நாரத புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
அதிதியின் தவம்
திதியின் மரபில் வந்த வலி அசுரனாக இருந்தாலும், விஷ்ணு பக்தி மிக உடையவனாக இருந்தான். மாபெரும் வலிமை உடையவன் ஆதலால் மூன்று உலகங்களையும் வென்று, தேவர்களைத் தோல்வியுறச் செய்தான். தேவர்களும் இந்திரனும் பூவுலகில் மானுட வடிவம் கொண்டு திரிய லாயினர்.
அதிதியின் மரபில் வந்த தேவர்களும் இந்திரனும் வலியிடம் தோற்று மாறுவேடத்துடன் அலைந்து திரிவதை அறிந்த அதிதி, விஷ்ணுவைக் குறித்துத் தான் தவம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தாள். இமயமலைக்குச் சென்று கைகளைத் துக்கிக் கொண்டு நின்றபடியே பல காலமும், ஒரு காலில் நின்றபடியே பல காலமும், அந்த ஒரு காலின் கட்டை விரலில் நின்றபடியே பல காலமும் தவம் செய்து வந்தாள். தவம் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே உணவு உண்பதை விட்டுவிட்டுப் பழங்களையே உண்டாள். சில காலம் கழித்து அதையும் நிறுத்திவிட்டுத் தண்ணிரை மட்டும் குடித்து வாழ்ந்தாள். பிறகு அதையும் நிறுத்திவிட்டுக் காற்றை மட்டும் சுவாசித்து வாழ்ந்தாள்.
அதிதியின் கடுமையான தவம் பற்றி வலிக்குத் தகவல் போயிற்று. எப்படியாவது அதிதியின் தவத்தைக் கெடுக்க வேண்டுமென்று வலி முடிவு செய்தான். அவனுடைய ஏவலால் சில அசுரர்கள் தேவர்களைப் போல் உருமாறி அதிதியிடம் வந்தனர். அதிதியைப் பார்த்து, “தாயே, எங்களுக்காக நீங்கள் ஏன் இவ்வளவு கடுமையான தவம் செய்கிறீர்கள்?
இத் தவத்தினால் ஒருவேளை தாங்கள் இறந்து போய்விட்டால் நாங்கள் யாரிடம் சென்று முறையிட முடியும்?” என்று வேண்டிக் கொண்டார்கள் அந்தப் போலித் தேவர்கள்.
அவர்கள் வேண்டுதல் எதுவும் அதிதியின் மனத்தைக் கலைக்கவில்லை. தங்களால் அவள் மனநிலையை மாற்ற முடியவில்லை என்று கண்டுகொண்ட அந்தப் போலித் தேவர்கள், உண்மையான தங்கள் அசுர வடிவை எடுத்துக் கொண்டு பல ஆயுதங்களை அவள் மேல் ஏவினார்கள். அதிதியின் தவ வலிமையால் அந்த ஆயுதங்கள் எதுவும் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை. மிக்க கோபம் கொண்ட அசுரர்கள் வாயிலிருந்து நெருப்புக் கிளம்பிற்று. அந்த நெருப்பும் அவளை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக அவள் தவம் செய்த வனத்தையே அந்த நெருப்பு கட்டுப் பொசுக்கிற்று. அந்த அசுரர்களையும் அதே நெருப்பு கொன்று விட்டது. இதனை அடுத்துவரும் வலி- வாமனன் கதை முன்னரே பிரம்ம புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 7 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தவம், அதிதியின், கொண்டு, அந்த, விஷ்ணு, முடியவில்லை, சென்று, நாங்கள், அவள், காலமும், நின்றபடியே, ஒன்றும், செய்ய, பிராமணன்