வாமன புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
உறங்கி எழுந்தவுடன், அங்கு ஒரு பேய் அந்த மரத்தை நோக்கி வருவதைக் கண்டான். அந்தப் பேயைச் சுற்றி ஆயிரக்கணக்கான பேய்கள் உடன் வந்தன. முதலில் வந்த தலைவனாகிய பேய், தர்மாவை நோக்கி, “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டது. தர்மா தன் கதையைக் கூற, மிகவும் மனம் வருந்திய அப்பேய், அவனுக்கு விருந்தினைத் தயார் செய்யும்படி மற்றப் பேய்களிடம் கூறிற்று. அப்பேய் கூறிய மறுவிநாடி, இரு பாத்திரங்களில் பலவித உணவு மற்றும் தண்ணிர் கொண்டுவரப்பெற்றது. அவை அனைத்தையும் தர்மா உண்டு முடித்தான். உணவு உண்ட பின்பு, அந்தப் பேய்களின் தலைவனிடம், "இந்த உணவு, நீர் எங்கிருந்து வந்தது? நீங்கள் யார்? எவ்வாறு இந்த வனாந்திரத் திற்கு வந்தீர்கள்? உங்கள் கதையினைக் கூறுங்கள்” என்று கேட்க, அத்தலைவன் கூற ஆரம்பித்தான். “நண்பனே! முன் ஜென்மத்தில் நான், சகலா என்ற ஊரில் சோமசர்மா என்ற பெயருடன் வசித்து வந்தேன். வணிகம் செய்வது எனது தொழில். சோமஷ்ரவா என்ற பெயருடைய நண்பன் என் வீட்டின் பக்கத்தில் இருந்தான். அவன் விஷ்ணு பக்தன். நான் மிகவும் கஞ்சனாகவும், யாருக்கும் தானம் எதுவும் கொடுக்காமல் இருந்தேன்.
ஒரு சமயம், பல யாத்ரிகர்களோடு சோமசர்மாவாகிய நான் பல தீர்த்தங்கள் சென்றேன். அச்சமயம் பசியால் வாடிய ஒருவனுக்குச் சிறிது உணவும் நீரும் கொடுத்தேன். நான் கொடுத்த உணவு, பேய்களுக்காக வைக்கப்பட்ட உணவாகும். ஆதலால் நான் இறந்தவுடன், பேயாக மறுபிறப்பில் பிறந்தேன். போன ஜென்மத்தில், நான் உணவும், நீரும் தானமாகக் கொடுத்ததால், இந்த ஜென்மத்தில் எனக்கு உணவுக்கும் நீருக்கும் பஞ்சமில்லை. அத்துடன் ஒரு குடையையும் தானமாகக் கொடுத்திருந்தேன். அதுவே க்ஷமி மரமாக மாறியுள்ளது. மற்றவர்கள் எந்த தானமும் முன் ஜென்மத்தில் செய்யாததால், இங்கு பேய்களாக மாறி உலவுகின்றனர்.
உடனே தர்மா, உங்களை எவ்வாறு இந்த வாழ்க்கையினின்று விடுவிப்பது என்று கேட்டான். சோமசர்மா கூறியபடி தர்மா கயைக்குச் சென்று சோமசர்மாவின் இறுதிக் கடனைச் செய்ய, சோமசர்மாவும், அவன் நண்பர்களும் சாபத்தினின்று விடுதலை செய்யப்பட்டனர். தர்மா அதன் பிறகு சிலகாலம் சொர்க்கத்தில் இருந்து, புரூரவா அரசனாகப் பிறந்தான்.
உபமன்யுவும், ரீதமாவும்
முன்னொரு காலத்தில் விதமன்யு என்றொரு பிராமணன் வசித்து வந்தான். அவன் மனைவி ஆத்ரேயி. இவர்களுக்கு உபமன்யு என்றொரு மகன் இருந்தான். அவர்கள் மிகவும் ஏழையாக இருந்த காரணத்தினால், அக்குழந்தைக்குப் பாலினைக் கொடுக்க அவர்களால் முடியவில்லை. ஆதலால் ஆத்ரேயி கஞ்சி தயாரித்து, அதனைப் பால் என்று கூறி உபமன்யுவைக் குடிக்குமாறு செய்து வந்தாள்.
ஒரு சமயம், உபமன்யுவும், அவன் தந்தையும் செல்வந்தனாகிய ஒரு பிராமணன் வீட்டிற்குச் சென்றனர். உபமன்யு, அதன்பிறகு தன் தாய் கொடுத்த கஞ்சியைக் குடிக்க மறுத்தான். வேறுவழி தெரியாத ஆத்ரேயி, மகனிடம் “நீ நல்ல பாலினைக் குடிக்க விரும்பினால், சிவனை ஜெபிக்க வேண்டும். விஷ்ணுவும் சிவனிடம் வேண்டித்தான் தனக்குத் தேவையானவற்றைப் பெற்றார். இதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்” என்று கூறினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாமன புராணம் - பகுதி 15 - Vamana Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தர்மா, நான், அவன், உணவு, ஜென்மத்தில், ஆத்ரேயி, மிகவும், இருந்தான், என்றொரு