முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மார்ட்டின் லூதர் (கி.பி.1483 - கி.பி.1546)
மார்ட்டின் லூதர் (கி.பி.1483 - கி.பி.1546)
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து குறைபாடுகளை நீக்குவதற்காக 16 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவச் சமயச் சீர்திருத்த இயக்கத்தை தோற்றுவித்தவர் மார்ட்டின் லூதர். இவர் 1483 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலுள்ள ஐஸ்லிபென் என்ற ஊரில் பிறந்தார். இவர் பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்றார். தமது தந்தையின் வற்புறுத்தல் காரணமாகச் சிறிது காலம் சட்டம் பயின்றார். ஆனால், சட்டக் கல்வியை இவர் முடிக்கவில்லை. மாறாக, புனித அகஸ்டினியனைப் பின்பற்றும் கிறிஸ்துவத் துறவியாக ஆனார். இவர் 1512 ஆம் ஆண்டில், டாக்டர் பட்டம் பெற்றார். விரைவிலேயே அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
கத்தோலிக்கத் திருச்சபையினருக்கு எதிரான மனக் குறைகள் இவரிடம் படிப்படியாக வளர்ந்தன. இவர் 1510-ஆம் ஆண்டில் ரோமாபுரி சென்றார். அங்கு ரோமானிய சமயக் குருமார்கள் கைக்கூலிக்கு எளிதில் ஆட்படுவதையும், சிற்றின்பக் கேளிக்கைகளில் ஈடுபடுவதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால், இதையெல்லாம் விட பாவமன்னிப்புச் சலுகைகளைப் பணத்திற்கு விலைபேசும் கயமைச் செயல்கள் தாம் இவர் தமது எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்குவதற்கு உடனடித் தூண்டுதலாக அமைந்தன. (செய்த பாவத்திற்குப் பணத்தண்டம் செலுத்தி விட்டால் அந்தப் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டதாகத் திருச்சபை அறிவிப்பதுதான் இந்தப் பாவமன்னிப்பாகும். மரணத்திற்குப் பிறகு பாவம் போக்கப்படும் இடத்தில் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்காக பாவம் செய்தவர் கழிக்க வேண்டிய கால அளவுகளைக் கூடத் திருச்சபையினர் பணம் வாங்கிக் கொண்டு குறைத்தனர். லூதர் 1517 ஆம் ஆண்டில் தமது புகழ் பெற்ற தொண்ணூற்றைந்து முற்கோள்கள் (Ninety five Theses) என்னும் நெறிமுறையை விட்டன்பர்கு தேவாலயத்தில் கதவில் ஒட்டி வைத்தார். இதில், பணத்திற்காக இழிசெயல்களில் ஈடுபடுகிற திருச்சபையினரின் நடத்தையை வன்மையாகக் கண்டிருத்திருந்தார். குறிப்பாக, பணம் வாங்கிக் கொண்டு பாவ மன்னிப்பு வழங்குவதைக் கடுமையாகச் சாடியிருந்தார். லூதர் தமது தொண்ணூற்றைந்து முற்கோள்களின் படியொன்றை மெயின்ஸ் மேற்றிராணியாருக்கு அனுப்பி வைத்தார். அது மட்டுமின்றி, அந்த முற்கோள்களை அச்சிட்டு அந்த வட்டாரம் முழுவதிலும் வழங்கினார்.
திருச்சபைக்கு எதிரான லூதரினுடைய கண்டனத்தின் குறியிலக்கு விரைவாக விரிவடைந்தது. இவர் விரைவிலேயே போப் ஆண்டவரின் அதிகாரத்தையும் திருச்சபைப் பொது மன்றங்களின் அதிகாரத்தையும் எதிர்க்கலானார். விவிலியத்தை மட்டுமே நான் வழிகாட்டியாகக் கொள்பவன். வெற்று வாதங்களை நான் ஏற்க மாட்டேன் என்று அவர் அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே, இந்தக் கருத்துகள் திருச்சபையினருக்கு ஆத்திரமூட்டின. திருச்சபை அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக முன்னிலையாகுமாறு லூதருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டன. பல்வேறு விசாரணைகள் நடந்தன. தம் சமய மறுப்புக் கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்கும்படி லூதருக்குப் பலமுறை ஆணையிடப்பட்டது. பல்வேறு விசாரணைகள் நடந்தன. தம் சமய மறுப்புக் கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்கும்படி லூதருக்குப் பலமுறை ஆணையிடப்பட்டது. இறுதியில், லூதருக்கு திருச்சபைக்கு முரணான கோட்பாட்டுடையவர் (heretic) என்றும், சட்ட விரோதி என்றும் அறிவிக்கப்பட்டது. அவருடைய எழுத்துகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டன.
இந்த தண்டனைக்கு லூதர் சாதாரண கம்பத்தில் கட்டி எரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவருடைய கொள்கைகள் ஜெர்மன் மக்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றிருந்தன. சில ஜெர்மனிய இளவரசர்கள் கூட அவரை ஆதரித்தனர். லூதர் ஓராண்டுக் காலம் வரை தலைமறைவாக இருந்தார். எனினும், ஜெர்மனியில் அவருக்கு ஆதரவு வலுப்பெற்றிந்தமையால் கடுமையான தண்டனைகள் விதிப்பது தவிர்க்கப்பட்டது.
லூதர் ஏராளமாக எழுதினார். அவருடைய எழுத்துகளில் பல மிகப் பெருமளவில் செல்வாக்குப் பெற்றன. விவிலியத்தை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தது அவருடைய முக்கியப் பணிகளில் ஒன்றாகும். இவருடைய இந்த மொழி பெயர்ப்பு, திருச்சபையினையோ, அதன் பாதிரிமார்களையோ நம்பியிராமல் எழுதப்படிக்கத் தெரிந்த எவரும் இந்த வேத நூலைத் தானே படித்தறிந்து கொள்ள உதவியது. (லூதரின் மொழிபெயர்ப்பு மிக அழகிய நடை அமைந்திருந்தது. அதனால் ஜெர்மன் மொழியிலும் இலக்கியத்திலுங் கூட இந்த மொழிபெயர்ப்பு அளப்பரிய செல்வாக்குப் பெற்றது.)
லூதரினுடைய இறைமையியலை முழுமையாக விரித்துரைக்க இந்த சுருங்கிய இடம் போதாது. கடவுட் பற்றினால் மட்டுமே பாவ மன்னிப்புப் பெற முடியும் என்னும் கோட்பாடு லூதரின் கொள்கையில் தலையாயதாகும். இந்தக் கொள்கையைப் புனித பாலின் எழுத்துகளிலிருந்து அவர் பெற்றார். மனிதன் இயற்கையிலேயே பாவக் கடலில் மூழ்கியிருப்பவன். எனவே, நற்செயல்களைச் செய்வதால் மட்டுமே அவன் மீளா நரகிலிருந்து தப்பித்து விட முடியாது. வீடுபேறு என்பது, ஆழ்ந்த பக்தியினாலும், இறைவன் அருளினாலும் மட்டுமே கிட்டும் என்று லூதர் நம்பினார். எனவே, பணம் பெற்றுக் கொண்டு பாவ மன்னிப்பைத் திருச்சபையினர் விற்பனைச் செய்வது முறையற்ற செயல் என்று அவர் கண்டித்தார். தனிப்பட்ட கிறிஸ்தவனுக்கும் இறைவனுக்குமிடையிலான இடையீட்டாளர் திருச்சபையினர் தாம் என்ற சம்பிரதாயக் கருத்து ஐயப்பாட்டுக்குரியது. லூதரின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வதாயின், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தோற்றத்திற்கென மூல காரணமே அடியோடு துடைத்தளிக்கப்பட்டு விட்டது எனலாம்.
திருச்சபையினரின் கடமையை எதிர்த்ததுடன், திருச் சபையினுடைய பல்வேறு நம்பிக்கைகளையும், நடை முறைகளையுங்கூட லூதர் குறிப்பாகக் கண்டித்தார். எடுத்துக் காட்டாக, மரணத்திற்குப் பின்பு பாவம் போக்கப்படும் இடம் ஒன்று உண்டு என்பதை அவர் மறுத்தார். இவரே கூட 1525 ஆம் ஆண்டின் ஒரு கிறிஸ்துவப் பெண் துறவியை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். லூதர் 1546 ஆம் ஆண்டு தமது சொந்த ஊராகிய ஐஸ்லிபெனுக்குச் சென்றிருந்தபோது அங்கு காலமானார்.
முதலாவது சமயச் சீர்திருத்தச் சிந்தனையாளர் மார்ட்டின் லூதர்தான் என்று கூற இயலாது. இவருக்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பொஹீமியாவில் ஜான் ஹஸ் என்பவரும், ஜான் வேக்கிளிஃப் என்ற ஆங்கிலேய அறிஞரும் தோன்றியிருந்தனர். இவருக்கு முன்னதாக, 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பீட்டர் வால்டர் என்ற ஃபிரெஞ்சுகாரரைத்தான் உண்மையில் முதலாவது சீர்திருத்தவாதி எனக் கூற வேண்டும். ஆனால், இவருக்கு முன்னர் தோன்றிய சீர்திருத்தங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துடன் நின்று விட்டன. எனினும், 1517ஆம் ஆண்டுவாக்கில் திருச்சபையினருக்கு எதிரான மனக்கசப்பு வெகுவாகப் பரவி, கிளர்ச்சித் தீயை மூட்டுவதற்கு ஏற்பப் பக்குவமாகக் கனிந்திருந்தது. லூதரின் சீர்திருத்தக் கருத்துகள் புரட்சிக் கனலாக அமைந்து உடனடியாகக் கிளர்ச்சித் தீயை மூட்டி விட்டது. இந்த எதிர்ப்பு மிக விரைவிலேயே ஐரோப்பாவின் பெரும் பகுதியில் பரவியது. எனவே, இந்தச் சமய சீர்திருத்த இயக்கம் தோன்றுவதற்கு மூலமுதற்காரணமாக விளங்கியவர் மார்ட்டின் லூதர் எனக் கருதுவது முற்றிலும் பொருத்தமாகும்.
இந்தச் சமயச் சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய விளைவாகச் சமயச் சீர்திருத்தத்தை ஆதரிக்கும் பல்வேறு புரோட்டஸ்டாண்டுப் பிரிவுகள் உருவாகின. புரோட்டஸ்டாண்டு சமயப் பிரிவு, கிறிஸ்துவ சமயத்தின் ஒரு கிளைப் பிரிவுதான் என்றாலும், புத்த சமயத்தை விட, ஏன் மற்ற பெரும்பாலான சமயங்களையும் விட மிக அதிகமானவர்கள் பின்பற்றும் ஒரு சமயப் பிரிவாக விளங்குகிறது.
இச்சமயச் சீர்திருத்த இயக்கத்தின் இரண்டாவது முக்கிய விளைவு, ஐரோப்பாவில் மூண்ட சமயப் போர்களாகும். இந்தச் சமயப் போர்களில் சிலவற்றினால் பெரும் இரத்தக் களரி ஏற்பட்டது. உதாரணமாக, ஜெர்மனியில் நடந்த முப்பதாண்டுப் போர் 1618 முதல் 1648 வரை நடைபெற்றது. இந்தப் போர்கள் ஒருபுறமிருக்க, கத்தோலிக்கர்களும், புரோட்டஸ்டாண்டுகளுக்குமிடையிலான அரசியல் பூசல்கள், அடுத்த சில நூற்றாண்டுகள் வரை ஐரோப்பாவின் அரசியலில் பெரும் பங்கு பெற்றன.
மேற்கு ஐரோப்பாவின் அறிவு மேம்பாட்டிலும் இந்தச் சமயச் சீர்திருத்த இயக்கம் மறைமுகமான, ஆனால், மிக முக்கியமான பங்கு பெற்றது. 1517ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை என்ற ஒரேயொரு திருச்சபைதான் இருந்து வந்தது. இதன் கொள்கைகளிலிருந்து மாறுபட்டவர்கள் முரண் கோட்பாட்டாளர்கள் எனக் கருதப்பட்டனர். சுதந்திரமான சிந்தனைக்கு இந்தச் சூழல் ஏற்புடையதாக இருக்கவில்லை. சமயச் சிந்தனைக் கொள்கையை பல்வேறு நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதைத் தொடர்ந்து மற்ற துறைகளிலும் சிந்தனைச் சுதந்திரம் ஏற்கப்பட்டது.
இங்கு மற்றொரு முக்கிய அம்சத்தையும் கவனிக்க வேண்டும். இந்தப் பட்டியலில் இடம் பெறுபவர்களில் அநேகமானோர், பிரிட்டனைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக இடம் பெற்றிருப்பவர்கள் ஜெர்மானியர்கள். மொத்தத்தில் வட ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்ந்த புரோட்டஸ்டான்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைக் காண்கிறோம். ஆயினும், அவர்களில் கூட்டன்பர்க், சார்லிமான் ஆகிய இருவர் மட்டுமே 1517 ஆம் ஆண்டிற்கு முன்னர் வாழ்ந்தவர்கள். இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அந்தத் தேதிக்கு முற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், உலகின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இன்று புரோட்டஸ்டான்டு நாடுகளாக விளங்கும் நாடுகளில் வாழும் மக்கள், மனிதப் பண்பாட்டுக்கும் வரலாற்றுக்கும் மிகக் குறைந்த அளவே தொண்டாற்றியுள்ளனர். ஆனால், ஏராளமான அறிஞர்கள் கடந்த 450 ஆண்டுகளில் இந்த மண்டலங்களில் தோன்றியதற்குச் சமயச் சீர்திருத்த இயக்கம் ஓரளவுக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் எனக் கருத இடமேற்படுகிறது. இந்த இயக்கத்தின் விளைவாக, இந்த மண்டலங்களில் அதிக அளவில் அறிவுச் சிந்தனைச் சுதந்திரம் நிலவியது இதற்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம்.
லூதரிடமும் குறைபாடுகள் இல்லாதிருக்கவில்லை. சமய ஆதிக்கத்திற்கு எதிராக இவர் புரட்சி செய்த போதிலும், சமயப் பொருட்பாடுகளில் தம்முடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களிடம் இவர் மிகக் கொடூரமாக நடந்து கொண்டார். சமயப் போர்கள், இங்கிலாந்தைவிட ஜெர்மனியில் மிகக் கடுமையாகவும், அதிக இரத்தக் களரியுடனும் நடந்ததற்கு லூதர் தொடங்கி வைத்த சமயச் சகிப்புத் தன்மையற்ற போக்கு ஓரளவுக்குக் காரணம் எனலாம். அத்துடன் யூத இனத்தவரை லூதர் அதீத மூர்க்கத் தனத்துடன் வெறுத்தார். யூதர்களைப் பற்றி இவர் எழுதிய நச்சுக் கருத்துகள் தாம், இருபதாம் நூற்றாண்டு ஜெர்மனியில் இட்லர் சகாப்தம் தோன்றுவதற்கு வழி வகுத்தது என்று கூடச் சொல்லலாம்.
சட்டப்படி அமைந்த ஆட்சிக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை லூதர் வலியுறுத்தினார். குடியியல் அரசின் அலுவல்களில் திருச்சபையினர் தலையிடுவதை அவர் தீவிரமாக எதிர்த்ததே அவர் இவ்வாறு வலியுறுத்தியதற்குக் காரணம். (சீர்திருத்த இயக்கம் என்பது ஓரளவுக்கு இந்தக் காரணத்தினாலேயே, ஜெர்மானிய இளவரசர்களிடமிருந்து லூதருக்கும் பெருமளவு ஆதரவு கிடைத்தது). லூதரின் உள் நோக்கங்கள் என்னவாக இருந்தபோதிலும், அரசியல் விவகாரங்களில் வரம்பற்ற ஆட்சிக் கொள்க€யை (Absolutism) பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஏற்றுக் கொள்வதற்கு லூதரின் உரைகள் வழிவகுத்தன எனலாம். இந்த வகையிலும், இட்லரின் சகாப்தத்திற்கு லூதரின் உரைகள் வழி வகுத்தன எனலாம். இந்த வகையிலும், இட்லரின் சகாப்தத்திற்கு லூதரினுடைய எழுத்துகள் வழியமைத்திருக்கலாம்.
மார்ட்டின் லூதருக்கு இந்தப் பட்டியலில் இன்னும் உயர்ந்த இடம் ஏன் அளிக்கப்படவில்லை என்று சிலர் வினவலாம். முதலாவதாக, ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும், லூதர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவராக தோன்றினாலும், கிறிஸ்துவர்கள் மிகக் குறைவாக உள்ள ஆசியாவிலும், ஆஃப்ரிக்காவிலும் வாழும் மக்களுக்கு அவர் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவராகத் தோன்றவில்லை. பெரும்பாலான சீனர்கள் ஜப்பானியர்கள் அல்லது இந்தியர்களைப் பொறுத்தவரையில், கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டான்டுகளுக்குமிடையிலான வேறுபாடு மிக அற்பமானதேயாகும். அதே போன்று, இஸ்லாம் சமயத்தின் சன்னி மரபுக் கிளையினருக்கும், ஷியா மரபுக்கிளையினருக்குமிடையிலான வேற்றுமையில் பெரும்பாலான ஐரோப்பியர்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை). இரண்டாவதாக, வரலாற்றில் மிக அண்மையில் தோன்றியவர் லூதர். மனித வரலாற்றில், முஹம்மது நபி, புத்தர், மோசஸ் போன்றறோரை விட மிகக் குறுகிய காலமே லூதரினுடைய செல்வாக்கு நிலவியது. மேலும், குறைந்து கொண்டு வருகிறது. கடந்த 1000 ஆண்டுகளில் இருந்ததை விட அடுத்த 1000 ஆண்டுகளில் மனிதரின் விவகாரங்களில் சமயத்தின் செல்வாக்கு மிகமிகக் குறைவாகவே இருக்கும். சமய நம்பிக்கை வீழ்ச்சியடைவது தொடர்ந்து நீடிக்குமானால், எதிர்கால வரலாற்றாசிரியர்களுக்கு லூதர் இன்றுள்ளதை விடவும் மிகக் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவராகவே தோன்றுவார்.
இறுதியாக, 16 ஆம் நூற்றாண்டிலும், 17 ஆம் நூற்றாண்டிலும் எழுந்த சமயப் பூசல்கள் அதே கால அளவின் போது ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்கள் பெருமளவு மக்களின் வாழ்க்கையைப் பாதித்த அளவுக்கு, பாதிப்பு ஏற்படுத்தவில்லை. கோப்பர்னிக்கசுக்கு முன்னதாக லூதருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு அறிவியல் புரட்சியில் கோப்பர்னிக்கஸ் ஏற்ற பங்கினைவிட கணிசமான அளவு கூடுதல் பங்கினை சமயச் சீர்திருத்த இயக்கத்தில் தனி மனிதராக லூதர் ஆற்றினார் என்பதே முக்கியக் காரணமாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மார்ட்டின் லூதர் (கி.பி.1483 - கி.பி.1546), லூதர், இவர், சமயச், சீர்திருத்த, லூதரின், சமயப், அவர், இடம், மிகக், மட்டுமே, இந்தப், இந்தச், பல்வேறு, தமது, ஆண்டில், லூதருக்கு, பெரும்பாலான, அவருடைய, வேண்டும், மார்ட்டின், ஜெர்மனியில், பாவம், எனலாம், திருச்சபையினர், இயக்கம், எனக், கொண்டு, கத்தோலிக்கத், லூதரினுடைய, முக்கிய, இயக்கத்தின், மற்ற, முக்கியத்துவம், ஆண்டுகளில், அதிக, பட்டியலில், சமயத்தின், ஏற்றுக், திருச்சபையினருக்கு, இந்தக், எதிரான, பணம், தாம், கருத்துகள், ரோமன், இவருக்கு, ஐரோப்பாவின், திருச்சபை, விரைவிலேயே, ஜெர்மன், பெரும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்