முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் (கி.பி.1473 - கி.பி.1543)
நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் (கி.பி.1473 - கி.பி.1543)
போலந்து நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த வானியலறிஞர் நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ். போலிஸ் மொழியில் இவர் பெயர் மிக்கோலய் கோப்பர்னிக் (Mikolai Kopernik) என்பதாகும். இவர் போலந்தில் விஸ்டுலா ஆற்றின் கரையிலிருந்த டோருன் என்ற நகரில் 1473 ஆம் ஆண்டில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். கோப்பர்னிக்கஸ் இளமையில் கிராக்கோ பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது அவருக்கு வானியலில் ஆர்வம் தோன்றியது. இவர் தமது 25 ஆம் வயதுவாக்கில் இத்தாலி சென்று போலோக்னா, பதுவா பல்கலைக் கழகங்களில் சட்டமும், மருத்துவமும் பயின்றார். பின்னர், ஃபெரரா பல்கலைக் கழகத்தில் கிறிஸ்தவச் சமயச் சட்டவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் இவர் ஃபிரான்பர்கு தேவாலயத்தில் ஒரு சமய குருவாகப் பணியில் சேர்ந்தார். அங்கு இவர் தமது வயதுப் பருவத்தின் பெரும் பகுதியைக் கழித்தார். கோப்பர்னிக்கஸ் ஒரு போதும் தொழில்முறை வானியலறிஞராக இருக்கவில்லை. தமது ஓய்வு நேரங்களில் மட்டுமே இவர் வானியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்த வானியல் பற்றிய தலைசிறந்த நூலையும் இவர் தமது ஓய்வு நேரத்திலேயே எழுதினார்.
இவர் இத்தாலியில் இருந்த போது, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமோஸ் அரிஸ்டார்க்கஸ் என்ற கிரேக்கத் தத்துவஞானி வலியுறுத்திய, பூமியும், மற்ற கோளங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற கொள்கை இவருடைய கவனத்தைக் கவர்ந்தது. சூரிய மையக் கருதுகோள் முற்றிலும் சரியானது எனக் கோப்பர்னிக்கஸ் உறுதியாக நம்பினார். இவர் தமது 40 ஆம் வயதில் இது தொடர்பாக தமது கொள்கைகளை விளக்கிக் கையால் எழுதிய துண்டறிக்கைகளைத் தம் நண்பர்களிடம் சுற்றுக்கு அனுப்பினார். பல்லாண்டுக் காலம் தீவிர ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும், கணிப்புகளும் செய்து இவர் தமது புகழ்பெற்ற நூலாகிய விண் மண்டலச் சுழற்சி (On The Revolution of the Celestial Spheres) என்ற நூலை எழுதினார். இந்நூலில், தமது கோட்பாட்டினை விவரமாக விளக்கி, அதற்கான சான்றுகளையும் விவரித்துள்ளார்.
கோப்பர்னிக்கஸ், 1533 ஆம் ஆண்டில் தமது 60 ஆம் வயதில், ரோம் நகரில் ஒரு தொடர் சொற்பொழிவாற்றினார். அந்தச் சொற்பொழிவில், இவர் போப்பாண்டவரின் கண்டனத்திற்கு ஆளாகாத வகையில் தமது கோட்பாட்டின் முதன்மையான அம்சங்களை விளக்கினார். எனினும், கோப்பர்னிக்கஸ் தமது நூலை எழுதிவிட்ட பின்னருங்கூட, திருச்சபையினரின் ஆத்திரத்திற்கு ஆளாகக் கூடும் என்ற அச்சத்தில் அதை வெளியிடுவதற்குத் தயங்கினார். எழுபது வயதை நெருங்கும் வரையில் இவர் அந்நூலை வெளியிடத் துணியவில்லை. இறுதியாகத் துணிவு கொண்டு இவர் தமது நூலை வெளியிட முடிவு செய்தார். ஆனால், 1543 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி இவர் காலமான அன்று தான் இந்த நூலின் முதல்படி அச்சகத்திலிருந்து கிடைத்தது.
கோப்பர்னிக்கஸ் தமது நூலில், பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும், சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாகக் குறிப்பிட்டுருந்தார். பூமியும், மற்ற கோளங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பதையும் சரியாகக் கூறியிருந்தார். எனினும், தமக்கு, முற்போந்தவர்களைப் போலவே, இவரும் சூரிய மண்டலத்தின் வடிவளவை மிகவும் குறைவாக மதிப்பிட்டிருந்தார். சுற்றுப் பாதைகள் வட்டக் கோலின் வட்டங்களாக இருப்பதாக இவர் தவறாக நம்பினார். இதனால், இவருடைய கோட்பாடு கணித முறைப்படி சிக்கலாக இருந்ததுடன், துல்லியமாக இல்லாமலும் இருந்தது. ஆயினும், எதிர்பார்த்தது போலவே இவருடைய நூல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோளங்களின் இயக்கம் குறித்து, இன்னும் துல்லியமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு டைக்கோ பிராஹ’ (Tycho Brahe) போன்ற வேறுபல தலைசிறந்த வானியலறிஞர்களை இந்நூல் தூண்டியது. டென்மார்க்கைச் சேர்ந்த டைக்கோ பிராஹ’ தம் ஆராய்ச்சிகளில் கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில், ஜோகன்னஸ் கெப்ளர். இறுதியாகக் கோளங்களின் இயக்கம் குறித்துத் துல்லியமான விதிகளை வகுத்தமைக்க முடிந்தது.
கோப்பர்னிக்சுக்கு 17 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னதாக சாமோஸ் அரிஸ்டார்க்கஸ் சூரிய மையக் கருதுகோளை வலியுறுத்தியிருந்த போதிலும், அந்தக் கொள்கைகளை பெரும் பகுதிப் பெருமையைக் கோப்பர்னிக்கஸ் பெற்றார். அரிஸ்டார்க்ஸ் தமது கருதுகோளை, அறிவியல் முறைப்படிப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் போதிய விவரங்களுடன் விளக்கவில்லை. கோப்பர்னிக்கஸ் இந்தக் கருதுகோளுக்கான கணிதமுறைக் கணிப்புகளை விவரமாக வகுத்தமைத்து, அதனை ஒரு பயனுள்ள அறிவியல் கோட்பாடாக உருமாற்றினார். இந்தக் கோட்பாட்டை ஊகக் கணிப்புகளுக்குப் பயன்படுத்த முடிந்தது. வானியல் உண்மைகளை இதைக் கொண்டு சரி பார்க்க முடிந்தது. பூமிதான் இந்த அகிலத்தின் மையம் என்ற பழைய கோட்பாடு சரியானதுதானா என்று ஒப்பு நோக்கிப் பார்க்கவும் முடிந்தது.
இந்த அண்டம் பற்றிய தமது கோட்பாட்டில் புரட்சிகரமான மாறுதலை கோப்பர்னிக்கஸ் ஏற்படுத்தியது. அத்துடன் தத்துவக் கண்ணோட்டம் முழுவதையும் அது மாற்றியமைத்தது. ஆனால், கோப்பர்னிக்கசின் முக்கியத்துவத்தை மதிப்பிடும்போது இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றைப் போன்று நடைமுறையில் வானியல் பெருமளவு பயன்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கோப்பர்னிக்கசின் கோட்பாட்டினை சிறிதும் அறிந்திராமலே ஒருவர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை தயாரித்து விட முடியும். ஒரு காரை உற்பத்தி செய்து விடலாம். ஒரு நவீன இரசாயனத் தொழிற் சாலையும் நிறுவிவிட இயலும். (ஆனால், ஃபாரடே, மாக்ஸ்வெல், லாவாய்சியர், நியூட்டன் போன்றவர்களின் கொள்கைகளை அறிந்திராமல் இந்தக் காரியங்களைச் செய்ய முடியாது).
ஆனால், தொழில் நுட்பவியலின் மீது கோப்பர்னிக்கசின் நேரடிச் செல்வாக்கினை மட்டும் கருதுவது, அவருடைய உண்மையான செல்வாக்கினை முற்றிலும் புறக்கணிப்பதாகும். கலிலியோ, கெப்ளர் ஆகிய இருவரும் ஆற்றிய அரும்பணிக்கு இன்றியமையாத முன்னுரையாக அமைந்தது கோப்பர்னிக்கசின் நூலாகும். இவர்கள் இருவரும் நியூட்டனுக்கு வழிக்காட்டிய முக்கிய முன்னோடிகளாக விளங்கினர். இவர்களுடைய கண்டுபிடிப்புகள்தாம், நியூட்டன் தமது இயக்கவிதிகளையும், ஈர்ப்பு விதிகளையும் வகுக்கக் காரணமாக இருந்தன. வரலாற்று முறைகளில் கூறுவதாயின், கோப்பர்னிக்கசின், விண்மண்டலச் சுழற்சி என்ற நூல்தான், நவீன வானியலின் ஏன், நவீன அறிவியலின் தொடக்கமாகவே அமைந்தது என்று கூற வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் (கி.பி.1473 - கி.பி.1543), தமது, இவர், கோப்பர்னிக்கஸ், கோப்பர்னிக்கசின், முடிந்தது, வானியல், பெரும், நவீன, இந்தக், நூலை, சுற்றி, பல்கலைக், தலைசிறந்த, இவருடைய, சூரிய, கொள்கைகளை, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்