தமிழ் - தமிழ் அகரமுதலி - முகவுரை
முகவுரை
(தொகுப்பாசிரியர்)
அகரவரிசை:
அகரவரிசை தொல்காப்பியர் நாளிலேயே தொடக்கமாயிற்று. "எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப" என்று எழுத்துகளைத் தொகைசுட்டி முதற்கண் அவர் அறிவிக்கின்றார்; பின்னர், சொற்களின் புணர்ச்சி கூறத்தொடங்குமிடத்து மொழிமுதல் எழுத்து மொழியிறுதி எழுத்துகளை வரையறுத்துக் காட்டியுள்ளார். மொழிமரபில் விளக்கிய மெய்ம்மயக்க மரபுகளை நினைவுகூர வைக்கும் வகையில் உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல் என உயிரீற்றுச் சொற்கள், புள்ளியீற்றுச் சொற்களுடன் பிற சொற்கள் புணரும் முறைமை காட்டும் பகுதிகளுக்குப் பெயரிட்டுள்ளார். இவ்விரு இயல்களிலும் அவ்வச் சொற்களின் ஈறுகளை அகரவரிசை முறையில் அமைத்துச் சொற்புணர்ச்சி இலக்கணம் உரைக்கின்றார்.
திருக்குறளும் அகரமுதல் னகர இறுவாய் அமைப்புமுறையை நினைவூட்டும் வகையில் காட்சிதருகிறது. "அகர முதல எழுத்தெல்லாம்" என்று தொடங்கிய வள்ளுவப் பெருந்தகை "கூடி முயங்கப் பெறின்" (1330) என னகர ஈற்றுச் சொல்லால் நூலைத் தலைக்கட்டுகிறார்.
திருநாவுக்கரசர் அருளிய சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை (தேவா. 5. பதி.211) அகரவரிசை முறையில் அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
அகராதி நிகண்டு:
தமிழ் நெடுங்கணக்கு எழுத்துமுறையை வேறு சிலரும் சுட்டியபோதிலும், 'அகராதி' என இன்று வழங்கும் பொருளில் நூலாக்கம் செய்தவர் சிதம்பரம் இரேவணசித்தரேயாவார். இவரை இரேவணாத்திரியர் என்றும் குறிப்பது உண்டு. இவர் கி.பி. 1594-ல் தாம் இயற்றிய நிகண்டிற்கு 'அகராதி நிகண்டு' எனப் பெயர் சூட்டினார். பெயருக்கு ஏற்பச் சொற்கள் அகரவரிசையில் அமைய நூற்பாக்களை முறைப்படுத்தியுள்ளார். எனவே, இவருடைய நிகண்டு நூலினை 'அகராதி சூத்திரம்' என்றும் குறிப்பிடுவது உண்டு.
அகரவரிசை அமைந்த வகை:
இன்று நாம் கருதுவதுபோலச் சொற்களின் அகரவரிசை முறை - அதாவது சொல்லின் இரண்டாம் மூன்றாம் முதலிய எழுத்துகளையும் நோக்கி அமைக்கும் முறை - அந் நாளில் இல்லை. அகரமுதலிய எழுத்துவருக்கச் சொற்கள் அவ்வப் பகுதியில் இடம்பெறுதல் காணலாம். இதனினும் சற்று வளர்ச்சிபெற்ற அகரநிரல்முறை, அகராதி மோனைக் ககராதி யெதுகை, பல்பொருட் சூடாமணி, பொதிகை நிகண்டு ஆகியவற்றில் காணப்படுகின்றன.
அகராதிப் பெயர்;
செய்யுள் வடிவிலேயே வழங்கிவந்த நிகண்டுநூற் பொருள்களை உரைநடையில் அகரநிரலில் அமைத்துத்தர முற்பட்ட முதல்வர் வீரமாமுனிவர் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற பெஸ்கி பாதிரியாரேயாவார். சொற்பொருள் உணர்த்தும் நூலுக்கு ' அகராதி' என்னும் பெயரை வழங்கியவரும் இவரே. கி.பி. 1732-ல் பெஸ்கி பாதிரியார் தாம் தொகுத்து அமைத்த நூலுக்குச் 'சதுரகராதி' என்னும் பெயரினைச் சூட்டினார். அதுமுதலாகச் சொற்களுக்கு உரைவழி விளக்கம் தரும் நூல்கள் எல்லாம் ' அகராதி' என்னும் பெயரினைப் பெறுவதாயின. வள்ளுவர் வழங்கிய வான்மறையின் முதற்குறட்பா,
" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு". என்பது. இதன் முதலடியில், ' அகரம் ' - ' ஆதி' என்னும் இருசொற்களும் இடம்பெறுகின்றன.
இவற்றை இணைத்தால், 'அகராதி' என்னும் பெயர் கிட்டுகிறது. இத் தொடரே இரேவணசித்தருக்கும் பெயராக்கத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம்.
அகரமுதலி:
'அகராதி' என்பதில் 'ஆதி' வடசொல். வடசொற் கலந்த பெயரை நாம் வழங்குதல் முறையோ ? அப் பொருள்பயக்கும் தமிழ்ப்பெயர் ஆக்கலாமே என்னும் எண்ணம் தமிழறிஞரிடையே எழுவதாயிற்று. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் தாம் இயற்றி, 1906-ல் பதிப்பித்த'சேந்தன் செந்தமிழ்' என்னும் நூலில் அகரநிரலில் தரப்பட்டுள்ள பகுதியை 'அகரமுதல்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். 'அகரமுதல் னகர இறுவாய்' என எழுத்துகளை அறிமுகப்படுத்திய தொல்காப்பியரின் தொடரை எடுத்தாண்டுள்ளார் என்று கருதலாம். மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் 'அகரமுதலி'என்னும் பெயரைத் தமிழுலகில் நடையாடவிட்டார். அகரத்தை முதலாகக்கொண்டு அமைவதுதானே சொற்பொருள் உணர்த்தும் அகராதி நூல். இவர் முதற்குறளின் முதலிரு சீர்களாகிய 'அகர முதல' என்பதனை முன்னோடியாகக் கொண்டே 'அகரமுதலி' என்னும் அழகிய தமிழ்ப்பெயரை ஆக்கியுள்ளார். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிடும் இந்தத் தமிழ் - தமிழ் அகரமுதலி என்னும் சொற்பொருள் விளக்கப் பெருந்தொகுதியே இப் பெயரைப் பெறும் முதல் நூலாகும். நடைமுறை எழுத்து வடிவங்களைப் பெற்று வெளிவரும் தன்மையிலும் இது முதலாவதாகும்.
அகரமுதலி விளக்கம்:
'அகரமுதலியாவது' அகரத்தை முதலாகக்கொண்டு நெடுங்கணக்கு முறையில் அமையும் சொற்பொருள் விளக்க நூல் என்பதனைத் தெளிவுறத் தெரிவிக்கும். 'அகராதி' என்னும் பெயருக்கும் பொருள் இதுவே*. வரலாற்று முறையில் 'அகரமுதலி' என்னும் பெயர் இருபதாம் நூற்றாண்டில் பிறந்ததொரு புதுப்பெயர் ; புத்தாக்கப்பெயர்; அகராதி என்பதற்கு ஏற்புடைய மாற்றுப்பெயர்; தமிழ்ப்பெயர்.
மவுனகுரு:
அகரமுதலி, கற்பார்க்குத் துணைநின்று உரிய பொருள் தெரிந்துகொள்ள வழிவகுத்து உதவுகிறது.ஆதலால், கல்வி கற்பிக்கும் ஆசானின் நிலையில் உள்ளது அகராதி என்னலாம். ஆசான் ஒருவரை அடுத்துக் கல்விப்பயன் பெறுவதுபோல அகராதியின் துணையால் அறிவுவிளக்கம் பெறலாம். ஓர் ஆசிரியர் உரிய பொருள்களையும் கருத்து நுட்பங்களையும் எடுத்துரைத்து, மாணவரின் ஐயம் அகற்றி, அரும்பொருளை அவர் அறியச் செய்திடுவார். அகராதியும் தன்னைப் பயன் படுத்துவாருக்கு அத்தகு நற்பயனை அளிக்கவல்லது. இதுபற்றியே அகராதியை 'மவுனகுரு' , 'மவுனாச்சாரி', 'மவுனவாசான்' என அறிஞர் போற்றுவாராயினர். சதுரகராதியைப் போற்றிப் புகழும் ஒருவர்,
"ஓர்மொழியும் ஓதாது உரைசெய் துணர்த்துவதால்
கூர்மவுனாச் சாரியெனக் கொள் "
என்றும்,
"பேசா துணர்த்திப் பிரித்துரைப்ப தால்மவுன
வாசான் நமக்கென்றும் ஆம் "
என்றும் உரைப்பது ஈண்டுச் சிந்தித்தற்குரியது. இதனால் அகராதிகளின் பெருஞ்சிறப்பும் பயன்பாடும் தெள்ளென விளக்கமாகும்.
* அகராதி என்பதற்கு விளக்கம் மானிப்பாய் அகராதியில்தான் முதன்முதல் தரப்படுகிறது.
அகராதி - அகரமுத லெழுத்துக்களாற் றொடங்குஞ் சொற்கோவை(மானிப்பாய் அகராதி). இந்த விளக்கமே கா. இராமசாமி நாயுடுவின் பேரகராதி, பி.இராமநாதனின் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதி முதலியவற்றிலும் காணப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகவுரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அகராதி, என்னும், அகரமுதலி, அகரவரிசை, பெயர், சொற்பொருள், என்றும், நிகண்டு, அகரமுதல், முறையில், சொற்கள், விளக்கம், தமிழ், இறுவாய், சொற்களின், முதல, தாம்