முன்னுரை - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
இப்புராணங்கள் அனைத்துமே, இவ்வுலகிடைப் பிறந்த மனிதன் பல்வேறு சிக்கல்கள் நிறைந்திருக்கும் வாழ்க்கையில் எவ்வாறு அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், தர்ம, அர்த்த, காமம் ஆகிய மூன்றையும் எப்படி அளவறிந்து வாழ்க்கையில் மேற் கொள்ள வேண்டும் என்பதையும் கதைகளுள் புகுத்தி நமக்கு அறிவுறுத்துகின்றன.
இந்த எல்லாப் புராணங்களிலும் முடிவுரை என்ற தலைப்புடன் சில பகுதிகள் காணப்படுகின்றன. இந்தப் புராணத்தை ஒருமுறை படித்தாலும், கேட்டாலும் இன்ன இன்ன பயன் ஏற்படும்; இருமுறை, மும்முறை படித்தால், கேட்டால் இன்ன பயன் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருப்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பல்வேறு தவறுகளைச் செய்த ஒருவன் இவற்றை ஒருமுறை படித்து விட்டால் தன் பாவங்களிலிருந்து விடுதலை அடைவான் என்று சொல்வது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நகைப்பைத் தருவதாகும். ஒருவன் செய்த குற்றத்திற்குத் தண்டனை அனுபவிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம் என்பது இந்த நாட்டின் வினைக் கொள்கையோடு (Kama theory) மாறுபட்டதாகும். அப்படியிருக்க இவ்வாறு கூறுவதன் நோக்கம் என்ன? எத்தகைய குற்றம் செய்தவனும் முழு நம்பிக்கையோடு, ஈடுபாட்டுடன் இப்புராணங்களைக் கேட்பானாயின் அவன் தன் பிழைகளுக்கு வருந்துவான். மேற்கொண்டு அத்தகைய தவறுகளைச் செய்யமாட்டான் என்பதே அடிப்படைக் கருத்தாகும். இதனைப் புரிந்து கொள்ளாவிட்டால், புராணங்களின் அடிப்படையைத் தவாறகப் புரிந்துகொள்ள நேரிடும். கொனாரக்கில் உள்ள சூரியன் சிலையையும், புருஷோத்தம நகரிலுள்ள சிவன், விஷ்ணு சிலைகளையும் ஒருமுறை தரிசித்தால், தீர்த்தங்களில் ஒருமுறை குளித்தால் எல்லாப் பாவங்களும் போய் விடும் என்று சொல்வதன் கருத்தும் இதுவேயாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னுரை - பகுதி 6 - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, புராணம், சிறப்பித்தும், ஒருமுறை, இன்ன, வேண்டும்