நாரத புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் நர்மதை ஆற்றங்கரையில் காலவா என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் பத்ரஷிலா என்பவன் ஜதிஸ்மராவாக அதாவது பழம்பிறப்பை அறியும் வல்லமை உடையவனாக இருந்தான். சிறு குழந்தையாக இருந்த பொழுது களிமண்ணில் விஷ்ணுவிற்குக் கோயில்கள் கட்டி, அதனை வணங்கி வந்தான். இதில் மகிழ்ச்சி அடைந்த காலவ முனிவர், "மகனே! நீ செய்யும் காரியங்களையும், மேற்கொள்ளும் விரதங்களையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு இளம் வயதில் யாரிடமும் கேட்காமல் எப்படி இந்த விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உனக்கு உண்டாயிற்று?” என்று கேட்டார். காலவ முனிவரைப் பொறுத்தவரை தம்முடைய மகனுக்கு ஜதீஸ்மரா (பழம் பிறப்பு நினைவு) ஆற்றல் உண்டு என்பது தெரியாது. எனவே தந்தையின் கேள்விக்கு விடை அளிக்கலானான்.
"தந்தையே! எனக்கு ஜதீஸ்மரா ஆற்றல் உண்டு. போன ஜன்மத்தில் யமனுடன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது இதை அறியலானேன். அந்தப் பிறப்பில் தர்ம கீர்த்தி என்ற பெயருள்ள அரசனாக இருந்தேன். அப்பொழுது என் குருவாக வாய்த்தவர் தத்தாத்ரேய முனிவர் ஆவார். அவர் வழிகாட்டலில் ஆட்சியைத் தொடங்கிய நான், ஒன்பதினாயிரம் வருடங்கள் ஆட்சி செய்தேன். அதிகாரம், செல்வம் சேர்ந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக அறவழியை விட்டுவிட்டுத் தீய வழிகளில் செல்லலானேன். நாளாவட்டத்தில் வேதங்களை மறந்து அதில் சொல்லப்பட்ட வழிகளையும் மறந்து, வாழ்க்கை நடத்திப் பாவத்தைச் சேர்க்கலானேன். அந்நிலையில் என் புண்ணிய மூட்டை குறைந்து, பாவ மூட்டை வளர்ந்து கொண்டே வந்தது. ஒர் அரசனுக்கு அந்நாட்டு மக்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் ஆறில் ஒரு பங்கு வரியாகச் சேருகிறது அல்லவா? அதைப் போலவே என் நாட்டு மக்களும் தர்மத்தை மறந்து செய்த பாவங்களிலும் ஆறில் ஒரு பங்கு என்னை வந்து அடைவதாயிற்று. ஆகவே என்னுடைய பாவ மூட்டை விரைவில் மிகப் பெரிதாக வளர்ந்தது. இதனிடையில் ஒரு நாள் வேட்டைக்குப் போனேன். பல மிருகங்களைத் துரத்திச் சென்றதால் பசியும் தாகமும் அதிகமாயிற்று. உண்பதற்கோ ஒன்றுமில்லை. ரேலா நதிக்கரையில் ஒர் இடத்தில் பொழுது சாய்ந்து விட்டதால், அந்நதியில் குளித்துக் கரை ஏறும் பொழுது, பல யாத்ரீகர்கள் அங்கு வருவதைக் கண்டேன். அவர்கள் அனைவரும் குளித்துவிட்டு ஒன்றும் உண்ணாமல் விஷ்ணுவை வழிபடக் கண்டேன். என்னைப் பொறுத்தவரை பட்டினி இருக்க வேண்டும் என்று நினைக்கா விட்டாலும், உண்பதற்கு ஒன்றுமில்லாததால் அவர்களோடு சேர்ந்து நானும் விரதம் இருந்தேன். அன்று ஏகாதசி என்று எனக்குத் தெரியாது. மறுநாள் விடியற்காலை பசியால் இறந்து விட்டேன். யமனுடைய படர்கள் யமனுடைய சந்நிதானத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். யமன் சித்ரகுப்தனிடம் என்னுடைய கணக்கைப் பார்க்குமாறு ஆணை இட்டார். சித்ரகுப்தன், "ஐயா! தர்மகீர்த்தி என்ற பெயரில் ஆட்சி செய்த இவன் மிகத் தீயவனாகப் பெரும் பாவ மூட்டையைச் சுமந்து கொண்டு வந்திருக்கிறான். ஆனால் நேற்று ஏகாதசி விரதம் இருக்கையில் இவன் இறந்து விட்டான்” என்று கூறினான். அதைக்கேட்ட யமதர்மன் என்னை அழைத்து வந்த யமபடர் களைக் கடுமையாக ஏசினான். 'ஏகாதசி விரதம் இருப்பவர் களையும், விஷ்ணு பக்தர்களையும் இங்கு அழைத்து வராதீர்கள் என்று எத்தனை முறை உங்களுக்குக் கூறி இருக்கிறேன்” என்று கூறிவிட்டு, என்னை விஷ்ணுலோகம் அனுப்பினான். பல காலம் அங்கு தங்கி, பிறகு தங்கள் மகனாக இப்பொழுது பிறந்துள்ளேன்.
'ஏகாதசி என்று தெரியாமல் அதனுடைய சிறப்புப் புரியாமல் பட்டினி கிடந்ததற்கே விஷ்ணுலோகத்தில் பல காலம் இருக்கக் கூடுமேயானால், ஏகாதசி என்று தெரிந்து விரதம் இருந்தால், எவ்வளவு சிறப்பு என்று கருதி இப்பொழுது இதனைச் செய்து வருகிறேன்” என்று பத்ரவிலா கூறவும், காலவ முனிவர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 12 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஏகாதசி, முனிவர், விரதம், என்னை, பொழுது, மறந்து, காலவ, ", மூட்டை