முன்னுரை - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
இப்புராணங்களின் காலத்தை நிர்ணயிப்பது கடினமான காரியமாகும். காரணம் எந்த ஒரு புராணமும் தோன்றிய நிலையில் இன்றில்லை. இந்தியாவில் தோன்றிய எல்லா நூல்களையும் போலப் புராணங்களிலும் மூலத்தைவிட இடைச் செறுகல் பகுதி மிகுத்துக் காணப்படுகின்றன. திரு. எஸ்.டி. குல்கர்னி பதிப்பித்த 'The Puranas என்ற நூலில் இன்றைய ஆராய்ச்சியாளர் பலரும் ஏற்காத முறையில் ஆதிசங்கரர் காலத்தை கி.மு. 509 என்றும், சங்கரரின் ஆசிரியருக்கு ஆசிரியரான கெளடபாதரின் காலத்தை கி.மு. 600 என்றும் கொள்கிறார். புத்தருடைய சாங்கிய மத நியாயவாதங்களை வாதிட்டு வெல்ல முயன்ற சங்கரர் காலத்தை கி.மு. 509 என்று கூறுவது பொருத்தமா என்று சிந்திக்க வேண்டும். இவ்வாறு சங்கரரை கி.மு.விற்குக் கொண்டு போவதால் புராணங்களை முன்னே கொண்டு செல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. ஆதிசங்கரர் தம்முடைய பாஷ்யத்தில் விஷ்ணு புராணத்திலிருந்து பல பாடல்களை மேற்கோள் காட்டுவதால் விஷ்ணு புராணம் கி.மு. 500க்கு முற்பட்டது என்று திரு. குல்கர்னி கூறுகிறார். இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலோரால் ஏற்றுக் கொண்டுள்ளபடி வேதகாலம் என்பதே கி.மு. 1500 முதல் 1000 வரை உள்ளதாகும். திரு. குல்கர்னி அவர்கள் வேதம் நான்காகப் பிரிக்கப்பட்ட காலத்தை கி.மு. 3200 என்று கொள்கிறார். வேதத்தை வகுத்தவர் வியாசர் ஆதலாலும், அந்த வியாசரே புராணங்களின் ஆசிரியர் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளதாலும், புராணங்களின் காலம் கி.மு. 3100 என்ற முடிவிற்கு வருகிறார் குல்கர்னி. எல்லாவற்றிற்கும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட பழைமையைக் காட்டுவதால் அதற்கொரு சிறப்பு கிடைக்குமென திரு. குல்கர்னி போன்றவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.
இந்தக் கால ஆராய்ச்சிக் கற்பனையை ஒதுக்கிவிட்டு, சில சிந்தனைகளைக் கைக் கொள்ளவேண்டும். சில புராணங்கள் சூரிய, சந்திர பரம்பரையைக் கூறும்பொழுது புத்தர்வரை பேசுகிறது. அடுத்தபடியாக கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த திருநாவுக்கரசர் 'இலிங்க புராணத்துள்ளார்’ என்று சிவனைக் குறிப்பதாலும், கி.பி. ஏழின் பிற்பகுதியில் வாழ்ந்த திருமங்கை மன்னன் 'இலிங்கத்திட்ட புராணத்தீர்' என்று கூறுவதாலும், பெரும்பாலான புராணங்களின் கீழ் எல்லை கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டு என்று கருதலாம். இதன் மேல்எல்லை கி.மு. 3 அல்லது 2ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னுரை - பகுதி 9 - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, காலத்தை, புராணம், குல்கர்னி, திரு, புராணங்களின், இடைச், வேண்டும், விஷ்ணு