வராக புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் பிருத்வி ஆனவள் விஷ்ணுவிடம் சென்று வணங்கி, பின்வருமாறு பேச ஆரம்பித்தாள். ஒவ்வொரு கல்ப முடிவிலும் என்னைக் காப்பாற்றுகின்றவர் மச்சமாகவும், ஆமையாகவும், வராகமாகவும், மாறிமாறி வந்து என்னைக் காப்பாற்றி நான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்குமாறு செய்கின்றவர் தாங்களே ஆவீர். இப்படி எங்களுடைய அறிவுக்குப் புலப்படாத வகையில் பலவற்றிலும் ஊடுருவி நிற்கும் தங்களை நாங்கள் கண்டுகொள்வது எளிதன்று. தங்களுடைய முழுவன்மை என்ன என்பதை நான் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. தங்களின் உண்மை சொரூபம் என்ன? தங்களை அடைதற்குரிய உண்மையான வழி யாது? பிரபஞ்சப் படைப்பு என்பது எவ்வாறு ஆரம்பித்து- எவ்வாறு முடிகிறது? நாலு யுகங்கள் என்று சொல்லப்படுபவற்றின் உண்மையான இயல்புகள் யாவை?
பிருத்வியின் இந்த வினாக்களைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த வராகம் மெல்லச் சிரிக்க ஆரம்பித்தது. அந்த வராகத்தின் வயிற்றில் பிரபஞ்ச உற்பத்தியில் காணப்படும் முட்டை இருந்தது. அம்முட்டைக்குள் இனி அடுத்த கல்பத்தில் தோன்ற வேண்டிய உயிர்கள் அனைத்தும் இருந்ததைப் பிருத்வி கண்டது. வராகத்தின் வயிற்றுள்ளும் அடுத்த கல்பத்தில் வெளிவரவேண்டிய பொருள்கள் அனைத்தும், தொடக்கப் பருவத்தில் இருந்ததைப் பிருத்வி கண்டாள்.
பூமியின் இந்தக் கேள்விகளையும், கேள்விகளைக் கேட்ட பிருத்வியின் மனத் தூய்மை, ஒழுங்கு ஆகியவற்றையும் நன்கறிந்திருந்த வராகம் அவள் வினாக்களுக்கு மகிழ்ச்சியுடன் விடை கூறத் துவங்கியது. அந்த வினாவும் விடையும்தான் வராக புராணம் எனப் பேசப்படுகிறது.
ஏனைய புராணங்களைப் போலவே, வராக புராணமும் பிரபஞ்சப் படைப்பு பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்தப் படைப்பின் பின்னணியில் நம் நினைவுக்கப்பாற்பட்ட பரப்பிரம்மம் உள்ளது. இந்தப் பரம்பொருள் பிறப்பு, இறப்பு இல்லாததாய், எவ்வித மாற்றமும் இன்றி எங்கும் நிறைந் துள்ளதாய் உள்ளது. அப் பரப்பிரம்மம் படைப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்ட மாத்திரையில், வெவ்வேறு பொருள்களாகப் பரிணமிக்கின்றது. உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அடிப்படையான மூன்று குணங்களும் வெவ்வெறு அளவுகளில் தங்கியுள்ளன. அவை சத்வம், ராஜசம், தாமசம் என்று கூறப்படும்.
ஆதியில் எங்கும் சூனியம். அந்தச் சூனியத்திலிருந்து ஆதி நாதம் தோன்றியது. நாதத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்தினின்று காற்று, காற்றிலிருந்து நெருப்பு நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி முதலியவை தோன்றின. இந்தப் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் எல்லா உயிர்களும் வாழும் எல்லா வகை உடம்புகளும் படைக்கப்பட்டன. இந்த உயிர்கள் அனைத்தும் வாழக்கூடிய இடமாக பூமியை ஏற்பாடு செய்து, அந்த பூமியை நீருக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுகிறார் விஷ்ணு. இதையே மகாபிரளயம் என்று கூறலாம். ஏனைய புராணங்கள் இந்த மகாபிரளயம் பற்றியோ, இதன் முடிவில் பரப்பிரம்மமோ, பொருள்களைத் தோற்றுவிக்கின்ற முறை பற்றியோ, மும்மூர்த்திகளைத் தோற்றுவிக்கின்ற முறை பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை. அந்தப் புராணங்கள் சொல்லும் பிரளயம் பிரம்மனுடைய ஒரு பகல் முடிந்து இரவு வரும்பொழுது ஏற்படுகின்ற சாதாரணப் பிரளயம் பற்றியதாகும். அந்தப் பிரளயத்தின் முடிவில் எங்கும் நீரே நிறைந் திருக்கும். நாராயணன் உறங்குவார்.
(இதை அடுத்து வராக புராணம், கல்பங்கள் பற்றியும், நில இயற்பொருள் இயங்கியற் பொருள், பிரம்மன் பிரபஞ்சம் படைத்த கதை ஆகியவை ஏற்கெனவே மற்றப் புராணங்களில் விவரிக்கப்பட்டிருப்பதால், இங்கு அதனைக் கூறவில்லை,)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 22 | 23 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வராக புராணம் - பகுதி 3 - Varaha Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, எங்கும், பற்றியோ, இந்தப், வராக, அந்த, அனைத்தும், பிருத்வி