ஸ்கந்த புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
அவள் தந்தை ஒரு கப்பலைத் தயார் செய்து அவளை அதில் ஏற்றி கடலைக் கடந்து மஹிசாகர சங்கமத்திற்கு அனுப்பி வைத்தார். தன் உடல் இருந்த இடத்திற்குச் சென்று பார்த்த அப்பெண்ணிற்கு ஆட்டின் தலை வெறும் எலும்புக் கூடாக-தோல் மட்டும் சுருங்கி இருப்பதைக் கண்டாள். அந்தத் தலையை எடுத்துக் கொளுத்தி எலும்பையும், சாம்பலையும் மஹிசாகர சங்கமத்தில் போட்டவுடன் அந்தப் புண்ணியத்தால் இவள் ஆட்டுத்தலை மாறி அழகிய மானுடத் தலை வந்து விட்டது. பல அரசகுமாரர்கள் அவளை மணக்க போட்டி போட்டனர். ஆனால் அவள் அதை ஏற்றுக் கொள்ளாமல் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வர்கரேஷ்வரா என்ற பெயருடன் ஒரு லிங்கத்தை ஆட்டின் தலை எரித்த இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள்.
அருணாசல மகிமை
ஒருமுறை சிவனின் மெய்க்காப்பாளனாக உள்ள நந்தி, மார்க்கண்டேய முனிவருக்கு அருணாசல தீர்த்தத்தின் மகிமையைச் சொல்லத் துவங்கினார்.
முன்னொரு காலத்தில் வஜ்ராங்கதன் என்ற மன்னன் காட்டிற்குள் நுழைந்து வேட்டையாடும் பொழுது, ஒரு கஸ்தூரி மானைத் துரத்திக் கொண்டு நீண்ட தூரம் குதிரைமேல் வந்துவிட்டான். மிக்க களைப்புடன் வந்து கொண்டிருந்த மன்னன் களைப்பு மிகுதியால் திடீரென்று குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டான். அவன் விழித்துப் பார்த்தபொழுது அவன் ஏறி வந்த குதிரையும், துரத்தி வந்த மானும் திடீரென்று வித்யாதரர்களாக மாறி ஆகாயத்தில் செல்லத் தயாராக இருந்ததைப் பார்த்தான். வியப்படைந்த பாண்டியன் நீங்கள் யார் என்று கேட்க நாங்கள் வித்யாதரர்களாக இருந்தவர்கள். ஒருமுறை துர்வாச முனிவர் ஆசிரமத்தின் பக்கத்தில் சென்றோம். அவர் தவத்தைக் கலைக்கக் கருதி நான் காலால் பலமுறை பூமியை உதைத்தேன். என் நண்பன் ஆசிரமத்தைச் சுற்றி இருந்த வாசனைப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தான். தவம் கலைந்த துர்வாசர் தரையைக் காலால் தட்டிய என்னைக் குதிரையாகப் பிறக்கக் கடவாய் என்றும், வாசனைப் பூக்களைப் பறித்த என் நண்பனைக் கஸ்தூரி மானாகப் பிறப்பாய் என்றும் சபித்தார். நாங்கள் அழுது மன்னிப்புக் கேட்டவுடன் உங்களுடைய வாழ்க்கையில் எப்பொழுது அருணாசல மலைக்குப் பக்கத்தில் வருகிறீர்களோ அப்பொழுது மறுபடியும் வித்யாதரர்களாக மாறுவீர்கள் என்று சாபவிமோசனம் தந்தார். இப்பொழுது உங்கள் தயவால் அருணாசல மலைக்குப் பக்கத்தில் வந்துவிட்டோம். எங்கள் சாபமும் ஒழிந்தது' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டனர்.
மன்னன் இவ்வளவு சிறந்த புண்ணிய க்ஷேத்திரத்தை விட்டுப் போக மனமில்லாமல் மகனிடம் ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிட்டு மலையிலேயே தங்கிவிட்டான். தங்கியதோடு மட்டுமல்லாமல் தினமும் மலையைச் சுற்றி வந்தான். மரம், செடி கொடிகளில்லாத அப்பகுதியில் நிறைய மரம் வளர்ந்தது. குளம் வெட்டிப் பல நன்மைகள் செய்தான். மூன்றாண்டுகள் கழிந்த பிறகு சிவன் அம்மன்னன் முன் தோன்றி உன்னுடைய சாபம் தீர்ந்துவிட்டது. நீ இந்திரன். இந்திரனாக இருந்தபொழுது என்னை மதிக்காமல் அகங்காரத்தோடு நடந்து கொண்டதால் இந்த மானுடப் பிறப்பை அடைந்தாய். இப்பொழுது நீ செய்த சிவபுண்ணியத்தால் உன் சாபம் நீங்கிவிட்டது. இந்திரலோகம் சென்று இந்திரப் பதவியை மேற்கொள்ளலாம் என்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 15 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அருணாசல, மன்னன், பக்கத்தில், வித்யாதரர்களாக, செய்து, மஹிசாகர, சென்று, ஒருமுறை