நாரத புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
இப்படித் தவம் செய்பவன் இறுதியில் விஷ்ணுவிடம் வரம் பெற்றுத் தங்களையே தேவலோகத்தில் இருந்து துரத்தி விடுவான் என்று பயந்த தேவர்கள் வடகடல் கரைக்குச் சென்று விஷ்ணுவை வேண்டினர். தேவர்களின் பயத்தைப் போக்கிய விஷ்ணு, பகீரதன் முன் தோன்றி, “பகிரதா! உன் மூதாதை யர்களை நரகத்திலிருந்து விடுவிக்க கங்கையைக் கொண்டுவரத் தவம் புரிகிறாய். அதை நான் அறிவேன். இந்த நிலையில் ஒன்றை நீ அறிந்து கொள்ள வேண்டும். சிவனும், விஷ்ணு மாகிய நானும் வேறு வேறு அல்ல. நாங்கள் இருவரும் ஒருவரே. இதை நன்றாக மனத்தில் பதித்துக் கொண்டு இப்பொழுது சிவனை நோக்கித் தவம் செய்வாயாக!” என்று கூறிவிட்டு மறைந்தார்.
சிவனை நோக்கி பகீரதன் தவம் செய்யத் தொடங்கிய சிறிது காலத்தில் சிவன் அவன் முன் தோன்றினார். ஐந்து தலைகள், பத்து கைகள், எலும்பு மாலைகள், பாம்பு மாலைகள், யானைத் தோல் உடை முடியில் பிறைச் சந்திரன் என்ற கோலத்துடன் சிவன் காட்சி தந்து, “பகீரதா! உன் தவத்திற்கு மகிழ்ந்தேன். நீ சகல செளகரியங்களும் பெற்றுப் பல காலம் இவ்வுலகில் வாழ்வாயாக!” என்று கூறினார். பகீரதன், ‘ஐயனே! என் மூதாதையர்கள் நரகத்தில் இருந்து விடுபடத் தேவ ரூபத்தில் பாயும் கங்காதேவி இம்மண்ணிற்கு வரக் கருணை புரிய வேண்டும்” என்றான். சிவனும், "அப்படியே ஆகட்டும்!” என்று கூறி மறைந்தார். மகிழ்ச்சியடைந்த பகீரதன் புறப்பட்டவுடன் கங்காதேவியும் ஒரு பெண் வடிவு கொண்டு அவன் பின்னேயே சென்றாள். தன் மூதாதையர்கள் எரிந்து சாம்பலான இடத்தை அடைந்தான். அந்தச் சாம்பல் மேல் கங்கை பொங்கிப் பாயவே சகரர்கள் நரகிலிருந்து விடுபட்டுச் சுவர்க்கம் சென்றார்கள்.
விரதங்கள்
நாரத புராணம் பின்வரும் விரதங்கள் பற்றி விரிவாகக் கூறுகிறது.
ஏகாதசி விரதம்
மாதத்தில் சுக்கிலபட்சத்தில் ஏகாதசி திதி அன்று அனுஷ்டிக்கப்படுவது. இரவு முழுவதும் கண் விழித்திருந்து, காலையில் சாளக்கிரமத்திற்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். எள்ளை அக்னியில் போடுவதுடன், நல்ல ஆகாரம் தயார் செய்து விஷ்ணுவிற்கும், லக்ஷ்மிக்கும் நிவேதனம் செய்து விஷ்ணு பக்தர்களுக்கு விருந்து செய்ய வேண்டும். துவாதசி அன்றும் இதனையே செய்ய வேண்டும். பல யாகங்கள் செய்வதைக் காட்டிலும் இந்த விரதங்களை மேற்கொள்வதால் அதிகமான புண்ணியம் கிடைக்கும்.
பெளர்ணமி விரதம்
பிராமணர் முதலிய நான்கு வர்ணத்தாரும், பெண்களும் கூட மேற்கொள்ளுகின்ற விரதமாகும். பெளர்ணமி அன்று செய்யப்படுவதால் இது பெளர்ணமி விரதம் என்று சொல்லப்படும். இந்தப் பெளர்ணமி விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கப்படலாம். பன்னிரண்டு மாதங்களிலும் விரதம் இருந்து, கார்த்திகை மாதத்தில் இது முடிக்கப்படும் போது விஷ்ணுவிற்கும், லட்சுமிக்கும் பிரசாதங்கள் படைத்து வழிபடுவதால் இது லஷ்மி நாராயண விரதம்" என்று சொல்லப்படும்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 10 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தவம், பகீரதன், விரதம், அவன், பெளர்ணமி, வேண்டும், செய்ய, இருந்து, செய்து, கொண்டு, விஷ்ணு