வாமன புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
குரு, சமந்தபஞ்சகம் என்ற இடத்தில், பொன்னாலாகிய ஏரினைப் பூட்டி நிலத்தினை உழ ஆரம்பித்தான். அப்பொழுது இந்திரன் வந்து இந்த இடத்தை ஏன் உழுகிறாய்? என்றான். குரு, இங்கே நிலத்தை உழுது, நற்பண்புகளை விதைக்கப் போகிறேன்' என்று கூறினவுடன் இந்திரன் போய்விட்டான். குரு நிலத்தை உழுதுகொண்டே இருந்தான். விஷ்ணு அங்கே வந்து நிலத்தை ஏன் உழுகிறாய் என்று கேட்க, குரு அதே விடையைக் கூறினார். என்ன விதை வைத்திருக்கிறாய்? எங்கே வைத்திருக்கிறாய் என்று கேட்க, குரு என் உடலில் இருக்கிறது என்றான். என்ன விதைகள் என்று விஷ்ணு கேட்க, "தியானம், சத்தியம், இரக்கம், தூய்மை, மன்னித்தல், தானம் செய்தல் ஆகியவையே அந்த விதைகள்” என்று குரு கூற, விதை எங்கே என்று விஷ்ணு கேட்க, குரு தன் வலக்கையை நீட்டினான். அவன் வலக்கையை ஆயிரம் துண்டுகளாக வெட்டி, உழப்பட்ட வயல்களில் விதைத்துக் கொண்டே வந்தார். அதேபோல அவன் இடக்கை, இரண்டு தொடைகள் ஆகியவற்றை வெட்டி விதைத்த பிறகு அவன் தலையையும் வெட்டக் கொடுத்தான். அப்பொழுது விஷ்ணு அவனைத் தடுத்து 'உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, குரு, பெரும்பகுதி நிலத்தை உழுதுவிட்டேன். வரம் தருவதானால் இந்த இடம் சிறந்த புண்ணிய க்ஷேத்திரமாக விளங்கட்டும் என்று வேண்டிக் கொண்டான். விஷ்ணுவும் அப்படியே ஆகட்டும். இந்தப் புண்ணிய பூமிக்கு இன்று முதல் குருக்ஷேத்திரம் என்ற பெயர் வழங்கட்டும் என்றார்.
இந்தப் புண்ணிய பூமியின் பக்கத்தில் பிருதுதாகா என்ற ஆறு ஒடுகிறது. அந்தத் தீர்த்தக் கரையைத்தான் பிதுர்க்களை வணங்கி, மேனகாவை அழைத்து வரவேண்டிய இடம் என்று விஷ்ணு கூறினார். இதே குருக்ஷேத்திரத்தில்தான் லோமஹர்ஷன முனிவர் மற்ற முனிவர்களுக்கு வாமன புராணத்தைச் சொன்னார். வாமன புராணக் கதை வருமாறு:
வலியின் கதை (மகாபலி)
பிரஹலாதனின் மகன் விரோச்சனுக்கு வலி மகனாகப் பிறந்தான். நேர்மையும் சத்தியமும் உடைய அவன் மூன்று உலகங்களையும் ஆண்டு வந்தான். இந்திரன் மட்டும் தன் பதவி பறி போனதால், மிகவும் வருத்தத்துடன் இருந்தான். தேவர்களை அழைத்துக் கொண்டு தேவர்களின் தாய்தந்தை யாகிய அதிதி, காசியபன் ஆகிய இருவரையும் சந்தித்தான். அவர்கள் இருவரும் நேர்மையுடன் நடக்கும் தைத்தியனாகிய வலியை ஒன்றும் செய்ய முடியாது. தேவையானால் பிரம்மாவைச் சென்று பாருங்கள் என்று கூறினார்கள். பிரம்மனிடம் சென்ற பொழுது "வலியை ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் வடகடலின் கரைக்குச் சென்று விஷ்ணுவை தியானியுங்கள்” என்று கூறினர். இப்பொழுது இந்திரன் முதலிய தேவர்களுடன் அதிதி, காசிபன் ஆகிய இருவரும் உடன் சேர்ந்துகொண்டு விஷ்ணு தியானத்தில் இடம்பெற்றனர். விஷ்ணு அவர்கள் எதிரே வந்து, நான் காசிபனுக்கும், அதிதிக்கும் பிள்ளையாகப் பிறக்கப் போகிறேன். உங்கள் துயர் தீரும் என்று கூறி மறைந்தார். அதே நேரத்தில் வலியின் நாட்டில் தீய சகுனங்கள் பல தோன்றின. வலி அதன் காரணம் யாது என்று தனது பாட்டனாகிய பிரகலாதனைக் கேட்டான். பிரகலாதன், அதிதியின் வயிற்றில் விஷ்ணு பிறக்கப் போகிறார். அதனால்தான் தைத்தியர்களிடையே இந்தத் தீய சகுனங்கள் ஏற்படுகின்றன என்று கூறினார். அதைக் கேட்ட வலி “அந்த விஷ்ணு என்பவன் யார்? என்னை விட அதிக பலம் பொருந்தியவனா?” என்று விஷ்ணுவை இழிவாகப் பேசினான். சிறந்த விஷ்ணு பக்தனாகிய பிரகலாதன் மனம் நொந்து, “நீ உன் பலத்தை இழக்கப் போகிறாய்” என்று சாபமிட்டான். பயந்து போன வலி, பாட்டனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பிரகலாதன் அவனை மன்னித்தாலும் கொடுத்த சாபத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 9 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, குரு, கேட்க, நிலத்தை, அவன், இந்திரன், புண்ணிய, பிரகலாதன், கூறினார், வந்து, என்ன