ஆட்சி 14 ஆண்டுகளுக்குள் அமைந்து முடிவுற்றாலும் சேது நாட்டின் சமுதாய ஆன்மீகப் பணிகளுக்கு ஏற்ற வடிகாலாக இருந்து வந்ததை வரலாறு விளக்குகிறது.
பொதுவாகக் கார்காலத்தின் மழைப்பொழிவினை நம்பிய வகையில் இந்த நாட்டு மக்கள் தங்களது விவசாயப் பணிகளைத் தொடர்ந்து வந்தனர். இந்த நாட்டின் ஊடே பரவி ஒடுகின்ற கிருதுமால் ஆறு, குண்டாறு, வைகை ஆறு. மணி முத்து ஆறு, விரிசிலை ஆறு ஆகிய ஐந்து ஆறுகளில் வரப்பெறுகின்ற மழைவெள்ளம் இந்த நாட்டு விவசாயத்திற்கு அச்சாக அமைந்திருந்தது. இதனால் மக்கள் ஆங்காங்கே வரத்துக்கால் களையும் தான்போகிக்கால்களையும் குளக்கால்களையும் அமைத்ததுடன் அவைகளைக் கண்மாய், ஏந்தல், குளம், குட்டை ஆகியவைகளை அமைத்து அவைகளில் மேலே குறிப்பிட்டுள்ள ஆறுகளின் வெள்ளத் தைத் தேக்கிப் பயன்படுத்தி வந்தனர். இந்த சேதுமன்னரது ஆட்சியில் மேலும் சில நீர் ஆதாரங்களை இந்த மன்னர் அமைத்து உதவினார் என்பதை வரலாறு தெரிவிக்கின்றது.
சமுதாயப் பணிகள்
வைகை ஆற்றின் தென்பகுதி பெரும்பாலும் பார்த்திபனூருக்கு அப்பால் பரமக்குடி, முதுகளத்துார் வட்டங்களில் வறண்ட நிலங்கள் மிகுதியாக இருந்து வந்தன. இந்தக் கன்னி நிலங்களை வளமை கொழிக்கும் கழனிகளாக மாற்றுவதற்கு இந்த மன்னர் முயன்றார். கமுதக்குடி கிராமத்திற்கு மேற்கே கிழக்கு நோக்கிச் செல்லும் வைகை ஆற்றை வழிமறித்துத் தெற்கு நோக்கிச் செல்லுமாறு ஒரு பெரிய காலினை இந்த மன்னர் வெட்டுவித்தார். இதில் வரப்பெறுகின்ற வெள்ளத்தைப் பயன்படுத்திப்பல புதிய கண்மாய்களும், ஏந்தல்களும் ஏற்படுத்தப்பட்டு வறண்ட நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக இந்த மன்னர் மறைந்து 300 ஆண்டுகளுக்கு அப்புறமும் இந்தக் கால்வாய் கூத்தன் கால் என்ற பெயருடன் அழைக்கப்பட்டு மக்களது பயன்பாட்டில் இன்றுவரை இருந்து வருகிறது.
இந்த மன்னரது இந்த முன்னோடி முயற்சி பிற்காலச் சேதுபதி மன்னர்களுக்கு வேளாண்மைத் துறையில் வழிகாட்டியாக அமைந்து விட்டது. ரெகுநாத சேதுபதி மன்னர் குண்டாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகள் பயன்பட, நாராயணகாவேரி என்ற கால்வாயையும் முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர் அதே குண்டாற்றின் கிழக்குப் பகுதியில் ரெகுநாத காவேரி என்ற மிக நீண்ட கால்வாயினைத் தோற்றுவிப்பதற்கும் கூத்தன் கால்வாய் சிறந்த முன்னோடி முயற்சியாக அமைந்தது. மேலும் இந்த மன்னர் வைகை ஆற்றின் வடபுறம் குளத்தூர் அருகே அமைந்துள்ள முதலூர் என்ற ஊரில் ஒரு கண்மாயை வெட்டிக் கலுங்குகளை ஏற்படுத்தினார் என்பதை அவரது கி.பி. 1628 ஆம் வருடத்திய கல்வெட்டு தெரிவிக்கின்றது[1].
ஆன்மீகப் பணிகள்
இவ்விதம் சேதுநாட்டின் சமுதாயப் பணிகளில் மிகுந்த ஆர்வம் காட்டிய இந்த சேதுபதி மன்னர் தமது தந்தையின் பணிகளை அடியொற்றி இராமேஸ்வரம் திருக்கோயிலில் பல புதிய திருப்பணிகளை மேற் கொண்டார். இந்தத் திருக்கோயிலின் முதல் சுற்றுப் பிரகாரத்தை இந்த மன்னர்தான் அமைத்திருக்க வேண்டும் என நம்புவதற்கு ஏற்ற ஆதாரங்கள் உள்ளன. இந்தப் பிரகாரச் சுவற்றினை ஒட்டி மகாமண்டபம் ஒன்றினை இவர் நிர்மாணித்ததுடன் அந்த மதிலின் தென்பகுதியில் விநாயகருக்கு ஒரு சிறிய கோயிலையும் அமைத்துள்ளார். மேலும் இந்தக் கோயிலின் நடமாளிகையையும் இந்த மன்னரே அமைத்தார் என்பதனைக் கல்வெட்டுச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
அடுத்து மன்னர் கூத்தன் சேதுபதியின் பார்வை இராமேஸ்வரம் திருக்கோயிலின் நிர்வாகத்தில் படிந்து நின்றது. திருக்கோயிலில் பணியாற்றும் பணியாளர்கள் அவர்களுக்குரிய பணி, அவைகளைச் செய்து முடிக்க வேண்டிய நேரம் அதற்குக் கோயிலில் இருந்து வழங்கப்படும் பரிசு என்ன என்பதை அவர்கள் புரிந்து கொள்ளுமாறு செய்து அவர்களிடம் இசைவு முறி ஒன்றினை எழுதி வாங்கினார். மற்றும் திருக்கோயிலின் ஆதினக் கர்த்தராகிய சேதுராமநாத பண்டாரம் கோயிலில் வரப்பெறுகின்ற வருவாய்களை எவ்விதம் பிரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான விளக்க உரையையும் அந்தப் பண்டாரத்திட மிருந்து எழுதிப்பெற்ற செப்பேட்டின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிவதுடன் அவரது நிர்வாகத்திறனையும் அறிவிக்கும் சிறந்த தடயமாக அந்தச் செப்பேடு அமைந்துள்ளது.
- ↑ 1. கமால் S.M. Dr. சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூத்தன் சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மன்னர், சேதுபதி, கூத்தன், வைகை, இருந்து, திருக்கோயிலின், இந்தக், ரெகுநாத, தெரிவிக்கின்றது, வரப்பெறுகின்ற, மன்னரது, அவரது, மேலும், என்பதை