முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » எட்வர்டு ஜன்னர் (கி.பி.1749 - கி.பி.1823)
எட்வர்டு ஜன்னர் (கி.பி.1749 - கி.பி.1823)
பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கிலேய மருத்துவ அறிஞர் எட்வர்டு ஜென்னர் ஆவார்.
ஜென்னர் கண்டுபிடித்த அம்மை குத்தும் முறையின் பயனாக இன்று உலகிலிருந்து அம்மை நோய் பெரும்பாலும் அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், முந்தைய நூற்றாண்டுகளில் இந்த அம்மை நோய் எத்துணை கோரமாக உயிர்களைக் கொள்ளை கொண்டு வந்தது என்பதை இன்று நாம் மறந்து கொண்டு வருகிறோம். அம்மை நோய் ஒரு பயங்கரத் தொற்று நோயாக இருந்தது. ஐரோப்பாவில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையினர், தங்கள் வாழ்வில் எப்போதாவது ஒரு முறை, இந்தத் தொற்று நோயால் பீடிக்கப்பட்டனர். இந்நோய் கண்டவர்களில் 10% - 20% பேர் மாண்டு போயினர். உயிர் பிழைத்தவர்களில், மேலும் 10% அல்லது 15% பேர் அம்மைத் தழும்புகளால் நிரந்தரமாக விகாரமடைந்தனர். அம்மை நோய்க் கொடுமை ஐரோப்பாவோடு நின்று விடவில்லை. வட அமெரிக்கா முழுவதிலும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளிலும், உலகின் வேறு பல பகுதிகளிலும் அம்மை நோய் கோரத் தாண்டவமாடியது. எல்லா இடங்களிலும், குழந்தைகளே இந்நோய்க்குப் பெரும்பாலும் பலியானார்.
இக்கொடிய நோயைத் தடுப்பதற்கு நம்பகமானதொரு முறையைக் கண்டுபிடிப்பதற்குப் பல ஆண்டுகளாக உலகெங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒருமுறை அம்மை நோய் பீடிக்கப்பட்டு உயிர் பிழைத்த ஆளுக்கு அந்நோயிலிருந்து தடைகாப்பு ஏற்பட்டு விடுகிறது என்பதும், அதனால் அவரை இரண்டாம் முறை அம்மை நோய் தாக்காது என்பதும் நீண்ட காலமாகவே அறியப்பட்டிருந்தது. கீழ்த்திசை நாடுகளில், இலேசான அம்மை நோய் கண்டவர்களின் உடலிலிருந்து எடுத்த ஏதாவதொரு பொருளை உடல் நலமுடையவர்களின் உடலில் ஊசி மூலம் செலுத்தும் முறை வழக்கில் இருந்தது. இவ்வாறு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட ஆளுக்கு, மிக இலேசான அம்மை நோய் மட்டுமே பற்றும் என்றும், அதிலிருந்து குணமடைந்த பின்பு அவருக்கு அந்நோயிலிருந்த தடைக் காப்பு ஏற்பட்டு விடும் என்றும் நம்பினார்கள்.
இதே முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேரி ஓர்டே மாண்டேகு சீமாட்டி இங்கிலாந்தில் புகுத்தினார். அங்கு, ஜென்னருக்கு முன்பு பல ஆண்டுகள் இந்த முறை பெருமளவில் வழக்கிலிருந்தது. ஜென்னருக்கே கூட, அவரது எட்டாம் வயதில், அம்மைப் பால் ஊசி போடப்பட்டது. ஆயினும், இந்தப் புதுமையான தடுப்பு முறையில் மிக ஆபத்தானதொரு குறைபாடும் இருந்தது. அவ்வாறு அம்மை நோய்ப் பொருள் ஊசி வழியாகச் செலுத்தப்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையினருக்கு அம்மை லேசாகப் பீடிக்கப்படவில்லை. மாறாக, அவர்களை அம்மை நோய் கடுமையாகப் பீடித்து, அவர்களிடம் மோசமான அம்மைத் தழும்புகளை விட்டுச் சென்றது. உண்மையாகக் கூறின் 2% தேர்வுகளில் இந்த ஊசிப்பாலினாலேயே கடுமையான அம்மை நோய் தாக்கியது. எனவே, இந்நோயைத் தடுப்பதற்கு இதைவிட உயர்ந்ததொரு முறை உடனடியாகத் தேவைப்பட்டது.
ஜென்னர் 1749 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கிளவுசெஸ்டர்ஷயரிலுள்ள பெர்க்கிலி என்னும் சிறிய நகரில் பிறந்தார். பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருக்கும் போதே இவர் ஓர் அறுவை மருத்துவரிடம் தொழில் பயில்பவராகச் சேர்ந்தார். பின்னர், இவர் உடல் உட்கூறியல் பயின்றவாறே, ஓர் மருத்துவ மனையிலும் பணியாற்றி வந்தார். 1792 ஆம் ஆண்டில், புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் இவர் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் தமது 40 ஆம் வயதுகளில் இவர் கிளவுசெஸ்டர்ஷயர் நகரில் ஒரு சிறந்த மருத்துவராகவும், அறுவை மருத்துவராகவும் புகழ் பெற்றார்.
பசுக்களின் மடுக் காம்புகளைப் புண்ணாக்கும் 'கோ வைசூரி' என்னும் மென்மையான அம்மை நோய் கண்டவர்களுக்கு, அதன்பின்பு அம்மை நோய் வரவே செய்யாது என்று ஜென்னர் வாழ்ந்த வட்டாரத்திலிருந்த பால் பண்ணைப் பெண்களிடையிலும், குடியானவர்களிடையிலும் ஒரு நம்பிக்கை நிலவி வந்தது. இந்தக் கோ வைசூரி நோயை மனிதர்களுக்குப் பீடிக்கும்படி செய்தால், அவர்களை அம்மை நோய் பற்றாது என்ற கருத்தும் நிலவி வந்தது. இந்த நம்பிக்கையை ஜென்னரும் நன்கறிந்தார். (கோ வைசூரியின் அறிகுறிகள், மிக மென்மையான அம்மை நோயின் அறிகுறிகளை ஒத்திருந்தாலும் அந்த நோய் மனிதர்களுக்கு அபாயமானதன்று.) குடியானவர்களின் இந்த நம்பிக்கை சரியானதாக இருக்குமானால் கோ வைசூரி நோய்ப் பாலை மனிதருக்கு ஊசி வழியாகச் செலுத்துவதும் அம்மை நோய்க்கு எதிரான சிறந்த பாதுகாப்பாக அமையும் என ஜென்னர் உணர்ந்தார். அது குறித்து இவர் மிகக் கடினமாக ஆராய்ச்சி நடத்தினார். அது குறித்து இவர் மிகக் கவனமாக ஆராய்ச்சி நடத்தினார். 1796 ஆம் ஆண்டில், அந்த நம்பிக்கை முற்றிலும் சரியானது என்று கண்டறிந்தார். எனவே, அதை நேரடியாகவே பரிசோதித்துப் பார்க்க ஜென்னர் முடிவு செய்தார்.
1796 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஜேம்ஸ்ஃபிலிப்ஸ் என்ற எட்டு வயதுச் சிறுவனுக்கு, ஒரு பால் பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கோ வைசூரியின் கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜென்னர் ஏற்றினார். எதிர்பார்த்தது போலவே, அச்சிறுவனுக்கு கோ வைசூரி கண்டது. ஆனால், அவன் விரைவிலேயே குணமடைந்தான். பல வாரங்களுக்குப் பிறகு, அம்மைப் பாலை பிலிப்சுக்கு ஜென்னர் ஊசி வழியாகச் செலுத்தினார். இவர் நம்பியதுபோலவே, அச் சிறுவனுக்கு அம்மை நோயின் அறிகுறிகள் உண்டாகவே இல்லை.
மேலும் பல பரிசோதனைகள் செய்த பின்னர், ஜென்னர் தமது முடிவுகளை 'அம்மை நோயின் காரணங்களும் விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு' என்னும் தலைப்பில் ஒரு சிறு நூலில் விவரித்து எழுதி 1798 ஆம் ஆண்டில் வெளியிட்டார். அம்மை குத்தும் முறை உலகெங்கும் விரைவாக மேற்கொள்ளப்பட்டதற்கு இந்த நூலே முக்கிய காரணம். இதைத் தொடர்ந்து ஜென்னர் அம்மை குத்தல் குறித்து மேலும் ஐந்து கட்டுரைகளை எழுதினார். பல ஆண்டு காலம் தமது முறை பற்றிய தகவல்களைப் பரப்புவதிலும் அதை ஏற்றுக் கொள்ளும்படி செய்வதிலும் பெரும்பாலான நேரத்தை ஜென்னர் செலவிட்டார்.
அம்மை குத்தும் முறை இங்கிலாந்தில் மிகத் துரிதமாகப் பரவியது. பிரிட்டிஷ் இராணுவத்திலும், கடற்படையிலும் அம்மை குத்துதல் விரைவிலேயே கட்டாயமாக்கப்பட்டது. இறுதியில், உலகின் பெரும்பாலான பகுதிகளில் இந்த முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஜென்னர் தாம் கண்டுபிடித்த இந்த முறையை இலவசமாக உலகுக்கு வழங்கினார். இதிலிருந்து ஆதாயம் பெற இவர் விரும்பவில்லை. எனினும், 1802 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இவரது அருந் தொண்டுக்கு நன்றி தெரிவித்து இவருக்கு 10,000 பவுன் பரிசு வழங்கியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றம் இவருக்கு மேலும் 20,000 பவுன் அளித்தது. இவர் உலகப் புகழ் பெற்றார். இவருக்கு விருதுகளும், பதக்கங்களும் வந்து குவிந்தன. ஜென்னர் திருமணம் புரிந்து மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். இவர் 1823 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமது 73 ஆம் வயதில், தம் சொந்த ஊராகிய பெர்க்கிலியில் காலமானார்.
கோ வைசூரித் தாக்குதல் அம்மை நோய்க்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் என்ற கொள்கை ஜென்னருக்குச் சொந்தமானதன்று என்பதை ஏற்கனவே கண்டோம். அதை இவர் மற்றவர்களிடமிருந்துதான் கேட்டறிந்தார். ஜென்னருக்கு முன்னரே, கோ வைசூரிப் பால் சிலருக்கு ஊசி வழி செலுத்தப்பட்டிருந்தத என்றும் தெரிகிறது.
ஆனால், ஜென்னர் வியக்கத்தக்க தற்சிந்தனையுள்ள ஒரு விஞ்ஞானியாக இல்லையென்றாலும், அவரைப் போல் மனித குலத்திற்கு அரும்பயனை அளித்தவர்கள் மிகச் சிலரேயாவார். இவர் தமது ஆராய்ச்சிகள் மூலமாகவும், பரிசோதனைகள் வாயிலாகவும், மருத்துவத் தொழில் துறையினர் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்து வந்த ஒரு பாமர நம்பிக்கையை உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய ஓர் உயர்தர மருத்துவ சிகிச்சை முறையாக உருமாற்றினார். ஜென்னரின் முறையினால் தனியொரு நோயைத் தடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றாலும் அந்த ஒரு நோய் மிகக் கொடிய கொள்ளை நோயாக இருந்தது. எனவே, இவருடைய சொந்தத் தலைமுறையினரும், பிந்திய தலைமுறையினரும் இவர் மீது பொழிந்த பாராட்டுகளுக்கும், விருதுகளுக்கும் இவர் முற்றிலும் தகுதி வாய்ந்தவர் என்பதில் ஐயமில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்வர்டு ஜன்னர் (கி.பி.1749 - கி.பி.1823), அம்மை, நோய், இவர், ஜென்னர், முறை, ஆண்டில், தமது, மேலும், வைசூரி, பால், உலகெங்கும், குத்தும், நோய்க்கு, நம்பிக்கை, நோயின், அந்த, இவருக்கு, மிகக், குறித்து, பாலை, எதிரான, பின்னர், என்றும், மூலம், தடுப்பதற்கு, இங்கிலாந்தில், மருத்துவ, வந்தது, என்னும், வழியாகச், பெற்றார், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்