முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » கிரிகோர் மெண்டல் (கி.பி.1822 - கி.பி.1884)
கிரிகோர் மெண்டல் (கி.பி.1822 - கி.பி.1884)
மரபுவழி பற்றிய அடிப்படைத் தத்துவங்களைக் கண்டுபிடித்தவர் என இன்று புகழ் பெற்றுள்ளவர் கிரிகோர் மெண்டல் ஆவார். இவருடைய ஆயுட்காலத்தில் இவருடைய அற்புத ஆராய்ச்சி, அறிவியல் உலகத்தினரால் புறக்கணிக்கப்பட்டது. இவர் யாரும் அறியாத ஒரு சமய குருவாகவும், ஒரு பொழுதுபோக்கு விஞ்ஞானியாகவும் தம் வாழ்நாளைக் கழித்தார்.
இன்று செக்கோஸ்லாவாக்கியாவின் ஒரு பகுதியாக இருப்பதும், அன்று ஆஸ்திரியப் பேரரசில் இருந்ததுமான ஹெபின்சன் டார்ஃப் என்னும் நகரில் 1822 ஆம் ஆண்டில் பிறந்தார். 1843 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் பிரன் நகரில் (இன்று செக்கோஸ்லாவாக்கியாவின் புருனோ நகரம்) அகஸ்டைனிய மடாலயத்தில் சேர்ந்தார். இவர் 1847 ஆம் ஆண்டில் ஒரு பாதிரியராக அமர்த்தப்பட்டார். 1850 ஆம் ஆண்டில் ஆசிரியர் தொழிலுக்குரிய ஒரு தேர்வு எழுதினார். இத்தேர்வில் உயிரியலிலும், புவியமைப்பியலிலும் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தார். எனினும் இவரது மடாலயத்தின் பொறுப்பிலிருந்த குரு மட முதல்வர் இவரை வியன்னாப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினார். அங்கு இவர் 1851 முதல் 1853 வரைக் கணிதமும், அறிவியலும் பயின்றார். மெண்டல் ஒரு போதும் ஆசிரியர் சான்றிதழ் பெறவில்லை. எனினும், 1854 முதல் 1868 வரையில், பிரன் நவீனப் பள்ளியில் இயற்கை அறிவியல் கற்பிக்கும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
இதற்கிடையில், 1856 ஆம் ஆண்டு முதற்கொண்டு, தாவர இனப் பெருக்கத்தில் தமது புகழ்பெற்ற பரிசோதனைகளைச் செய்யலானார். 1865 ஆம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற தமது மரபுவழி விதிகளைக் கண்டுபிடித்தார். இதனை ஒரு கட்டுரை வடிவில் பிரன் இயற்கை முடிவுகள் 1866 ஆம் ஆண்டில் "தாவரக் கலப்பினங்கள் பற்றிய பரிசோதனைகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாக அந்தக் கழகத்தில் "நிலைய வெளியீடுகள்" என்ற இதழில் வெளியிடப்பட்டது. அதே இதழில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவரது இரண்டாவது கட்டுரையொன்று வெளியாகியது. பிரன் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் "நிலைய வெளியீடுகள்" அத்துணை புகழ் வாய்ந்த இதழாக இல்லாதிருந்த போதிலும் மெண்டல் தனது ஆய்வுக் கட்டுரையின் படியொன்றை, அப்போது மரபுவழி பற்றிய ஆராய்ச்சியில் தலைசிறந்தவராக விளங்கிய கார்ல் நாகெலி என்பாருக்கு அனுப்பினார். நாகெலி அக்கட்டுரையைப் படித்து, அது பற்றி மெண்டலுக்கு மறுமொழி எழுதினார். ஆனால், அக்கட்டுரையின் அளப்பரிய முக்கியத்துவத்தை நாகெலி புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். மெண்டலின் கட்டுரைகள் பொதுவாகப் புறக்கணிக்கப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு மேலாக அவை மறக்கப்பட்டு கிடந்தன என்றே சொல்ல வேண்டும்.
மெண்டல் 1868 ஆம் ஆண்டில் தமது மடாலயத்தின் குருமட முதல்வராக நியமனம் பெற்றார். அவருடைய நிருவாகப் பணிகள் பெருகியதன் காரணமாக, தமது தாவர பரிசோதனைகளைத் தொடர அவருக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. அவர் 1884 ஆம் ஆண்டில் தமது 61 ஆம் வயதில் காலமானபோது, அவருடைய அளப்பரிய ஆராய்ச்சி பெரும்பாலும் மறக்கப்பட்டு விட்டது. அதற்காக அவருக்கு ஒரு பெருமையும் கிடைக்கவில்லை.
மெண்டலின் அரும்பணி 1900 ஆம் ஆண்டுவரை கண்டு கொள்ளப்படாமலே இருந்தது. அதன்பின், ஹ’யூகோ டி விரிஸ் என்ற டச்சு விஞ்ஞானி, கார்ல் கோரன்ஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானி, எரிக் வான் ஷெர்மாக் என்ற ஆஸ்திரிய விஞ்ஞானி ஆகிய மூவரும் தனித்தனியாக ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தபோது, தற்செயலாக மெண்டலின் ஆய்வுக் கட்டுரையைப் படித்துப் பார்த்தார்கள். அந்த மூவர் ஒவ்வொருவரும் தனித்தனியே தாவரவியல் பரிசோதனைகளைச் செய்தார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே மெண்டலின் விதிகளைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள், ஒவ்வொருவரும் தமது முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பு, பல நூல்களை ஆராய்ந்து, மெண்டலினுடைய மூலக் கட்டுரையையும் கண்டுபிடித்தார்கள். அவர்கள் மூவரும் தங்கள் முடிவுகளில் மெண்டலின் கட்டுரையைக் குறிப்பிட்டார்கள். தங்களுடைய ஆராய்ச்சிகள் மெண்டலின் முடிவுகளை உறுதிப்படுத்துகின்றன என உறுதியாக கூறினார்கள். இந்த மூன்று நிகழ்வுகளும் தனித்தனியே தற்செயலாக ஒருங்கொத்து நிகழ்ந்தது மிகவும் வியப்புக்குரியதாக இருந்தது. மேலும், அதே ஆண்டில், வில்லியம் பேட்டிசன் என்ற ஆங்கிலேய விஞ்ஞானி, மெண்டலின் மூலக் கட்டுரையினைப் படித்துவிட்டு அதனை உடனடியாக மற்ற விஞ்ஞானிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவ்வாண்டின் இறுதிவாக்கில், மெண்டலின் ஆயுட்காலத்திலேயே வந்திருக்க வேண்டிய பாராட்டுகள் அவருக்கு வரலாயின.
மெண்டல் கண்டுபிடித்த மரபுவழி பற்றிய உண்மைகள் யாவை? முதலாவதாக, உயிர் வாழும் உயிரிகள் அனைத்திலும், மரபுப் பண்பு தொடர்வதற்குக் காரணமாக இருக்கும், "மரபுப் பண்புக் கூறுகள்" என அழைக்கப்படும் அடிப்படை அலகுகள் இருந்தன என்று மெண்டல் அறிந்து கொண்டார். இதன் மூலமாக, மரபுவழிப் பண்பியல்புகள் பெற்றோரிடமிருந்து அவர்களின் சந்ததியினருக்க வழிவழியாக வந்தன. மெண்டல் ஆராய்ச்சி செய்த தாவரங்களில், விதையின் நிறம் அல்லது இலையின் வடிவமைப்பு போன்ற தனிப் பண்பியல்புகள் ஒவ்வொன்றும், ஒரிணை மரபுப் பண்புக் கூறுகளின் மூலமாகத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு தனித் தாவரம், ஒவ்வொரு இணையின் ஒரு மரபுப் பண்புக் கூற்றினைப் பெற்றோர் ஒவ்வொருவரிடமிருந்தும் பெற்றது. ஒரு குறிப்பிட்ட பண்புத் திறத்திற்காக மரபு வழியாகப் பெற்ற இரண்டு மரபுப் பண்புக் கூறுகளும் வெவ்வேறாக இருக்குமானால், (எடுத்துக்காட்டாக, பச்சை விதைகளுக்காக ஒரு மரபுப் பண்புக் கூறும், மஞ்சள் விதைகளுக்காக இன்னொரு மரபுப் பண்புக் கூறும் பெறப்படுமேயானால்) அப்போது, பொதுவாக, மேம்பட்டு நிற்கும் மரபுப் பண்புக் கூறின், (இந்தத் தேர்வில், மஞ்சள் விதைகளுக்குரியது) செயல் விளைவு மட்டுமே அந்தத் தனி தாவரத்தில் வெளிப்படையாகப் புலப்படும். ஆயினும், முனைப்புக் குன்றியிருக்கும் மரபுப் பண்புக் கூறு அழிந்து விடுவதில்லை. அந்தத் தாவரத்தின் சந்ததிகளுக்கு அந்தப் பண்புக் கூறு சென்றடையக் கூடும். இனப்பெருக்க உயிரணு அல்லது பாலணு மனிதர்களிடமுள்ள நேரிணையான விந்து அல்லது கரு உயிரணுக்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு இணையின் ஒரு மரபுப் பண்புக் கூறினை மட்டுமே கொண்டிருந்தது என்பதை மெண்டல் கண்டறிந்தார். ஒரு தனிப் பாலணுவில் ஒவ்வொரு இணையின் எந்த மரபுப் பண்புக் கூறும், காணப்படுவதும், அது ஒரு தனி சந்தததிக்குச் சென்றடைவதும் முற்றிலும் தற்செயல் நிகழ்வே என்றும் மெண்டல் கூறினார்.
மெண்டலின் விதிகள், அவை சற்றே மாற்றமைவு செய்யப்பட்டுள்ள போதிலும், மரபு வழிப் பண்பியல் பற்றிய தற்கால அறிவியலுக்குத் தொடக்கமாக அமைந்தன. மெண்டலுக்கு முன்பு தொழில்முறை உயிரியலறிஞர்களாகப் புகழ் பெற்றிருந்த பல விஞ்ஞானிகளுக்குகப் பிடிபடாமலிருந்த இந்த முக்கியமான விதிகளை, ஒரு பொழுதுபோக்கு விஞ்ஞானியாக மட்டுமே இருந்த மெண்டலினால் எவ்வாறு கண்டுபிடிக்க முடிந்தது. நல்ல காலமாக, இவர் தமது ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுத்திருந்த தாவர இனத்தின் முக்கியப் பண்பியல்புகள் ஒவ்வொன்றும், மரபுப் பண்புக் கூறுகளின் ஒரு தனித் தொகுதி மூலமாகத் தீர்மானிக்கப்படக் கூடியதாக இருந்தது. ஆனால், இவர், ஆராய்ச்சி செய்த பண்பியல்புகள் ஒவ்வொன்றும், மரபுப் பண்புக் கூறுகளின் பல தொகுதிகளினால் தீர்மானிக்கப்படக் கூடியதாக இருந்திருக்குமானால், இவருடைய ஆராய்ச்சி மிகவும் கடினமானதாகவே இருந்திருக்கும். மெண்டல், மிகுந்த கவனமும், அளவற்ற பொறுமையும் வாய்ந்த ஒரு பரிசோதனையாளராக இல்லாது போயிருந்தால் அல்லது தமது ஆராய்ச்சிகளின் புள்ளி விவரப் பகுப்பாய்வினைச் செய்வது மிகவும் இன்றியமையாதது என்பதை மெண்டல் நன்கு உணர்ந்து கொள்ளாமற் போயிருந்தால், அவருடைய இந்த நற்பேறு அவருக்கு எந்த விதத்திலும் உதவியாக இருந்திருக்காது. மேற்சொன்ன அங்கொன்றும், இங்கொன்றுமான நிகழ்வு காரணமாக, ஒரு தனிச் சந்ததியின் பண்புத் திறன்களின் எந்தப் பண்புத் திறம் மரபு வழி வந்தடையும் என்பதை ஊகித்துக் கூறுவது பொதுவாகக் கடினம். ஏராளமான பரிசோதனைகள் செய்ததன் மூலமாக (மெண்டல் 21,000-க்கும் மேற்பட்ட தனித் தாவரங்களுக்கான பரிசோதனைகளின் முடிவுகளைப் பதிவு செய்து வைத்திருந்தார்). தமது முடிவுகளைப் புள்ளியியல் முறையில் பகுப்பாய்வு செய்ததன் மூலமாகவும் மெண்டல் தமது விதிகளை வகுத்தமைக்க முடிந்தது.
மரபுவழி விதிகள் மனித அறிவுக் கருவூலத்திற்கு ஒரு முக்கியமான சேர்மானம் என்பதில் ஐயமில்லை. மரபுவழிப் பண்பியல் பற்றிய நமது அறிவு, இதுகாறும் பயன்பட்டதைவிட மிக அதிக அளவில் எதிர்காலத்தில் பயன்படக்கூடும். ஆயினும், இப்பட்டியலில் மெண்டலுக்குரிய இடத்தை நிருணயிப்பதில் மற்றொரு அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மெண்டலின் கண்டுபிடிப்புகள் அவருடைய வாழ்நாளின்போது அடியோடு புறக்கணிக்கப்பட்டு விட்டன. அவருடைய முடிவுகளை, பிற்காலத்திய விஞ்ஞானிகள் தனித்தனியாகவே கண்டறிந்தனர். எனவே, மெண்டலின் ஆராய்ச்சி ஒதுக்கிவிடத்தக்கது தான் என்று கருதலாம். இந்த வாதம் வலியுறுத்தப்படுமானால், கொலம்பஸ், கோப்பர்னிக்கஸ், ஜோசப் லிஸ்டர் ஆகியோருக்கு ஆதரவாக லைப் எரிக்சன், அரிஸ்டார்க்கஸ் இக்னாஸ், செம்மல்வெய்ஸ் ஆகியோர் விட்டுவிடப்பட்டது போன்றே, மெண்டலும் இப்பட்டியலிலிருந்து முற்றிலுமாக விட்டு விடப்பட வேண்டும் என்று ஒருவர் முடிவுக்கு வரக்கூடும்.
ஆனால், மெண்டலுக்கும் மற்றவர்களுக்குமிடையே வேறுபாடு உண்டு. மெண்டலினுடைய பணி த்ற்காலிகமாகவே மறக்கப்பட்டது. அது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டபோது, மிக விரைவாக உலகப் புகழ் பெற்றது. மேலும், டி விரிஸ், கோரன்ஸ், ஷெர்மாக் ஆகிய மூவரும் இவர் கூறிய விதிகளை மறுபடியும் கண்டுபிடித்தார்கள் என்ற போதிலும், இறுதியில் இவருடைய ஆய்வுக் கட்டுரையைப் படித்து, இவரது முடிவுகளை மேற்கோள் காட்டினார்கள். இறுதியாக, டி விரிஸ், கோரன்ஸ், ஷெர்மாக் ஆகிய மூவரும் தோன்றாமலிருந்தால், மெண்டலின் கண்டுபிடிப்பு செல்வாக்குப் பெறாமல் போயிருக்கும் எனக் கூறுவது சரியன்று. மரபுவழி பற்றி W.O. ஃபர்க் என்பவர் தொகுத்து, பெருமளவில் விற்பனையாகி வந்த நூல் விவரத் தொகுதி ஒன்றில், மெண்டலின் கட்டுரை ஏற்கனவே இடம் பெற்றிருந்தது. அவ்வாறு அந்த நூல் விவரத் தொகுதியில் அது சேர்க்கப்பட்டிருந்தமையால், விரைவிலோ பின்னரோ இத்துறையில் தீவிர ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கண்ணில் மெண்டலின் கட்டுரை நிச்சயமாகப் பட்டிருக்கும். அது மட்டுமின்றி, மேற்சொன்ன மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் கூட, மரபு வழிப் பண்பியலைக் கண்டுபிடிப்பதற்காக உரிமை கொண்டாடவில்லை. மேலும், இவர் கண்டுபிடித்த அறிவியல் விதிகள் உலகெங்கும் "மெண்டல் விதிகள்" என்றே குறிப்பிடப்படுகின்றன.
மெண்டலின் கண்டுபிடிப்புகள், அவற்றின் நற்பண்பிலும், முக்கித்துவத்திலும், இரத்த ஓட்டத்தைக் கண்டு பிடித்த ஹார்வியின் கண்டுபிடிப்போடு ஒப்பு நோக்கத் தக்கனவாகும். எனவே, அதற்கிணங்க மெண்டலுக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 82 | 83 | 84 | 85 | 86 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரிகோர் மெண்டல் (கி.பி.1822 - கி.பி.1884), மெண்டலின், மெண்டல், பண்புக், மரபுப், தமது, ஆண்டில், இவர், ஆராய்ச்சி, பற்றிய, மரபுவழி, அவருடைய, புகழ், ", மூவரும், மரபு, அல்லது, ஒவ்வொன்றும், பண்பியல்புகள், முடிவுகளை, விஞ்ஞானி, இவருடைய, பிரன், ஒவ்வொரு, தனித், கூறுகளின், அறிவியல், இவரது, இணையின், பண்புத், விதிகள், விதிகளை, ஒருவர், என்பதை, மட்டுமே, இன்று, கூறும், இயற்கை, மேலும், அவருக்கு, விரிஸ், போதிலும், காரணமாக, ஆய்வுக், நாகெலி, வேண்டும், கோரன்ஸ், ஷெர்மாக், கண்டுபிடித்தார்கள், தாவர, மிகவும், தனித்தனியே, ஒவ்வொருவரும், ஆகிய, கட்டுரை, மெண்டலுக்கு, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்