கம்பராமாயணம் (உரைநடை) - ஆரணியகாண்டம்
“பழுக்கக் காய்ச்சிய இரும்பில் தூவிய நீர் மீண்டும் வராது. அதே போலத்தான் சீதையின் நிலையும். அவளை உன்னால் மீட்க முடியாது” என்றான்.
சடாயுவும் இராவணனும் மோதிக் கொண்டனர். இராவணனைச் சடாயு தேரோடு கீழே சாய்த்தான். இனி இராவணன் பிழைக்க மாட்டான் என்ற நிலைமை உருவாகியது. அவனிடம் வேறு ஆயுதங்கள் இல்லை. தன் உறையில் “சந்திரகாசம்” என்னும் வாள் இருந்தது. அது அவனுக்குச் சிவபெருமான் அளித்தது. அதைக் கொண்டு சடாயுவின் சிறகுகளைக் கொய்தான். அவனும் சிறகு அறுபட்டுக் கீழே சாய்ந்தான்.
சீதை சடாயுவை நினைத்துப் புலம்பினாள். அவளை அந்தப் பர்னசாலையோடு தன் தோளில் வைத்துக் கொண்டு இராவணன் ஆகாய வழியாக இலங்கையை அடைந்தான். அங்கே சீதையை அசோக வனத்தில் அசோக மரத்தின் நிழிலில் சிறை வைத்தான். அரக்கியர் அவளைக் காவல் செய்தனர்.
இலக்குவன் சீதையைத் தனியே விட்டு வந்தோமே என்ற வருத்தம், இராமனைக் காண வில்லையே என்ற கவலை இரண்டிலும் அகப்பட்டுத் துடித்தான்.
இராமனைக் கண்டான்; அளவிலா மகிழ்ச்சி கொண்டான். இராமன் தன் தம்பியை அன்பால் தழுவிக் கொண்டான்.
“நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்டான்.
இலக்குவன் நடந்ததைச் சொன்னான்; தான் அங்கு வரவில்லை என்றால் சீதை நெருப்பில் விழுந்து இறந்திருப்பாள் என்பதை விளக்கினான்.
இலக்குவன் தடுத்தும் தான் மான் பின் சென்றது தவறு என்பதை இராமன் ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தினான். விரைவில் பர்ணசாலை திரும்புதல் வேண்டும் என்று கூறி இருவரும் வேகமாக நடந்தனர். பர்ணசாலையை அடைந்தனர்.
பஞ்சவடியில் சீதையைக் காணவில்லை. தேடி வைத்த செல்வம் வைத்த இடத்தில் இல்லாவிட்டால் எத்தகைய துன்பம் அடைவார்களோ அத்தகைய துன்பத்தை இராமன் அடைந்தான். அவன் மனம் சுழன்றது. உலகமே சுழன்று திரிவதைப்போல அவனுக்குக் காணப்பட்டது.
அவன் கோபத்தால் கண்கள் சிவந்தன. தருமத்தின் மீதும், சீதையைக் காக்காத தேவர்களின் மீதும் அவன் கோபம் பாய்ந்தது. தேரினுடைய சக்கரங்கள் பூமியில் பதிந்து இருப்பதைப் பார்த்தார்கள். சீதையைத் தொடுவதற்கு அஞ்சி அவள் இருந்த நிலத்தை அடியோடு பெயர்த்துக் கொண்டு போனதையும் அறிந்தார்கள். “சீதையைக் கவர்ந்தவன். வெகுதூரம் செல்வதற்கு முன்பு அவனைத் தொடர்ந்து செல்வோம்” என்று இராமன் கூறினான். தேர்ச்சுவடுகள் வழிச் சென்றனர். ஓர் இடத்தில் அச்சுவடுகள் நின்றுவிட்டன. அவன் ஆகாய வழியே சென்னறிருக்க வேண்டும் என்பதை அறிந்தனர்.
அம்பு தாக்க முடியாத தூரத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இரண்டு யோசனை தூரம் நடந்து சென்றனர். வீணையின் சித்திரம் வரையப் பெற்ற துகில் கொடி ஒன்று நிலத்தின் மீது கிடப்பதைக் கண்டனர். அந்தக் கொடி சடாயுவின் மூக்கால்தான் அறுபட்டு இருக்க வேண்டும் என்று உணர்ந்தனர். மேலும் தொடர்ந்து சென்றனர். வலிமையான ஒரு வில்லைக் கண்டனர். இதுவும் சடாயுவால் கடிக்கப்பட்டிருக்கிறது என்று முடிவு செய்தனர். பெரிய சூலம் ஒன்றையும் அம்பறாத் துணிகள் இரண்டையும் கண்டனர். இராவணன் மார்பிலிருந்து சடாயு பறித்த கவசம் சிதைந்து கிடந்ததைக் கண்டனர். குதிரைகள் விழுந்து கிடந்ததையும் தேர்ப் பாகன் மடிந்து கிடந்ததையும் கண்டனர். தோளில் அணியும் ஆபரணங்களையும் கவச குண்டலங்களையும் மணிகள் பதித்த மகுடங்களையும் கண்டனர். சடாயுவுடன் போரிட்டவன் சிங்கம் போன்ற ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று கணித்தனர்.
கடலில் மத்தாக வைக்கப்பட்ட மந்தர மலையைப் போல இரத்த வெள்ளத்தில் இராமன் சடாயுவைப் பார்த்தான்; அவன் மீது இராமன் விழுந்து கதறி அழுதான்.
“தந்தையை நாட்டில் இழந்தேன்; மற்றொரு தந்தையைக் காட்டில் இழந்தேன். என்னைப் போல அபாக்கியவான் வேறு யாரும் இருக்க முடியாது”.
“'சீதைக்கும் உனக்கும் நேர்ந்த தீமைகளைத் தடுக்க முடியாத நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? தவசிகளின் வேண்டுகோளை ஏற்று அரக்கரை அழிப்பதாக வாக்குறுதி அளித்தேன், அதனால்தான் வாழ்கிறேன். உன்னைக் கொன்ற பகைவன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்தும் போர் மேற்கொள்ளா மல் இங்கே மரம்போல் நிற்கிறேன்” என்று கூறிக் கதறினான்.
சடாயு இறக்கவில்லை; ஒரளவு உணர்ச்சி இருந்ததை அறிந்தான். சீதையை இராவணன் வலிதிற் கடத்திச் சென்றான் என்று சடாயு கூறினான்.
“மலரணிந்த வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் எடுத்தான். ஏகுவானை எதிர்த்து நின்று ஆற்றல் கொண்டு தடுத்தனன்; என்ன செய்வது? சங்கரன் தந்த வாளால் என் சிறகுகளை வெட்டினான். இங்கு விழுந்து கிடக்கிறேன்; இது இங்கு நடந்தது” என்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரணியகாண்டம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) - இராமன், கண்டனர், வேண்டும், கொண்டு, இராவணன், அவன், விழுந்து, சடாயு, இருக்க, சென்றனர், இங்கு, செய்தனர், இலக்குவன், என்பதை