வராக புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
முன்னொரு சமயம் பிரியவரதா என்ற மன்னனைக் காண நாரதர் புறப்பட்டார். அவரைக் கண்ட அரசன் ஒரு முனிவருக்குச் செய்ய வேண்டிய உபசரணைகள் செய்து முடித்த பின், “முனிவரே! தாங்கள் எல்லா உலகமும் போய் வருகிறவர். சாதாரணமாக அல்லாமல், மிகச் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றனை எங்கும் கூற வேண்டுகிறேன்” என்று கேட்க, நாரதர் கூற ஆரம்பித்தார்.
ஸ்வேத துவீபம் என்ற பகுதியில் நிகழ்ந்த ஒன்றைக் கூறப் போகிறேன். மிக அழகியதும், குளிர்ச்சி பொருந்தியதுமான ஒரு ஏரி அங்கிருந்தது. ஏரி நிரம்ப தாமரை மலர்களும் இலைகளும் நிரம்பி இருந்தன. ஒரு தாமரை மலரின் பக்கத்தில் மிக அழகிய பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் நிற்பதைக் கண்ட நான், "அம்மா! நீ யார்? ஏன் இங்கு நிற்கிறாய்?” என்று கேட்டேன். கேட்டவுடன் அப் பெண்ணிட மிருந்து மூன்று ஒளிக் கற்றைகள் தோன்றி மறைந்தன. வியப்பால் வாயடைத்து நின்ற நாரதனைப் பார்த்து, அப் பெண் சொல்ல ஆரம்பித்தாள். நாரதா! என் பெயர் சாவித்திரி என்பதாகும். நீ பார்த்த மூன்று ஒளிக் கற்றைகளும் மூன்று வேதங்கள். நீ என்னை அடையாளம் கண்டு கொள்ளாதிருக்கும்படி நாரதனாகிய உன்னுடைய ஞானத்தைக் கவர்ந்துகொண்டேன். என்னிடமிருந்து முதலில் புறப்பட்ட ஒளி ரிக்வேதமாகும். அதை வாய்விட்டுப் படிப்பவர்கள் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுவர். ரிக்வேதமே நாராயண சொரூபம் ஆகும். இரண்டாவதாக உள்ள யஜுர் வேதம் பிரம்ம சொரூபமே ஆகும். மூன்றாவது உள்ள சாமவேதம் சிவசொரூபம் ஆகும்.'
சாவித்திரி தேவதையைப் பார்த்து நாரதன், ‘என்னுடைய அறிவை எல்லாம் பறித்துக் கொண்டாயே, இழந்துவிட்ட அறிவை எப்படிப் பெறுவேன்’ என்று கேட்டவுடன் சாவித்திரி, 'இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால் நீ இழந்த அறிவைப் பெறுவாய், உன் போன ஜன்மம் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார். உடனே நாரதரும் அவ்வாறே செய்தார்.
பழம்பிறப்பு பற்றிய விளக்கம் நாரதருக்குத் தோன்ற லாயிற்று. அந்தப் பிறப்பில் நாரதர் சரஸ்வதி பிராமணனாகப் பிறந்து வாழ்ந்தார். இந்த மானிடப் பிறப்பே வீண் என்றும், குடும்பம், மனைவி, மக்கள் என்பவை எல்லாம் மாயை என்றும் காட்டிற்குச் சென்று தவம் செய்வதுதான், செய்யப்பட வேண்டிய காரியம் என்றும் உணர்ந்தார். உடனே தன் சொத்து முழுவதையும் மகனிடம் கொடுத்துவிட்டுக் காட்டிற்குச் சென்று தவம் புரியலானார். அவர் தவத்தை மெச்சி விஷ்ணு எதிரே வந்த பொழுது, நான் இந்த உடம்புடன் விஷ்ணுவிடம் கரைந்து விட வேண்டும் என்ற வரத்தை வாங்கினார். இந்த உடம்புடன் அத்தகைய காரியத்தைச் செய்ய முடியாது என்று கூறியவர் அவருக்கு நாரதர் என்ற பெயரையும் கொடுத்து மறைந்தார். நாரதர் இந்த உலகத்தில் நெடுநாள் வாழட்டும், என்று கூறி விட்டு விஷ்ணு மறைந்து விட்டார்.
நீண்ட காலம் தவம் செய்து இறந்த பிறகு பிரம்மலோகம் சென்று அங்கு நீண்ட காலம் தங்கிவிட்டு, பிரம்மனுக்கு மகனாக நாரதர் என்ற பெயருடன் பிறந்தார்.
அடுத்தபடியாக நாரதர், பிரியவரதனை நோக்கி அரசே! அடியிற் கண்ட விஸ்வ மந்திரத்தை உனக்கு உபதேசிக்கப் போகிறேன். அதை நன்கு பயன்படுத்திக் கொள்வாயா என்று கூறி ஒரு பாடலைக் கூறினார்.
ஆயிரக்கணக்கான கண்கள், கைகள், கால்கள் உடைய பரம்பொருளே! உனக்கு வணக்கம், சூரியனையும், சந்திரனை யும் கண்களாக உடைய பரம்பொருளுக்கு வணக்கம். சத்திய யுகத்தில் வெள்ளை உடையும், திரேதா யுகத்தில் சிவப்பு உடையும், துவாபர யுகத்தில் மஞ்சள் உடையும், கலியுகத்தில் கறுப்பு உடையும் அணிந்து காட்சிதரும் பரம்பொருளே, உன்னை வணங்குகிறேன். கேடயம், வாள், கதாயுதம், தெய்வீகத் தாமரை ஆகியவற்றை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருப்பவரே உனக்கு வணக்கம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 4 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நாரதர், உடையும், தவம், உனக்கு, வணக்கம், யுகத்தில், சென்று, என்றும், கண்ட, தாமரை, மூன்று, சாவித்திரி, ஆகும்