நாரத புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
இயமன் யோசனைப்படி பகீரதன் பெருந்தவம் மேற் கொண்டு கங்கையை பூமிக்கு வரவழைப்பதற்காகத் தவம் செய்வதற்குரிய இடத்தை நாடிச் சென்றான். கோதாவரி நதிக் கரையில் பிருகு முனிவரின் ஆசிரமத்தைக் கண்டு அவரிடம் பின்வருமாறு பேசினான்: “முனிவரே! தாங்கள் மிகப் பெரிய தவசி. ஞானியும் கூட தருமத்தைப் பற்றியும் சத்தியத்தைப் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. என்னைத் தங்களுடைய மகன் போலப் பாவித்து இவற்றிற்கு விடை கூற வேண்டும்.”
“சத்தியம் என்றால் என்ன? அஹிம்சை என்றால் என்ன? நல்லவர்கள் என்பவர்கள் யார்? புண்ணியம் என்றால் என்ன? விஷ்ணுவை எவ்வாறு வழிபட வேண்டும்?”
இவ் வினாக்களைக் கேட்ட பிருகு முனிவர் விடை கூற ஆரம்பித்தார்: "சத்தியம் என்பது ஒருவனுடைய சமய அடிப்படையில் சொல்லப்பட வேண்டியவை. அந்தச் சத்தியம் அந்தச் சமயக் கொள்கைகளை மறுப்பதாக இருக்கக் கூடாது. அஹிம்சை என்பது பிற உயிர்கள் எதற்கும் எவ்விதத் தீங்கையும் இழைக்கக் கூடாது என்பதாம். தீயவர்கள் என்பவர்கள் ஒருசிலரைப் பகைவர்கள் என்று கருதி அவர்களுக்குத் துன்பம் செய்வார்கள். இவர்கள் சமயத்திற்கு மாறுபட்டவர்களாய் அறிவினர்களாய் இருப்பர். தீயவர்களுக்கு எதிரானவர்கள் நல்லவர்கள் என்று போற்றப்படுவர். அவர்கள் வேதங்களைக் கற்பதோடு அவர்கள் சமயத்தில் சொல்லப் பட்டவற்றைப் போற்றிப் பாதுகாப்பார்கள். இவர்கள் பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். இந்த நல்லவர்கள் செய்யும் எல்லாக் காரியங்களும், புண்ணியங்களாக மாறும். விஷ்ணுவை வழிபடுவதற்கு இதுதான் குறிப்பிட்ட வழி என்று ஒன்றும் இல்லை. விஷ்ணுவை வழிபடுவதற்குச் சிறந்த வழி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும் விஷ்ணுவே நிறைந்துள்ளார் என்பதை அறிவதாகும். எல்லாப் பொருள்களையும், உயிர்களையும் விஷ்ணுவின் பல வடிவங்களாகவே கருத வேண்டும்.”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 9 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நல்லவர்கள், விஷ்ணுவை, என்ன, என்றால், விடை, வேண்டும், இயமன்