முன்னுரை - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
இவ் வடமொழிப் புராணங்களைப் பொருத்தமட்டில் பஞ்சலட்சணம் என்று சொல்லப்படும் 5 பகுதிகள் ஒவ்வொரு மகாபுராணத்திலும் இடம் பெற்றிருக்க வேண்டும். அவையாவன: 1. சர்கா எனப்படும் பிரபஞ்ச உற்பத்தி 2. பிரதிசர்கா எனப்படும் பிரளயத்திற்குப் பின் ஏற்படும் மறு உற்பத்தி 3. வம்ஸா எனப்படும் தெய்வங்கள் சூரியன், சந்திரன் இவர்கள் பரம்பரையினர் ஆகியவர்கள் பற்றிய வரலாறு 4. மன்வந்திரங்களின் தோற்றம், நிலைபெறும் கால அளவு, காலங்களை அளவிடும் முறை, இதுவரை நடைபெற்ற மன்வந்திரங்கள் என்பவற்றைக் கூறுவதுடன் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வைவஸ்வத மனுவின் நடைமுறை 5 வம்ஸானுசரிதா எனப்படும் அரச பரம்பரையினரின் செயல்கள் பற்றி சொல்வன என்பவையாம். எல்லா மகாபுராணங்களும் இவ்வைந்தையும் சுருக்கமாகவும் விரிவாகவும் சொல்வதைக் காணலாம். இந்த ஐந்து இலக்கணங்களும் புராணங்கட்கு இருக்க வேண்டும் என்று சொல்வதைப் பார்த்தால் ஒன்றை அறிந்து கொள்ள முடிகிறது. மனிதனும் அவன் வாழும் இந்தப் பிரபஞ்சமும், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழித்து, மறுபடியும் படைக்கின்ற தெய்வங்களும் ஏதோ தனித்தனியாகக் காணப்படுபவையல்ல என்பதை வலியுறுத்துவதே இப்புராணங்களின் உள்நோக்கமாகும். இவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட முழுத்தன்மை (integrated whole) என்பதை அறிதல் வேண்டும். ஒன்றை யொன்று எவ்வளவு சார்ந்துள்ளன, ஒன்றை ஒன்று எவ்வளவு பற்றி நிற்கின்றன என்பதை அறிவுறுத்துவதே புராணங்களின் உள்நோக்கமாகும்.
ஐந்தாவதாக உள்ள அரச பரம்பரையினரின் வாழ்க்கை பற்றிப் பேசும் புராணப் பகுதிகளிலிருந்து மற்றொன்றையும் காணமுடியும். தம்மால் ஆளப்பெறும் மக்களின் நலங் கருதியே இந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். ஒருவர். இருவர் இதற்கெதிராகத் தன்னலத்தைப் பெரிதாக்கி மக்களுக்குத் தீங்கிழைக்கும் ஆட்சிமுறையைக் கையாண்டால் முனிவர்கள் முதலானவர்கள் அந்த அரசனுக்கு புத்தி புகட்டுவதும், அந்த உபதேசம் பயன்படாத பொழுது அந்த அரசனையே கொன்று விடுவதும் இப்புராணங்களில் காணக் கிடைக்கின்றன. இப்புராணங்கள் தோன்றுவதற்குரிய காரணங்களும் அறியப்பட வேண்டும். பிரபஞ்சத்தின் தோற்றம், அழிவு, மறு உற்பத்தி, கிருஷ்ணன் போன்ற மகாத்மாக்களின் வரலாறு ஆகியவை கற்றவர், கல்லாதவர், செல்வர், வறியர், உயர்குலத்தோர், தாழ்குலத்தோர் ஆகிய அனைவராலும் அறியப்பட வேண்டும். வேதம் போன்றவை பிராமணர் களுக்கே உரியவை என்று பிற்காலத்தில் வரையறை செய்யப்பட்டபின் எல்லோரும் அறிவு பெறக்கூடிய வாய்ப்பே தடை செய்யப்பட்டுவிட்டது. அந்நிலையில் மேலே கண்டவற்றைப் பொதுமக்களுக்கு குறிப்பாக சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்குங்கூட இவற்றைப் பற்றிச் சொல்ல புராணங்கள் பயன்பட்டன.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 10 | 11 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முன்னுரை - பகுதி 4 - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், எனப்படும், அந்த, என்பதை, உற்பத்தி, ஒன்றை