வாமன புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
சிவனும், கெளரியும் ஒர் ஆண் மகவு தோற்றுவித்தால், தன் இந்திரப் பதவிக்கு ஆபத்து என்றுணர்ந்த இந்திரன், சிவன் குழந்தை பெறாமல் இருக்கப் பார்த்துக் கொண்டார். அங்கு இருந்த கெளரி, இந்திரன் மேல் கோபம் கொண்டு, சிவனுடைய உதவி இல்லாமல் தானே ஒரு ஆண் மகவை உண்டாக்கினார். அக்குழந்தையைக் கண்ட சிவன் பெரிதும் மகிழ்ந்து, நாயகனாகிய தன் உதவி இல்லாமல் பிறந்த குழந்தை ஆதலால், விநாயகன் என்று பெயரிட்டார். சிவகணங்கள் அனைத்திற்கும் தலைவனாக இருந்தமையால் கணேசன் என்றும், கணபதி என்றும் அழைக்கப்பட்டார்.
சும்ப - நிசும்பர்கள்
காசிட முனிவர், தனு என்ற தைத்தியப் பெண்ணை மணந்து சும்ப, நிசும்பர் என்ற மக்களைப் பெற்றனர். (இவர்களைக் காளி அழித்த கதை ஏற்கெனவே மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது)
முராரியின் கதை
விஷ்ணுவுக்கு முராரி என்ற பெயருண்டு என்று புலஸ்தியர் சொல்ல, அவருக்கு முராரி என்று பெயர் வரக் காரணம் என்ன என்று நாரதர் கேட்க, புலஸ்தியர் கூற ஆரம்பித்தார்.
காசியப முனிவனுக்கு, தைத்திய குலத்தைச் சேர்ந்த முரா என்றொரு மகன் இருந்தான். மூன்று உலகங்களையும் வெல்ல எண்ணிய அவன் கடுமையான தவம் புரிந்து பிரம்மனிடம் புதுமையான வரம் ஒன்றினைப் பெற்றான். அதன்படி “போர்க்களத்தில் யாரேனும் ஒருவர் மேல் நான் என் கையை வைத்தால் அவர்கள் உடனே இறந்துவிட வேண்டும்” என்றான். பிரம்மனும் அவ்வரத்தை அளித்தார். முரா இவ்வரத்தைப் பெற்றவுடன் அவனை வெல்ல முடியாது என்று அறிந்த இந்திரன், இந்திராணி, தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காளிந்தி நதிக் கரையோரம் ஒரு நகரத்தை நிர்மாணித்து அதில் சென்று வாழ்ந்தான். ரகு அரசன் ஒரு யாகம் செய்து கொண்டிருந்தான். முரா அவனிடம் வலுச் சண்டைக்குப் போனான். வசிட்டர் அவனிடம், "உனக்கு இணையான வலிமை கொண்டுள்ளவரிடமே நீ போரிட வேண்டும் என்று கூறி யமனிடம் அனுப்பினார்.
முராவின் வலிமை பற்றி அறிந்த யமன் தன் வாகனத்தில் ஏறி விஷ்ணுவிடம் சரணடைந்தான். விஷ்ணு அவனைச் சமாதானப்படுத்தி, அந்த அசுரனைத் தன்னிடம் அனுப்பும்படிக் கூறினார். யமனும், முராவிடம் சென்று விஷ்ணு அவனுடன் போர் புரியக் காத்திருப்பதாகவும், அவன் ஷிரோதா கடற் கபரக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினான். அது கேட்ட முரா அங்கு சென்று விஷ்ணுவிடம், "உன்னிடம் சண்டை யிட வந்துள்ளேன்” என்று கூறினான். அது கேட்ட விஷ்ணு முராவிடம், "நீ என்னுடன் சண்டையிட வேண்டுமானால் உன் இதயம் ஏன் வேகமாகத் துடிக்கிறது. நீ மிகவும் பயப்படுகிறாயா? அவ்வாறு பயந்து இருக்கும் உன்னுடன் நான் சண்டையிட விரும்பவில்லை” என்று கூறியவுடன், முரா விஷ்ணு கூறிய வார்த்தைகள் உண்மைதானா என்று அறிய தன் நெஞ்சின் மீது கை வைத்துப் பார்க்கவும், பிரம்மன் வரத்தின்படி உடனே இறந்து போனான். இறந்த அவன் உடலை விஷ்ணு தன் சக்கரத்தினால் துண்டாக்கினார். முரா என்ற அசுரனைக் கொன்றதால், அன்று முதல் விஷ்ணுவுக்கு 'முராரி என்ற பெயர் வழங்க ஆரம்பித்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 11 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, முரா, விஷ்ணு, சென்று, ", அவன், பெயர், என்றும், முராரி, இந்திரன்