முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஃபிரான்சிஸ்கோ பிசாரோ (கி.பி.1475 - கி.பி.1541)
ஃபிரான்சிஸ்கோ பிசாரோ (கி.பி.1475 - கி.பி.1541)
பெரு நாட்டிலிருந்த இன்கா பேரரசினை வெற்றி கொண்ட துணிச்சல் மிகுந்த ஸ்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ ஆவார். இவர் ஸ்பெயின் நாட்டில் ட்ருஜிலோ என்னும் நகரில் 1475 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் கல்வி கற்கவில்லை. பல வகையிலும் இவரை ஒத்த வாழ்க்கையை கொண்டிருந்த ஹெர்னாண்டோ கோர்ட்டே போலவே இவரும் புகழும் பொருளும் தேடிப் புதிய உலகுக்கு வந்தார். இன்று ஹைட்டியும், டொமினிக்கன் குடியரசும் அமைந்துள்ள கரீபியத் தீவாகிய ஹ’ஸ்பானியோலாவில் இவர் 1502 முதல் 1509 வரை வாழ்ந்தார். 1513 ஆம் ஆண்டில் வாஸ்கோ நூனஸ் டி பால்போவா என்பவரின் தலைமையில் சென்று பசிபிக் பெருங்கடலைக் கண்டுபிடித்த நாடாய்வுக் குழுவில் வரும் ஓர் உறுப்பினராக இடம் பெற்றிருந்தார். 1519 ஆம் ஆண்டில் இவர் பனாமாவில் குடியமர்ந்தார். 1522 ஆம் ஆண்டில் பிசாரோ 47 வயதை எட்டியிருந்தபோது, இன்கா பேரரசுக்குச் சென்று வந்த பாஸ்குவல் டி ஆண்டகோயா என்ற ஸ்பானிய நாடாய்வாளரிடமிருந்து அந்தப் பேரரசு பற்றி அறிந்தார். இதற்குச் சற்று முன்னர் மெக்சிகோவை ஹெர்னாண்டோ கோர்ட்டே வெற்றி கொண்டதால், மன ஊக்கம் பெற்ற பிசாரோ, இன்கா பேரரசை வெற்றி கொள்ள முடிவு செய்தார். 1524-1525 ஆம் ஆண்டில் இவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. இவருடைய இரு கப்பல்களும் பெருவைச் சென்றடையாமலே திரும்பின. 1526-1528 இல் இவருடைய இரண்டாம் முயற்சியில், இவர் பெரு கடற்கரையை அடைந்தார். அங்கிருந்து, தங்கத்துடனும், இலாமா என்ற விலங்குகளுடனும், சிவப்பிந்தியர்களுடனும் திரும்பினார்.
1528 ஆம் ஆண்டில் இவர் ஸ்பெயினுக்குத் திரும்பிச் சென்றார். அங்கு அடுத்த ஆண்டிலேயே, ஸ்பெயினுக்காகப் பெருவை வெற்றி கொள்வதற்கு ஐந்தாம் சார்லஸ் பேரரசர் பிசாரோவுக்கு அதிகாரமளித்தார். அதற்கான நிதியையும் வழங்கினார். பிசாரோ பனாமாவுக்குத் திரும்பி தமது படையெடுப்புக்குரிய ஆயுதங்களைச் செய்யலானார். அவரது படையினர் 1531 ஆம் ஆண்டில் பிசாரோவின் 56 ஆம் வயதில் பனாமாவிலிருந்து கப்பலில் புறப்பட்டனர். அவர் திரட்டிய படையில் இருநூறுக்கும் குறைவான வீரர்களே இருந்தனர். ஆனால் அவர் வெற்றி கொள்ள முற்பட்ட பேரரசிலோ அறுபது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தனர்.
அடுத்த ஆண்டில் பிசாரோ, பெரு கடற்கரையை அடைந்தார். 1532 ஆம் ஆண்டில் தம்முடனிருந்த 177 வீரர்களுடனும், 62 குதிரைகளுடனும் இவர் அந்நாட்டின் உட்பகுதிக்குள் படை நடப்புச் செய்தார். பிசாரோ தமது சிறிய படைக்கு தலைமையேற்று ஆண்டிஸ் மலைவரை சென்று, காஜாமார்க்கா என்ற நகரை அடைந்தார். அங்கு இன்கா அரசன் அட்டாஹூவால்ப்பா 40,000 வீரர்கள் கொண்ட ஓர் இராணுவத்துடன் தங்கியிருந்தான். பிசாரோவின் படை 1532 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளன்று காஜாமார்க்கா சேர்ந்தது. மறுநாள், பிசாரோவின் வேண்டுகோளுக்கிணங்கி, அட்டாஹூவால்ப்பா தமது படையின் பெரும்பகுதியை பின்தங்கியிருக்கும்படி விட்டு விட்டு, ஆயுதமற்ற 5,000 வீரர்கள் மட்டும் உடன்வர பிசாரோவுடன் பேச்சு நடத்துவதற்கு வந்தான்.
அட்டாஹூவால்ப்பாவின் இந்தச் செயல் புரியாத புதிராக இருக்கிறது. பெரு கடற்கரையில் ஸ்பானியர் தரையிரங்கியதிலிருந்தே, அவர்கள் தங்களுடைய பகையுணர்வையும், ஈவிரக்கமற்ற போக்கினையும் வெளிப்படையாகக் காட்டி வந்தார்கள். அப்படியிருக்க, பிசாரோவின் படைகள் காஜாமார்க்கா வரையில் தடையின்றி, முன்னேறி வருவதற்கு அட்டாஹூவால்ப்பா ஏன் அனுமதித்தான் என்பது புரியவில்லை. பிசாரோவின் குதிரைகள் மலைச் சாலைகளில் பிசாரோவின் படைகளைச் சிவப்பிந்தியர்கள் தாக்கியிருப்பார்களானால், ஸ்பானியப் படைகளை அவர்கள் அடியோடு அழித்து விட்டிருக்கலாம். காஜாமார்க்காவுக்கு, பிசாரோ வந்த பிறகும் அட்டாஹூவால்ப்பா நடந்து கொண்ட விதம் அதை விட விசித்திரமாக இருந்தது. பகைமை பாராட்டும் ஓர் இராணுவத்திடம் ஆயுதம் ஏந்தாமல் நெருங்கிச் சென்றது நம்ப முடியாத முட்டாள்தனமாக இருந்தது. மறைந்திருந்து தாக்குவது இன்காக்களின் பழக்கமாக இருந்தது. அவ்வாறிருந்தும், அவர்கள் இவ்வாறு செய்தது புதிராக இருக்கிறது.
பிசாரோ நமக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை நழுவ விடவில்லை. அட்டாஹூவால்ப்பாவும், ஆயுதமற்ற அவனது வீரர்களும் அருகில் நெருங்கியதுமே அவர்களை நெருங்கியதுமே அவர்களை தாக்கும்படி தமது வீரர்களுக்கு பிசாரோ ஆணையிட்டார். அந்தப் போர் அதைப் படுகொலைக் கிளறி என்றே சொல்ல வேண்டும். அரை மணி நேரமே நீடித்தது. ஸ்பானிய வீரர்களில் ஒருவர்கூட கொல்லப்படவில்லை. ஒரேயொருவர் மட்டும் காயமடைந்தார். அவ்வாறு காயமடைந்து பிசாரோதான். அட்டாஹூவால்ப்பா காப்பாற்ற முயன்ற போது பிசாரோ இலேசாக காயமடைந்தார். அட்டாஹூவால்ப்பாவை உயிரோடு பிடிக்க பிசாரோ விரும்பினார். அதில் அவர் வெற்றி கண்டார்.
பிசாரோவின் போர்த் தந்திரம் சிறிதும் தவறாமல் செயற்பட்டது. இன்கா பேரரசு பெரும்பாலும் மையம் நோக்கிய ஓர் ஆட்சியமைப்பாக இருந்தது. தெய்வமாகவே கருதப்பட்ட பேரரசிடமே அதிகாரங்கள் அனைத்தும் குவிக்கப்பட்டிருந்தது. பேரரசர் சிறைப்பிடிக்கப்பட்டதுமே ஸ்பானியப் படையெடுப்பை முறியடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் சிவப்பிந்தியர்கள் திகைத்து நின்றனர். அட்டாஹூவால்ப்பா தான் விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில், பிசாரோவுக்கு ஏராளமான தங்கமும், வெள்ளியும் கொடுத்தான். இவற்றின் மதிப்பு 28 கோடி டாலருக்கு அதிகம். ஆனால், சில மாதங்களுக்குள்ளேயே அவனை பிசாரோ தூக்கிலிட்டுக் கொன்றார். அட்டாஹூவால்ப்பா கைது செய்யப்பட்டதற்கு ஓராண்டுக்குப் பிறகு, 1533 ஆம் ஆண்டு நவம்பரில், பிசாரோவின் படை வீரர்கள் இன்கா தலைநகர் குஸ்கோவிற்குள் போரிடாமலேயே நுழைந்தனர். அங்கு தமது கைப்பாவைகளாக இயங்க முன் வந்த ஒருவனை புதிய பேரரசனாகப் பிசாரோ நியமித்தார். 1535 ஆம் ஆண்டில், லிமா என்ற நகரை பிசாரோ நிறுவினார். இது பெரு நாட்டின் புதிய தலைநகராகியது.
எனினும், 1536 ஆம் ஆண்டில் பிசாரோவின் கைப்பாவையாக இருந்த பேரரசன் தப்பிச் சென்று ஸ்பானியருக்கு எதிராகச் சிவப்பிந்தியர்களின் புரட்சியை நடத்தினான். சிறிது காலம் லிமாவிலும், குஸ்கோவிலும் ஸ்பானிய படைகள் முற்றுகை செய்யப்பட்டிருந்தன. ஆயினும், அடுத்த ஆண்டில், நாட்டின் பெரும் பகுதியை ஸ்பானியர்கள் எப்படியோ தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும், 1572 ஆம் ஆண்டு வரையிலும் இன்கா புரட்சி இறுதியாக ஒடுக்கப்படவில்லை. அதற்குள் பிசாரோவும் இறந்து விட்டார்.
ஸ்பானியர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிடத் தொடங்கியதால், பிசாரோ வீழ்ச்சியுற நேர்ந்தது. பிசாரோவின் நெருங்கிய சகாவாக இருந்த டிகோ-டி ஆல்மாக்ரோ என்பவர், கொள்ளையிட்ட பொருளில் தமக்குரிய பங்கினைப் பிசாரோ தரவில்லை என்று கூறி பிசாரோவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார். ஆல்மாக்ரோ சிறைப் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். ஆனால், அத்துடன் கிளர்ச்சி முடிந்து விடவில்லை. ஆல்மாக்ரோவின் ஆதரவாளர்கள் 1541 ஆம் ஆண்டில், லிமாவிலிருந்த பிசாரோவின் அரண்மனையைத் தாக்கி உள்ளே புகுந்து 66 வயதான பிசாரோவை கொன்றனர். குஸ்கோக நகருக்குள் பிசாரோ வெற்றிகரமாக நுழைந்த எட்டே ஆண்டுகளில் அவருக்கு இந்தக் கதி நேர்ந்தது.
பிசாரோ, துணிச்சல் மிக்கவராகவும், மன உறுதி வாய்ந்தவராகவும், சூழ்ச்சி, தந்திரம் கொண்டவராகவும் விளங்கினார். அவர் ஆழ்ந்த சமயப்பற்று மிக்கவராகவும் இருந்தார். கொலையுண்டு இறக்கும் தறுவாயிலும் தம் உடலிலிருந்து வழிந்த இரத்தத்தால், தலையில் ஒரு சிலுவைக் குறியை அவர் வரைந்திருந்ததாகவும், கடைசியாக "இயேசுவே" என்ற சொல்லை முணுமுணுத்தவாறே அவர் உயிர் விட்டதாகவும் கூறுவர். ஆயினும் அவர் நம்ப இயலாத அளவுக்கு பேராசை கொண்டவராகவும், கொடூரமானவராகவும், புகழார்வம் கொண்டவராகவும், நம்பிக்கைத் துரோகம் செய்பவராகவும் இருந்தார். ஸ்பானிய வெற்றி வீரர்களிலேயே மிகவும் கொடுமையாக நடந்து கொண்டவர் பிசாரோ தான் எனலாம்.
ஆனால், பிசாரோவின் கொடூரக் குணம் அவருடைய இராணுவச் சாதனையின் பரிமாணத்தைத் திரை போட்டு மறைக்க அனுமதிக்கலாகாது. மிக அண்மையில், 1967 ஆம் ஆண்டில் மிக அதிக எண்ணிக்கையிலும், அதிகமான இராணுவச் சாதனங்களைக் கொண்டனவாகவும் இருந்த அரபு நாடுகளின் மீது இஸ்ரேலியர்கள் பெரும் வெற்றி கண்டபோது, பலர் வியப்படைந்தனர். அது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த வெற்றியாகும். ஆனால், மிகப் பெரிய படைகளை எதிர்த்து மிகச் சிறிய இராணுவங்கள் பெற்ற வெற்றிகளுக்கு வரலாற்றில் நிறையச் சான்றுகள் உண்டு. நெப்போலியனும், மகா அலெக்சாந்தரும் பெரிய இராணுவங்களை எதிர்த்துப் பெரிய வெற்றிகள் பெற்றுள்ளனர். ஜெங்கிஸ்கானுக்குப் பின் வந்த மங்கோலியர்கள் தங்கள் நாட்டை விட குறைந்தது முப்பது மடங்கு பெரிதான சீனாவை வெற்றி கொண்டனர்.
எனினும், 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட ஒரு பேரரசை, 180 வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு படையைக் கொண்டு வெற்றிக் கொள்வது என்பது வரலாற்றிலேயே மிகவும் மலைப்பூட்டும் ஓர் இராணுவச் சாதனையாகும். ஏறத்தாழ 60 இலட்சம் மக்களை கொண்ட ஒரு பேரரசின் மீது 600 வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு படையுடன் கோர்ட்டே படையெடுத்தார். அவருடைய படை வீரர்களின் எண்ணிக்கையைவிட பிசாரோ படையினரின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதே சமயம், கோர்ட்டே எதிர் நோக்கிய எதிரிகளின் எண்ணிக்கை அதிகம். பிசாரோவின் சாதனையை மகா அலெக்சாந்தரோ, ஜெங்கிஸ்கானோ செய்திருக்க முடியுமா? முடிந்திருக்காது என்றே கூறலாம். ஏனெனில் அத்துணை பேரளவு எண்ணிக்கையில் எதிரிகள் இருக்கும்போது, அவர்கள் மீது படையெடுக்க அவர்களில் எவரும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.
"ஸ்பானியர்கள் சுடுபடைக்கலன்கள், அவர்களுக்கு எதிரிகளை திணற அடிக்கக்கூடிய அளவுக்கு மேம்பட்ட அனுகூலத்தை அளித்திருக்கலாம் அல்லவா?" என்று சிலர் கேட்கலாம். இதற்கு நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், அப்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் பழம்பாணியில் இருந்தன. அவை எட்டும் தொலைவும மிகக் குறைவு. மேலும், அவற்றில் மீண்டும் வெடி மருந்து செலுத்துவதற்கு நீண்ட நேரம் பிடித்தது. அவற்றிலிருந்து திகிலுண்டாக்கும் அளவுக்குப் பெருத்த ஓசை எழுந்தபோதிலும், வில், அம்பை விட மிகக் குறைவான செயல் விளைவையே அவை கொண்டிருந்தன. அது மட்டுமின்றி, பிசாரோ காஜாமார்க்காவில் நுழைந்தபோது, அவருடைய வீரர்கள் மூவர் மட்டுமே துப்பாக்கி வைத்திருந்தனர். இருபது வீரர்களிடம் மட்டுமே வில்லும், அம்பும் இருந்தன. வாள், ஈட்டி போன்ற மரபு ஆயுதங்களாலேயே பெரும்பாலான சிவப்பிந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஸ்பானியர்களிடம் சில துப்பாக்கிகளும் இருந்தபோதிலும், இராணு நோக்கில் அளவுக்கு மீறிய பாதகங்களுக்கு மத்தியிலேயே அவர்கள் போரில் குதித்தார்கள் என்பது தெளிவு. ஸ்பானியர்கள் வெற்றி பெற்றதற்கு, ஆயுத பலத்தைவிட, திறமையான தலைமையும், மன உறுதியுமே தலையாய காரணங்களாகும். பாக்கியதேவதை பிசாரோவின் பக்கம் இருந்தாள் என்பது உண்மையே. அதே சமயம், 'துணிச்சல் மிக்கவர்கள் பக்கமே பாக்கிய தேவதை இருப்பாள்' என்ற பழமொழியும் உண்டு.
பிசாரோ நெஞ்சுறுதி வாய்ந்த ஒரு கொள்ளைக்காரர் என்பதை தவிர, அவர் பெருமைக்குரியவர் அல்லர் என்று சில எழுத்தாளர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், கொள்ளைக்காரர் யாராவது வரலாற்றில் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்களா? அவர் வீழ்த்திய பேரரசு இன்றுள்ள பெரு, ஈக்குவடார் நாடுகளையும், சிலி நாட்டின் வட பாதியையும், பொலீவியாவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியிருக்கிறது. எஞ்சிய தென் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை அதிகம். பிசாரோவின் வெற்றி காரணமாக, அந்த மண்டலம் முழுவதிலும் ஸ்பெயின் நாட்டின் சமயமும், பண்பாடும் புகுத்தப்பட்டன. மேலும், இன்கா பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, தென் அமெரிக்காவின் வேறெந்தப் பகுதியும் ஐரோப்பிய வெற்றியை வெற்றிகரமாக எதிர்க்கும் வாய்ப்பைப் பெறவில்லை. தென் அமெரிக்காவில் இன்றும் கோடிக்கணக்கான சிவப்பிந்தியர்கள் வாழ்கிறார்கள். ஆயினும், இந்தக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், சிவப்பந்தியர்களில் அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் மீண்டும் பெறவில்லை. அங்கு ஐரோப்பிய மொழியும், சமயமும் பண்பாடும்தான் ஆதிக்கம் பெற்றிருக்கின்றன.
கோர்ட்டே, பிசாரோ இருவரும் தனித்தனியே ஒரு சிறு படைக்குத் தலைமை தாங்கிச் சென்றனர். எனினும், அவர்கள் இருவரும் மிகக் குறுகிய காலத்தில் ஆஸ்டெக், இன்கா என்ற இரு பேரரசுகளையும் வீழ்த்துவதில் வெற்றி பெற்றனர். இதைக் கொண்டு, மெக்சிகோவையும், பெருவையும் ஐரோப்பியர்கள் வெற்றி கண்டது ஓர் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி எனச் சிலர் கருதுகின்றனர். உண்மையில், ஆஸ்டெக் பேரரசு தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லாமலிருந்தது எனலாம். அது, மெக்சிகோ வளைகுடாவுக்கு மிக அருகில் இருந்தது. கியூபாவிலிருந்து மிகக் குறுகிய நேரத்தில் அங்கு கப்பலில் சென்று விட முடிந்தது. இதனால், அது ஸ்பானியரின் தாக்குதலுக்கு மிக எளிதில் உள்ளாகக் கூடியதாக இருந்தது. கோர்ட்டேயின் சிறிய படையை ஆஸ்டெக்குகள் தோற்கடித்திருந்தாலுங்கூட, ஒரு பெரிய ஸ்பானியப் படை அங்கு அடுத்து படையெடுத்துச் சென்றிருக்கும்.
இதற்கு மாறாக, இன்கா பேரரசு அதிக தற்காப்பான சூழலில் அமைந்திருந்தது. அதன் எல்லையோரமிருந்த ஒரே கடல் பசிபிக் பெருங்கடல்தான். ஸ்பானியக் கப்பல்களுக்கு அட்லாண்டிக் பெருங்கடலை விட, பசிபிக் பெருங்கடலை அணுகுவது மிகுந்த கடினமாக இருந்தது. இன்கா பேரரசு பெரும்படையைப் பெற்றிருந்தது. அதில் மிகப் பெருமளவு மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் நன்கு ஒருங்கமைக்கப்பட்டவர்களாக இருந்தனர். தவிரவும், பெருநாடு கரடுமுரடானதாகவும, மலைப்பாங்கானதாகவும் இருந்தது. உலகின் பல பகுதிகளில் மலைப்பாங்கான மண்டலங்களை வெற்றி கொள்வத, ஐரோப்பியக் குடியேற்ற ஆதிக்க வல்லரசுகளுக்கு மிகக் கடினமான காரியமாகவே இருந்திருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்கூட 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட மிக முன்னேறிய சுடு படைக்கலங்களை ஐரோப்பியர்க பயன்படுத்தியபோதும், எத்தியோப்பியாவை வெற்றி கொள்வதற்கு இத்தாலி மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. அதே போன்று, பிரிட்டிசார், இந்தியாவின் மலைப்பாங்கான கிழக்கு எல்லைப் பகுதியில் ஆதிகுடிகளிடம் எல்லையில்லாத் தொல்லைகளை அனுபவித்தனர். நேபாளம், ஆப்கானிஸ்தானம், ஈரான் போன்ற மலைப் பாங்கான நாடுகளில் குடியேற்ற ஆதிக்கத்தை ஏற்படுத்த ஐரோப்பியர்களால் இயலாமற் போயிற்று. பிசாரோவின் படையெடுப்பு தோல்வியடைந்திருந்த ஐரோப்பியர்கள் ஆயுதங்களையும், தந்திரங்களையும் ஓரளவுக்கேனும் அறிந்து கொள்வதற்கு இன்காக்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமானால், பின்னர் கணிசமான பெரிய ஐரோப்பிய படைகள் படையெடுத்து வந்திருந்தாலும், அவர்களை எதிர்த்துப் போரிடும் வல்லமையை அவர்கள் பெற்றிருப்பார்கள். சொல்லப் போனால், மிகச் சில துப்பாக்கிகளுடனும், பிசாரோவின் வெற்றிக்கு முன்னர் தாங்கள் திரட்டியிருக்கக்கூடிய படையில் ஒரு சிறிய பகுதியுடனும் சிவப்பிந்தியர்கள் 1536 ஆம் ஆண்டில் தொடங்கிய புரட்சியை அடக்குவதற்கு ஸ்பானியர்களுக்கு 35 ஆண்டுகள் பிடித்தன. பிசாரோ இல்லாதிருந்தாலும் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் வெற்றி கொண்டிருப்பார்கள் எனக்கூறலாம். ஆனால், அந்த வெற்றி நிச்சயமாக நிகழ்ந்திருக்கும் என உறுதியாகக் கூறுவதற்கில்லை.
இக்காரணங்களினாலேயே இந்தப் பட்டியலில் கோர்ட்டேக்குச் சற்றே முற்பட்டு பிசாரோவுக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது. கோர்ட்டே வரலாற்றின் வேகத்தைத் துரிதப்படுத்தினார். ஆனால், பிசாரோ வரலாற்றின் போக்கையை மாற்றினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஃபிரான்சிஸ்கோ பிசாரோ (கி.பி.1475 - கி.பி.1541), பிசாரோ, வெற்றி, பிசாரோவின், ஆண்டில், இன்கா, அவர், இவர், கொண்ட, அட்டாஹூவால்ப்பா, அங்கு, பெரு, பேரரசு, கோர்ட்டே, மிகக், ஸ்பானிய, தமது, சிவப்பிந்தியர்கள், ஸ்பானியர்கள், சென்று, பெரிய, மட்டுமே, நாட்டின், என்பது, வீரர்கள், சிறிய, பெறவில்லை, வந்த, கொள்வதற்கு, பிசாரோவுக்கு, அளவுக்கு, பேரரசை, ", அவருடைய, கொண்டவராகவும், கொண்டு, மீது, தென், ஐரோப்பிய, துணிச்சல், பசிபிக், ஆயினும், இராணுவச், எனினும், ஆண்டு, படைகள், அடுத்த, காஜாமார்க்கா, மக்கள், அடைந்தார், ஸ்பானியப், செய்தார், இருந்தனர், அதிகம், என்றே, அவர்களை, இருந்த, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்