பாகவத புராணம் - பகுதி 20 - பதினெண் புராணங்கள்
கிருஷ்ணனால் கொல்லப்பட்ட கம்சனின் இரு மனைவிகளையும் பெற்றவன் ஜராசந்தன் என்னும் மகதப் பேரரசன். மருமகனைக் கொன்றதற்காக யாதவர்களைப் பழிவாங்க நினைத்து மாபெரும் சேனையுடன் புகுந்து பதினேழு முறை சூழ்ந்து கொண்டும், வெற்றியடைய முடியாமல் தோற்றே ஒடினான். பதினெட்டாவது முறையாகத் தான் மட்டும் படையெடுத்து யாதவர்களை அழிக்க முடியாது என்று அறிந்து கொண்ட ஜராசந்தன், காலயவனன் என்ற அரசனின் துணையை நாடினான். போர்க்களத்தில் யாராலும் தனக்குச் சாவு வரக் கூடாது என்ற பெரு வரத்தை மகாதேவனிடம் பெற்றிருந்தவன் காலயவனன். ஜராசந்தனுக்குத் துணையாகக் காலயவனன் வருகிறான் என்றறிந்த கிருஷ்ணன் மகாதேவனின் வரத்தைதான் வெல்ல முடியாது என்பதை அறிந்து கடலின் நடுவே துவாரகை என்ற அழகிய நகரை, விஸ்வகர்மா உதவியோடு ஸ்தாபித்தான். யாதவர்கள் அனைவரும் அங்கே குடியேற்றப்பட்டனர்.
ஜராசந்தன் முடிவு
குருக்ஷேத்திர சண்டைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி இது. இந்திரப் பிரஸ்த்தம் பாண்டவர்களுக்கு என்று திருதராஷ் டிரனால் கொடுக்கப்பட்ட பிறகு இந்திரபிரஸ்த்தத்தை ஸ்தாபித்து, யுதிஷ்டிரன் ஆட்சி செய்து வந்தான். சிலகாலம் கழித்து, கிருஷ்ணன் துவாரகையில் இருந்து இந்திரப் பிரஸ்த்தம் வந்து சேர்ந்தான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் யுதிஷ்டிரன் ஒரு ராஜதுய யாகம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தைக் கிருஷ்ணனிடம் சொல்லி அவன் கருத்து என்ன என்று கேட்டான். இது நியாயமானதுதான் என்று கூறிய கிருஷ்ணன், ராஜதுய யாகம் செய்வதானால், யுதிஷ்டிரனுக்கு சமமான அரசர்கள் யாரும் இருக்கக் கூடாது. அனைவரையும் வென்று அடிமைப்படுத்திய பின்புதான் ராஜதுய யாகம் செய்யப்பட வேண்டும் என்று கூறினான் கிருஷ்ணன், 'உங்களைப் பொறுத்தவரை எதிர்த்துப் போர் புரியவேண்டிய ஒரே ஒர் அரசன்தான் இருக்கிறான். அவன் மகத நாட்டு அரசனான ஜராசந்தன். அவனைக் கொல்வது அவ்வளவு எளிதல்ல. ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் செய்யும் போரில்தான் அவனைக் கொல்ல முடியும் என்று கூறிய கிருஷ்ணன், சகாதேவனையும் நகுலனையும் வடக்குத் திசையில் அனுப்பிவிட்டு, கிருஷ்ணன், அருச்சுனன், பீமன் ஆகிய மூவரும் கிழக்கே மகத நாடு சென்றனர். மூவரும் பிராமணர்கள் போல் வேடம் தரித்துக் கொண்டு ஜராசந்தனிடம் யாசகம் கேட்கச் செல்வது போல் சென்றனர். பிராமணர்கள் யாசகம் கேட்டால் தவறாமல் கொடுக்க வேண்டும் என்பது அக்கால மரபு. அம்முறையில், இம் மூவரும் தங்களுக்கு ஒன்று வேண்டும் என்று ஜராசந்தனிடம் கேட்டார்கள். அவர்கள் மூவரையும் எளிதாக அடையாளம் கண்டு கொண்ட ஜராசந்தன் என்ன வேண்டும் என்று கேட்டான். எங்களில் யாராவது ஒருவருடன் நீ போர் புரிய வேண்டும். அதுதான் நாங்கள் கேட்கும் யாசகம் என்றார்கள். அதனை ஒப்புக்கொண்ட ஜராசந்தன், 'நான் கிருஷ்ணனுடன் போர் புரியமாட்டேன். அவன் கோழை. எனக்கு பயந்துகொண்டு மதுராவைக் காலி செய்து கொண்டு, துவாரகைக்கு ஒடிவிட்டான். அருச்சுனன் என்னைவிட இளையவன். பீமன் எனக்குச் சமமானவன். ஆதலால் அவனுடன் போர்புரிகின்றேன்' என்றான்.
மறுநாள் ஜராசந்தனுக்கும். பீமனுக்கும் போர் தொடங்கியது. முதலில் இருவரும் கதாயுதம் ஏந்திப் போர் புரிந்தனர். கதாயுதம் தூள் தூளாகப் போயிற்று. பிறகு அவர்கள் மற்போரில் ஈடுபட்டனர். இருபத்தியோரு நாட்கள் பகல் பொழுதெல்லாம் மற்போர் நடைபெற்றது. இரவில் சகஜமான நண்பர்களைப் போல் இருந்தனர். பீமனால் ஜராசந்தனைக் கொல்ல முடியவில்லை. இதற்கான காரணம் ஒன்று உண்டு. விருகதரதா என்ற மன்னனின் மனைவிக்குப் பிரசவ காலத்தில் குழந்தை பிறக்காமல் இரண்டு தசைப் பிண்டங்கள் பிறந்தன. வெறுத்துப்போன அவள் அந்த இரண்டு துண்டங்களையும் குப்பையில் வீசிவிட்டாள். ஜரா என்ற ராட்சசப் பெண் இந்தப் பிண்டங்களைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துக் கொண்டுபோய் இரண்டு பிண்டங்களையும் ஒன்றாகச் சேர்த்து அதற்கு உயிர் உண்டாக்கினாள். சந்தி' என்றால் இரண்டு ஒன்றாகச் சேர்வது என்பது பொருள். ஜரா வளர்த்ததனால் 'ஜராசந்தன்' என்ற பெயர் பெற்றான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 20 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஜராசந்தன், கிருஷ்ணன், வேண்டும், போர், இரண்டு, போல், யாசகம், மூவரும், ராஜதுய, காலயவனன், அவன், யாகம்