தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
"தொன்மொழியாம் தென்மொழியிற் சதுரகராதி
முதலிய பற்பல வகராதிகள் இருப்பினும் அவைகளெல்லாம் பெருவாரியாய்ப் பள்ளிப் பிள்ளைகட்கும் பிறர்க்கும் எளிதிற் பயன்தருவன அல்ல . அன்றியும்
அவைகளின் விலை ஏற்றமும் உருவத் தோற்றமும் எல்லாரும் எளிதிற் பெற்று உபயோகிக்க அனுகூலமானவைகளல்ல. ஆகையால், வீணாக
விரித்தும் மிகச் சுருக்கியும் பயன்றறதாக்காமல் இதனைத் தற்காலத் தமிழ் மாணவரும் பிறரும் நயமாக வாங்கி நவீன முறையால் உபயோகித்து நலம் அடையுமாறு நல்லெழுத்திலும் நற்காகிதத்திலும் அச்சிட்டிருக்கின்றோம் .
"இன்னும் இம் மொழியில் வந்து வழங்கும் வடசொற்களில் இன்றியமையாதவைகளையும், திசைச்சொற்களில் அரசாங்க முறையிலும், அதிகார முறையிலும், வர்த்தக முறையிலும் , சாஸ்திர சாம்பிரதாய இலௌகீக முறைகளிலும் உள்ள எத்தனையோ சொற்களையும் இதில் புதுவனவாகச் சேர்த்திருக்கின்றோம். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே' என்ற ஆன்றோர் மொழிப்படி அவைகள் தகையாம் அன்றி மிகையாகா .
" ' அரச னெவ்வழி அவ்வழி குடிகள் ' என்று பழமொழியைப் புதுமொழியாக்க , ' அரசன் எவ்வழி ஆசாரம் அவ்வழி ' என்று ஆக்கிவிடலாம் என்றெண்ணும்படி அநேக நவீன இலௌகீக ஆசாரங்கள் பிரவர்த்தித்திருக்கும் இந் நாளில் முன்னாளைய வழக்கத்தை அனுசரித்த தமிழகராதியைப்போன்ற தொன்றே போதாமையை அனுபவத்தில் உணர்ந்த யாம் , இதில் அநுபந்தங்களாகப் பஞ்சாங்கப் பெயர்களில் பக்ஷங்களின் பெயரையும் , பஞ்சபக்ஷி பெயர்களையும் , அவைகளின் தொழில்களையும், வாரசூலையின் வாரநாழிகைகள் , பரிகாரங்கள் முதலியவைகளையும் , கிரகணங்கள் , பரதகண்டவாசிகளின் பண்டிகைகள் , முகம்மதியர் பண்டிகைகள், உருஸுகள், கிறித்தவர்களின் முக்கியப் பண்டிகைகள் , திருநாட்கள் , அச்சுப்பிழை திருத்தி அச்சுக்கூடத்துக் கனுப்புவதற்கு வேண்டிய திருத்தக்குறிகள் , அவைகளின் விளக்கங்கள் இங்கிலீஷ் நாணய வழக்கப்பெயர்கள் , பரதகண்ட நாணய வழக்கப் பெயர்கள் , புகை வண்டியில் ஏற்றும் சாமான்களின் நிறை அளவின் பெயர்கள் , சென்னை முகத்தலளவை, பரதகண்ட கால அளவைகளின் பெயர்கள், இங்கிலீஷ் கால அளவைகளின் பெயர்கள், லீப் வருஷக் குறிப்பு, இங்கிலீஷ் நீட்டலளவைப் பெயர்கள், நிறுத்தலளவைப் பெயர்கள், இங்கிலீஷ் முகத்தலளவைப் பெயர்கள் , தானிய தவச அளவுப் பெயர்கள் , எணவாய் பாட்டுப் பெயர்கள் , இங்கிலீஷ் நிறுத்தலளவைகள் (பொன், வெள்ளி முதலியன), இங்கிலீஷ் மருந்து நிறுத்தலளவைப் பெயர்கள் , இங்கிலீஷ் நீட்டலளவைப் பெயர்கள், இங்கிலீஷ் சதுர அளவைப் பெயர்கள், வாக்கியங்கள் அர்த்தமாவதற் கனுகூலமான அடையாளப் பெயர்கள் முதலியவைகளையும் முறையாகச் சேர்த்திருக்கின்றோம் .
" அன்றியும் அனுபந்தம் ஒன்றில் அசல் , அலாதி என்பவைகளைப்போன்ற உருது பாஷைப் பதங்கள் , அலமாரி , கிராம்பு போன்ற போர்த்துகேசியச் சொற்கள் , எச்சரிக்கை, வாடிக்கைபோன்ற தெலுங்கு பதங்கள் , பயங்காளி, விரயம் போன்ற கிராமியச் சொற்கள், எராளம் , தாராளம் முதலிய வழக்குச் சொற்கள் , கவர்ன்மெண்ட் , கவர்னர் முதலிய இங்கிலீஷ் பதங்கள் முதலியவைகளையும் -
"அனுபந்தம் இரண்டில் அக்ரிமெண்ட் , அங்குஸ்தான் முதலிய அன்னிய வியாபாரக் கூட்டு சம்பந்தமான மொழிகளையும் , பிறமத சம்பந்தமான மொழிகளையும் , நவீன சாஸ்திர சம்பந்தமான மொழிகளையும் இன்னும் பற்பல புதுச் சொற்களையும் -
"அனுபந்தம் மூன்றில் வருஷங்கள் , மாதங்கள் , வாரங்கள் , இராகுகால நாழிகைகள் , கிரகங்களின் பெயர்கள் , நக்ஷத்திரங்களின் பெயர்கள் , இலக்கினங்களின் பெயர்கள் , திதிகளின் பெயர்கள், யோகங்கள், கரணங்கள் , மூன்றாம் பிறை, இராசிகளின் பெயர்கள் ஆகியவைகளைக் குறிக்கும் சொற்களையும் நவீன முறையாக யாவரும் நலம்பெறப் புகுத்தி வெளியிட்டிருக்கின்றோம் ." (பக்கம் xxxvi - xxxviii)
கையகராதிகள்:
'இளைஞர் தமிழ்க் கையகராதி' என்பது மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்களால் தொகுத்துப் பள்ளி மாணவர்க்கெனவே படைக்கப்பெற்றது. ஏறத்தாழ 8500 சொற்களைக் கொண்டது, திரு. பிள்ளையவர்கள் குழந்தைகளுக்கான நூலாக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்கள். பல்வேறு பதிப்பக நூல்களும் இவர் கண்பார்த்துச் செம்மைபெற்றன. பண்டைஇலக்கிய இலக்கணங்களைச் சீரிய முறையில் கூர்ந்தாய்ந்து பதிப்பிப்பதில் ஒப்புயர்வின்றி விளங்கியவர். மாணவர்க்கான பாடநூல்களில் பல நாள் ஈடுபட்ட தம் பயிற்சியின் விளைவாக உயர்நிலைப்பள்ளி மாணவர்க்குத் துணைநிற்கும் வகையில் இந்தக் கையகராதியைத் தொகுத்து வெளியிட்டார். இது சென்ற நூற்றாண்டில் தோன்றிய 'அகராதிச் சுருக்கம்' நூலை அடியொற்றியது. இது 1928-ல் மலர்ந்தது ; பின்னும் சில பதிப்புகளைப் பெற்றது. இவையிரண்டுமே சட்டைப்பையில் வைத்துக்கொள்ளத்தக்க சிறிய ஆங்கில அகராதி போன்றனவாகும்.
நவீன தமிழ் அகராதி :
தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி சொற்பொருள்களோடு பல்வேறு வகையான செய்திகளின் விளக்கங்களையும் கொண்டு விளங்கும் புத்தகராதி என்பது தெரியவரும் .தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியின் அமைப்பையும் போக்கையும் ஒட்டி 1935 - ல் வெளியானது இந்த நவீன தமிழ் அகராதி . இதனை ஆக்கியவர் புரசைப்பாக்கம் தமிழ்ப் பண்டிதர் சீ கிரிஷ்ணசாமிப் பிள்ளையாவார் . இவர் தாம் தொகுத்த அகராதியைக் குறித்துப் பின்வருமாறு சுட்டியுள்ளார் .
'' நமது தமிழ்மொழியில் அகராதிகளும் நிகண்டுகளும் சொற்பொருளாராயச்சி செய்யாது குறைபாடுடையனவா யிருக்கின்றன . ஆகவே , தற்காலத்தில் பல நாடுகளிலுமுள்ள பல நூறாயிரம் மக்கள் தாங்கள் கற்கப் புகும் தமிழ்நூல்களுள் வரும் கடினமொழிகளின் பொருள்களை எளிதில் உணரும்வண்ணம் வீணில் பெருக்கியும் அழகுகுன்றச் சுருக்கியுமிராமல் இன்றியமையாத சொற்களனைத்தையும் திரட்டித் தக்க இடங்களில் மொழிகளுக்கேற்ற பொருள்களை இலக்கியங்களினின்றும் உதாரணமுகத்தால் விளக்கிக் காட்டியும் , எழுத்துப் பிழையில்லாமலும், வழக்காற்றிலுள்ள மொழிகளுக்கு உடுக்குறியும்* ஒரு மொழியின் பொருள்கள் உலக வழக்கிலிருப்பின் அவற்றைப் பிராக்கெட்டுக்கு [ ] முன்னதாகவும் அமைத்து இதற்கு 'நவீன தமிழ் அகராதி ' என்னும் பெயரைத் தந்து பதிப்பித்தனன்.''
இலக்கியச் சொற்கள் , வழக்காற்றுச் சொற்கள் , பொருள்கள் ஆகியவை எந்தவகையில் இதில் தரபட்டுள்ளன என்பது தெளிவாகிறது . மாணவர் அகராதியை வெளியிட்ட ஸி . குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் நிறுவனத்தாரே இதனையும் வெளியிட்டுள்ளனர் . பெரும்பான்மையும் மாணவர் அகராதியைத் திருத்தியும் புதுக்கியும் வெளியிட்ட ஒரு பதிப்புப் போன்றதே இந்த அகராதி.
தமிழமிழ்த அகராதி-தமிழறிஞர் அகராதி:
இவற்றை வெளியிட்டோரும் ஸி. குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் நிறுவனத்தாரேயாவர். தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியில் அனுபந்தமாகச் சேர்க்கப்பெற்ற பல பொருள்களும் இவற்றில் வகைப்படுத்தப்பெற்று வளப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்குப் பிறமொழிச் சொற்களையும், எழுத்துப் பேதத்தால் பொருள் மாறுபடும் சொற்கள் முதலியவற்றையும் அறிய இவை பயன்படும்.*
கழகத் தமிழ்க் கையகராதி:
இளைஞர் தமிழ்க் கையகராதிக்கு அடுத்த நிலை, இதில் உள்ள சொற்களைவிடவும் ஒன்றரை மடங்குச் சொற்களைக் கொண்டது இந்த அகராதி ; இதில் 12500 சொற்கள் இடம்பெறுள்ளன. இதனைத் தொகுத்து அளித்தோர் சேலைசகதேவ முதலியாரும் காழி சிவ. கண்ணுசாமிப் பிள்ளையவர்களுமாவர் . இதனைத் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் 1940-ல் வெளியிட்டுளளனர். எனவேதான் இதற்குக் ' கழகத் தமிழ்க் கையகராதி ' எனப் பெயரிடலாயினர் . இதுவும் சட்டைப்பையில் அடங்கும்படியான அளவினதே.
கோனார் தமிழ்க் கையகராதி:
வித்துவான் ஐயன்பெருமான் கோனார் திருச்சிராப்பள்ளியில் பள்ளித் தமிழாசிரியராக விளங்கியவர் ; பள்ளியிறுதி வகுப்புப் பாடநூல்கள், கல்லூரித் தமிழ்ப் பாடநூல்கள் ஆகியவற்றிற்குப் பல ஆண்டுகளாய் உரைநூல் வெளியிட்டுவந்தவர். எனவே, மாணவர்களுக்கான பாடநூல்களில் பயின்றுவரும் சொற்பரப்பினை நன்கு தெரியும் வாய்ப்பினைப் பெற்றிருத்தார். இவர் எழுதிய உரைநூல்களை வெளியிட்டுவந்த பழனியப்பா சகோதரர் நிறுவனத்தார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்றவகையில் ஓர் அகராதி ஆக்கக் கோனார் அவர்களுக்கு ஊக்கம் தந்தனர். இவருடைய அகராதித் தொகுப்பை இவர் பெயரையிட்டுக் 'கோனார் தமிழ்க் கையகராதி' என்னும் பெயரில் 1955-ல் வெளியிட்டனர். 'இஃது இளைஞர் கையகராதியினும் பார்க்க இருமடங்குச் சொற்கள், அதாவது 16500 சொற்கள் கொண்ட சிற்றகராதியாக உள்ளது.
தமிழ் இலக்கிய அகராதி:
கோனார் தமிழ்க் கையகராதியை அடுத்து 1957-ல் வெளிவந்தது 'தமிழ் இலக்கிய அகராதி' . இதனை எழுதித் தொகுத்தவர் வித்துவான் பாலூர் து. கண்ணப்ப முதலியாராவார். இவர் உயர்நிலைப்பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழ் பயிற்றுவித்தவர். இந்த அகராதியைச் சொல் அகராதி, தொகை அகராதி, பிரபந்த அகராதி, நூல் அகராதி , புலவர் அகராதி என ஐந்து கூறாக அமைத்துத் தந்துள்ளார். சதுரகராதி என்றாற்போல் இதனைப் 'பஞ்சக அகராதி' என்று சுட்டலாம். இந்த அகராதியின் அமைப்பும் சிறப்புத் தனமையும் குறித்துத் தொகுப்பாசிரியர் முன்னுரையில் தரும் விளக்கவுரை வருமாறு:
"தமிழ் இலக்கிய அகராதி என்னும் இந் நூல் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் , இடைநிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்கட்குப் பாடநூலாக வரும் இலக்கியங்களிலும் உரைநடைகளிலும் காணப்படும் சொற்களுக்குரிய பொருள்களை நன்கு உணர்தற்கான வழிகளில் தொகுத்து எழுதப்பெற்றுள்ளது. இலக்கிய மொழிகளையன்றி உலகவழக்கு மொழிகளுக்குரிய பொருள்களையும் இது தன்னகத்துக் கொண்டுள்ளது. அடிக்கடி நூல்களின் வாயிலாகவும் பேச்சுவழக்கின் வாயிலாகவும் காணப்படுகின்ற வடசொற்களுக்கும் சாஸ்திர சம்பந்தமான சொற்களுக்கும் பொருள் அறிய இது துணைசெய்ய வல்லது. இவ் வகராதி கையகத்திருப்பின் சொற்களின் பொருளை முட்டின்றிப் பிறர் உதவியின்றி அறிந்துகொள்ளலாம்.
இந் நூல் சொற்களுக்குரிய பொருளை அறிதற்குத் துணை செய்வதோடு நில்லாமல் தொகைச்சொற்கள், தொடர்மொழிகளின் விளக்கங்கள், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்கட்குரிய விளக்கங்கள், நூல்கள் பலவற்றினைப்பற்றியும் புலவர்களில் பலரைப் பற்றியும் குறிப்புக்கள் கொண்டு திகழ்கிறது. ஆகவே, தமிழ்நூல்களைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் ஒருங்கே அறிதற்கு இந் நூல் பெருந்துனை செய்வது."
இதுவும் கையகராதி நிலையில் உள்ளதே. இவர் இந்த அகராதியை ஐந்து பகுதிகளாகப் பகுத்து அமைத்தது ஒரு புதுமை.
* இவற்றின் பொருளடக்க விரிவை ' மொழியியல் அகராதிகள் ' என்னும் தலைப்பின்கீழ்ப் பின்னர்க் காண்க - பக்கம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பெயர்கள், அகராதி, இங்கிலீஷ், சொற்கள், தமிழ், நவீன, தமிழ்க், இவர், கையகராதி, இதில், கோனார், முதலிய, நூல், சம்பந்தமான, தற்காலத், இலக்கிய, என்னும், சொற்களையும், தொகுத்து, பொருள்களை, பற்றியும், என்பது, தமிழ்ச், பதங்கள், சாஸ்திர, முறையிலும், இதனைத், அவைகளின், முதலியவைகளையும், பண்டிகைகள், மொழிகளையும், அனுபந்தம், விளக்கங்கள், இளைஞர்