கம்பராமாயணம் (உரைநடை) - கிட்கிந்தாகாண்டம்

அமைதியாய்த் தான் சொல்ல வந்த கருத்தை அடைக்கமாய்க் கூறினான்; “இராமன் சீதையைப் பிரிந்த துயரத்தில் ஆழ்ந்துகிடக்கிறான்; சுக்கிரீவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை; காலம் தாழ்த்திவிட்டான். அதற்குக் காரணம் அறிந்துவர இராமன் என்னை அனுப்பி இருக்கிறான்” என்று சொன்னான் இலக்குவன்.
“அவன் காலம் தாழ்த்தவில்லை; தக்க காலம் பார்த்துக்கொண்டு இருக்கிறான்; கடமையில் அவன், அதில் முழுக்கருத்தையும் செலுத்தி இருக்கிறான்; சீதை இருக்கும் இடம் தேட, இங்கு உள்ள வானரப்படைகள் போதா என்பதால் உலகின் எல்லாத் திக்குகளுக்கும் செய்தி அனுப்பி, வீரர்களைத் திரட்டிவர ஆள்களை அனுப்பி இருக்கிறான்; படைகள் வந்து குவியக் கால தாமதம் ஆகிறது. அதனால்தான் இன்னும் அவன் புறப் படவில்லை. சுக்கிரீவன் சொன்ன சொல் தவறமாட்டான்; செய்வதைத் திருந்தச் செய்யும் இயல்பினன்; இராமனுக் காக அவன், தன் உயிரையும் பணயம் வைப்பான்; ‘சீதையை முதலில் கண்டு செய்தி கொண்டு வந்து தருவதே தன் முதல் கடமை’ என்று எந்நேரமும் அதே சிந்தனையில் ஆழ்ந்துகிடக்கிறான்; அவனுக்கு உறக்கமே இல்லை; ‘கடமை கடமை கடமை’ என்று எந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறான்” என்று நயம்படப் பேசி அவன் மனத்தை மாற்றினாள். அனுமனும் தாரை உடன் இருந்து தக்க சொற்களை எடுத்துக் கூறி அவன் சினத்தைத் தணிவித்தான்.
அங்கதன் இலக்குவனைக் கண்டு வணங்கி அடி பணிந்தான்; சினம் ஆறிய இலக்குவன், அங்கதனிடம் தன் வருகையைச் சுக்கிரீவனிடம் தெரிவிக்குமாறு சொல்லி அனுப்பினான்.
அங்கதன் சுக்கிரீவனை அடைந்து, இலக்குவன் கொண்ட சீற்றத்தையும் தாரையின் கூற்றினால் அவன் அடைந்த மாற்றத்தையும் எடுத்துக் கூறி இலக்குவனைப் போற்றி வரவேற்க அழைத்தான்.
“ஏன் இலக்குவன் வருகையைத் தன்னிடம் தெரிவிக்கவில்லை” என்று மயக்கம் நீங்கிய நிலையில் வினவினான். அங்கதன், நடந்த செய்தியைச் சொல்லி, இனிக் காலம் தாழ்த்தாமல் இலக்குவனை வந்து காண்க என்று வேண்டினான் சினம் தணிந்த நிலையில் இருந்த இலக்குவனைச் சுக்கிரீவன் தோள்கள் ஆரத் தழுவிக் கொண்டான்; அவனைத் தக்க தவிசு ஒன்றில் அமருமாறு வேண்டினான்.
“புல்தரையில் இராமன் படுத்திருக்க, நான் இங்கே பொன் தவிசில் எப்படி அமர்வேன்; அவன் கீரை உணவு உண்ண நான் இங்கே சோறும் கறியும் எப்படி அருந்துவேன்? நான் போய்த்தான் அந்தக் கீரை உணவும் சமைக்கவேண்டும்; அதனால், விரைவில் புறப்படுக” என்றான்; அவன் உபசாரங்களை இலக்குவன் ஏற்றுக்கொள்ளவில்லை.
சுக்கிரீவன் அனுமனிடம் “எஞ்சிய படைகளைத் திட்டிக் கொண்டு உடன் வருக” என்று கூறிவிட்டு இலக்குவனோடு சென்று, உள்ள படைகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
இராமனை அடைந்து, அவன் திருவடிகளை வணங்கிக் கால தாமதத்துக்கும், தான் இன்பத்துள் வைகிக் கடமையில் காலம் கடத்தியமைக்கும் சுக்கிரீவன் மன்னிப்பு வேண்டினான்; அவனைத் தன் தம்பி பரதனாகவே மதித்து அவனிடம் இன்னுரை பேசி, அனுமனைப் பற்றி விசாரித்தான்.
அனுமன் பெரும்படையுடன் பின் தொடர்ந்து வருவதாகக் கூறி அவனை மகிழ வைத்தான். இராமனும் அவனை அன்புடன் வரவேற்று ஒருநாள் ஒய்வெடுத்துக் கொண்டு மறுநாள் வந்து சேருமாறு சொல்லி அனுப்பினான்.
இராமன் அனைவரும் நீங்கியபின் தானும் தன் தம்பியுமாய்ப் பிரிந்த சீதையின் நினைவோடு கவலை நிரம்பியவனாய் அன்றைய பொழுதைக் கழித்தான்.
சேனைகள் வருகை
சேனைகள் வருகைக்காக இராமனும் இலக்கு வனும் காத்து இருந்தனர். சதவலி, சுசேடணன், தாரன், கேசரி, துமிரன், காவட்சன், பணசன், நீலன், தரீமுகன், கயன், சாம்பவன், துன்முகன், துமிந்தன், குமுதன், பதுமுகன், இடபன், தீர்க்கபாதன், வினதன், சரபன் முதலிய படைத் தலைவர் பல திசை களிலிருந்தும் வானர சேனைகளைக் கொண்டு வந்து குவித்தனர். அப் படைகளைச் சுக்கீரிவன் இராமனுக்குக் காட்டினான். “இனிச் சீதை இருக்கும் இடத்தைக் காண்பதற்குக் கால தாமதம் செய்யக் கூடாது” என்று இலக்குவன் கூறினான்.
நான்கு திசைகளுக்கும் தக்க தலைவர்களின்கீழ் சேனைகளை அனுப்பி வைத்தனர். சுக்கீரிவன் தென் திசை நோக்கிச் செல்லும் வீரர்களுக்குச் செல்ல வேண்டிய வழி வகைகளைக் கூறினான்; “'முதலில் விந்திய மலையை அடைதல் வேண்டும்; அதனைக் கடந்து சென்றால் நருமதை ஆறு வரும்; அதனைக் கடந்தால், ஏமகூடம் என்னும் மலை வரும்; அதனைக் கடந்து சென்றால், பெண்ணை ஆற்றங்கரை வரும்; விதர்ப்ப நாட்டைக் கடந்தால், தண்ட காரணியம் வந்து சேரும்; அங்கே முண்டகத்துறை என்ற ஒன்று உள்ளது. அதனைக் கடந்து சென்றால், பாண்டுமலை என்ற மலை ஒன்று உள்ளது; அங்கே கோதாவரி என்னும் நதி உள்ளது. அதனைக் கடந்து சுவணம் என்னும் ஆற்றைத் தாண்டிய பிறகு கொங்கண நாட்டையும் குலிந்த நாட்டையும் காணலாம்; அதன் பின் அருந்ததி மலையை அடையலாம்; ஆற்றை எல்லாம் கடந்து சென்றால் தமிழ் நாட்டின் வட எல்லை யாகிய திருவேங்கட மலையை அடையலாம். தமிழ் நாட்டில் காவிரி யாற்றினனக் கடந்தால், மலை நாடும் பாண்டிய நாடும் வரும்; அவற்றை எல்லாம் கடந்தால் ‘மயேந்திரம்’ என்னும் மலை தென்கருங்கடலை அடுத்து வரும்; அங்கிருந்து இலங்கைக்குச் சென்று விடலாம்” என்று வழி கூறினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிட்கிந்தாகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - அவன், வந்து, இலக்குவன், காலம், சுக்கிரீவன், கொண்டு, அதனைக், வரும், கடந்து, சென்றால், கடந்தால், என்னும், அனுப்பி, தக்க, கூறினான், உள்ளது, கூறி, இருக்கிறான், இராமன், அங்கதன், சொல்லி, நான், வேண்டினான், மலையை