முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » மைக்கேலாஞ்சலோ (கி.பி.1475 - கி.பி.1564)
மைக்கேலாஞ்சலோ (கி.பி.1475 - கி.பி.1564)
14-16 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை - இலக்கிய மறுமலர்ச்சி இயக்கம் சாந்த தலைசிறந்த ஓவியராகிய மைக்கேலாஞ்சலோ புவோனாராட்டி ஓவியக் கலை வரலற்றில் முன்னணிக் கலைஞராக விளங்கியவர் ஆவார். பெருந்திறமை வாய்ந்த ஓவியராகவும், சிற்பியாகவும், கட்டிடக்கலை வல்லுநராகவும் திகழ்ந்த மைக்கேலாஞ்சலோ எண்ணிறந்த அரிய கலைப்படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார். சிறந்த வேலைப்பாடுகளுடைய இந்தப் படைப்புகள் நான்கு நூற்றாண்டுகளாகக் காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து வருகின்றன.
இத்தாலியில் ஃபிளாரன்ஸ் நகரிலிருந்து சுமார் 40 மைல் தொலைவிலிருந்த கேப்பிரசி என்ற நகரத்தில் 1475 ஆம் ஆண்டில் மைக்கேலாஞ்சலோ பிறந்தார். மிக இளம் வயதிலேயே இவர் தமது கலைத் திறமையைக் காட்டினார். தம் 13 ஆம் வயதில் ஃபிளாரன்ஸ் நகரில் புகழ் பெற்ற ஓவியராக விளங்கிய கிர்லாண்டையோ என்பாரிடம் இவர் பயிற்சியாளராகச் சேர்ந்தார். இவரது 15 ஆம் வயதில் ஃபிளாரன்ஸ் அரசர் வீறார்ந்த லோரன் சோ (Lorenzo the Magnificent) இவரை தமது மெடிசி அரண்மனையில் வாழ்வதற்கு அழைத்துக் கொண்டார். அது முதற்கொண்டு இவர் அரச குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே வாழ்ந்தார். லோரன்சோ மன்னர் இவரது புரவலராகவும் ஆனார். மைக்கேலாஞ்சலோ தமது வாழ்நாள் முழுவதிலும் தமது மகத்தான கலைத் திறமையை வெளிப்படுத்தினார். போப்பாண்டவர்களும், சமயச்சார்ப்பற்ற அரசர்களும் கலைப்படைப்புகளை வடிவமைக்கவும் உருவாக்கவும் இவரை அழைத்தனர். இவர் பல்வேறு இடங்களில் வாழ்ந்தாலும், தம் வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை ரோம் நகரிலும், ஃபிளாரன்ஸ் நகரிலுமே கழித்தார். இவர் 1564 ஆம் ஆண்டில், தமது 89 ஆம் பிறந்த நாளுக்குச் சற்று முன் காலமானார். இவர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.
இவர் தம் காலத்தில் வாழ்ந்த, தமக்கு மூத்தவரான லியோனார்டோ-டாவின்சியைப் போல் பல துறைப் புலமை வாய்ந்தவராக இல்லாதிருப்பினும் மைக்கேலாஞ்சலோவின் பல துறைத் திறமையினைக் குறைத்து மதிப்பிடுவதிற்கில்லை. மனித முயற்சியின் இரு தனித் துறைகளில் சாதனையின் கொடுமுடியினை எட்டிய ஒரே கலைஞர்-ஏன் ஓர் மனிதர் மைக்கேலாஞ்சலோதான் எனில் மிகையன்று. ஓவியர் என்ற முறையில், நேர்த்தியான கலைப்படைப்புகளைப் படைத்ததிலும், பிற்கால ஓவியர்கள் மீதும் தம் செல்வாக்கைச் செலுத்தியதிலும் மைக்கேலாஞ்சலோ சிகரத்தையே எட்டினார். ரோம் நகரிலுள்ள சிஸ்டன் தேவாலயத்தின் உள் முகடுகளை அலங்கரிப்பதற்கு இவர் வரைந்துள்ள மேல் மண்டப ஓவியங்கள், வரலாற்றில் தலைசிறந்த கலைப்படைப்புச் சாதனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும் மைக்கேலாஞ்சலோவோ தம்மை ஒரு சிற்பி என்றே கூறிக்கொண்டார். பல திறனாய்வாளர்களும் இவரை ஒரு தலைசிறந்த சிற்பக் கலைஞர் என்றே கருதுகிறார்கள். எடுத்துக்காட்டாக இவர் உருவாக்கிய டேவிட், மோக்ஸ் ஆகியோரின் சிலைகள் ஈகையற்ற கலை வேலைப் பாடுகளாக போற்றப்படுகின்றன.
மிக உயர்ந்த திறம்படைத்த கட்டிடக் கலை வல்லுநராகவும் மைகேலாஞ்சலோ திகழ்ந்தார். கட்டிடக் கலைத் துறையில் இவருடைய புகழ்பெற்ற சாதனைகளில் தலை சிறந்தது ஃபிளாரன்சில் இவர் வடிவமைத்து எழுப்பிய மெடிசி தேவாலயம் ஆகும். பல ஆண்டுகள் ரோம் நகரிலுள்ள புனித பீட்டர் தேவாலயத்தின் தலைமைக் கட்டிடக் கலைஞராகவும் இவர் பணி புரிந்தார்.
மைக்கேலாஞ்சலோ தம் வாழ்நாளில் ஏராளமான கவிதைகளையும் இயற்றினார். இவர் இயற்றிய 300 கவிதைகள் இன்னும் உயிர் வாழ்கின்றன. இவர் இயற்றிய கணக்கற்ற ஈரேழ் வரி பாக்களும் (Sonnets) மற்றக் கவிதைகளும் இவருடைய இறப்புக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. இவை இவருடைய ஆளுமையை அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன. இவர் ஒரு தேர்ந்த புலவராகவும் விளங்கினார் என்பதையும் இவை புலப்படுத்துகின்றன.
ஷேக்ஸ்பியர் பற்றிய கட்டுரையில் நான் விளங்கியது போல், பொதுவாக, கலையும், கலைஞர்களும், மனித வரலாற்றிலும் அன்றாட வாழ்விலும் குறைந்த அளவு செல்வாக்கினையே செலுத்துகிறார்கள். அந்தக் காரணத்தினாலேயே, மைக்கேலாஞ்சலோ இணையற்ற கலை மேதையாக விளங்கிய போதிலும், அவரை விடக் குறைவாகப் புகழ் பெற்ற பல விஞ்ஞானிகளுக்கும், புத்தமைப்பாளர்களுக்கும் பின்னர் இப்பட்டியலில் அவர் இடம் பெற்றிருக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மைக்கேலாஞ்சலோ (கி.பி.1475 - கி.பி.1564), இவர், மைக்கேலாஞ்சலோ, தமது, ஃபிளாரன்ஸ், கட்டிடக், இவருடைய, ரோம், இவரை, தலைசிறந்த, கலைத், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்