நாரத புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
விருகா என்ற மன்னனின் மகனாகிய வஹீ மிகச் சக்தி வாய்ந்த பேரரசனாவான். உலகங்களை எல்லாம் ஜெயித்துத் தன் குடைக்கீழ் கொண்டு வந்ததுடன் நில்லாமல், ஏழாகப் பிரிந்துள்ள ஒவ்வொரு துவிபத்திலும் சென்று அஸ்வமேத யாகம் புரிந்தான். தொண்ணுறாயிரம் ஆண்டுகள் அவன் ஆட்சி நேர்மையாக நடைபெற்றது. ஒருவன் அழிவிற்குக் காரணம் நான்கு என்று சொல்லப்படுகிறது. இளமை, அதிகமான செல்வம், குவிந்துவிட்ட அதிகாரம், எதிரது நோக்கும் அறிவின்மை என்ற இந்த நான்கும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆண்ட வஹீயிடம் சேர்ந்தன. ஆணவம் தலைக்கேறியது. என்னைப்போல் இதுவரை யாரும் இருந்ததில்லை. நானேதான் கடவுள் என்று எண்ணிக் கொண்டு எல்லை மீறி நடக்கத் தொடங்கினான். லட்சுமி அவனை விட்டுப் போய்விட்டாள். பகை அரசர்கள் காலம் பார்த்திருந்தார்கள். ஹைஹய மன்னனும், தலஜங்க மன்னனும், வஹியுடன் போர் செய்து தோற்கடித்தனர். அரசை இழந்த வஹீ காட்டிற்கு ஓடினான். அவனுடைய மனைவியும் அவனைப் பின் தொடர்ந்தாள்.
காலங் கடந்த நிலையில் வஹீ தன் பிழைகளை நினைந்து வருந்தினான். முதுமை அவனைப் பற்றிக்கொண்டது. கடைசியாக அந்த வறுமை நிலையில் வஹீ இறந்து விட்டான். அப்போது அவன் சேர்ந்திருந்த இடம் அவுர்வ முனிவரின் ஆசிரமம் ஆகும். இறந்த கணவனுடன் அக்னிப் பிரவேசம் செய்ய அவன் மனைவி முடிவு செய்தாள். ஆனால் அவுர்வ முனிவர், "மகளே! இப்பொழுது நீ கருவுற்றிருக்கிறாய். கருவுற்ற நிலையில் உடன்கட்டை ஏறுவது கொலை புரிதலை ஒத்த பாவமாகும். உன் வயிற்றில் பிறக்கப் போகும் குழந்தை பெரிய அரசனாகப் போகிறான். ஆகவே தீப்பாயும் எண்ணத்தை விட்டுவிடு' என்று கூறினார்.
அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொண்ட யாதவி தன் எண்ணத்தைக் கைவிட்டு வஹீவிற்கு இறுதிக் கடன்கள் செய்தாள்.
செளதசாவின் கதை
இக்கதை ஏற்கெனவே விஷ்ணு புராணத்தில் கூறப் பட்டுள்ளது. அக்கதையின் தொடர்ச்சியினை இங்கு தருகிறோம்.
சாபத்தால் ராட்சசனாகி விட்ட செளதசா அலைந்து திரியும் பொழுது, நர்மதை ஆற்றங்கரையில் ஒரு முனிவரின் ஆசிரமத்திற்குப் பக்கத்தில் சென்றான். உண்ணவேண்டும் என்று அவரைப் பற்றிக் கொண்டான். முனிவரின் மனைவி தன் தவ வலிமையால் இந்த அரக்கனின் பழைய வரலாற்றைக் கூறி, "நீ செளதசா என்ற மன்னன். சாபத்தால் இந்த நிலையை அடைந்தாய். என் கணவராகிய முனிவரைத் தின்று பாவத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம். அவரை விட்டு விடு' என்று கெஞ்சினாள். அரக்கனாகிய செளதசா அவள் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அம்முனிவரைத் தின்று விட்டான். அதுகண்டு பொறாத முனிவரின் மனைவி இரண்டு சாபங்களைத் தந்தாள். முதலாவது: அரக்கனே! உன் சாபம் நீங்கி நீ செளதசாவாக ஆனபிறகும் உன் மனைவி முகத்தில் எப்பொழுது விழிக்கிறாயோ அப்பொழுதே இறந்து விடுவாய். 2. வசிட்டர் கூறிய பன்னிரண்டு வருடங்களோடு இல்லாமல், மிக நீண்டகாலம் ராட்சசனாகவே இருக்கக் கடவாய் என்பது.
முனிவர் மனைவியின் இரண்டு சாபங்களையும் கேட்ட செளதசா அரக்கன். “அம்மா! நான் உங்கள் கணவரைத் தின்று ஒரு குற்றம் புரிந்தேன். அதற்கு ஒரு சாபம் தருவது நியாயம். இரண்டாவது சாபம், காரணம் இல்லாமல் உங்கள் ஆத்திரத்தின் விளைவால் கொடுத்தீர்கள். எனவே இப்பொழுது நான் உங்களைச் சபிக்கிறேன். நீங்கள் இந்த விநாடியிலிருந்து பிசாசாக மாறி அலைவாயாக’ என்று சாபம் கொடுத்தான். உடனே முனிவரின் மனைவி பிசாசாக மாறிவிட, செளதசா அரக்கனும் முனிவரின் மனைவியாகிய பிசாசும் காட்டில் அலைந்து திரிந்தனர். இறுதியாக ஓர் ஆலமரத்தடியில் இருவரும் சென்று தங்கினர். இரண்டு புதியவர்களைப் பார்த்து அந்த ஆலமரத்தில் ஏற்கெனவே இருந்த அரக்கன் நீங்கள் இருவரும் யார்? ஏன் இங்கு வந்தீர்கள்?’ என்று வினவினான். செளதசா நடந்தவற்றைக் கூறிவிட்டு "அரக்கனே! நீ யார்?" என்றான். அவன் “இதற்கு முன், மகத நாட்டில் சோமதத்தா என்ற பெயருடன் ஒரு பிராமணனாக வாழ்ந்தேன். ஏதோ காரணத்தால் என் குருவை மதியாமல் அவமானப்படுத்திவிட்டேன். அதன் பயனாக அரக்கனாக மாறினேன்” என்று கூற அந்த இரு அரக்கர்களும், இந்தப் பெண் பிசாசும், மரத்திலேயே வாழ்ந்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 6 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, செளதசா, முனிவரின், மனைவி, சாபம், ", அவன், இரண்டு, நிலையில், அந்த, தின்று