விஷ்ணு புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
சடங்குகள்
ஒரு குழந்தை பிறந்த பொழுதும், ஒருவன் மரித்த பொழுதும் வெவ்வேறு வகையான சடங்குகள் செய்யப் படுகின்றன. குழந்தை பிறந்த பத்தாம் நாள் தந்தை குழந்தைக்குப் பெயர் சூட்டுகின்றான். திருமணங்கள் எட்டு வகைப்படும். அவை பிரம்மம், தெய்விய, அர்ஷ, பிரஜாபத்ய, அசுர, காந்தர்வ, ராட்சச பைசாச என்பவை ஆகும். ஒவ்வொரு வர்ணத்திற்கும் குறிப்பிட்ட வகைத் திருமணங்கள் குறிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் சில கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. கடவுளை வணங்குதல், பசு, பிராமணர்கள், முனிவர்கள், வயது முதிர்ந்த ஆசிரியர்கள் ஆகியோரை வணங்க வேண்டும். திருடுதல், பொய் பேசுதல், பிறரை நோகச் செய்தல் ஆகியவற்றைச் செய்யக் கூடாது. பிறர் குற்றம் கூறக் கூடாது. பிறருடைய செல்வம் கண்டு பொறாமைப்படக் கூடாது. தீயவர் சேர்க்கை கூடாது. தீப்பிடித்த வீட்டிற்குள்ளோ, மரத்தின் உச்சிமீதோ நுழையவும், ஏறவும் கூடாது. வாய் பொத்திக் கொட்டாவி விட வேண்டும். கொடிகளையும், வணக்கத்திற்குரிய தெய்வங்களின் நிழல்களையும் மிதிக்கக் கூடாது. வீட்டிலும் காட்டிலும் தனித்து வாழக் கூடாது. கொடிய விலங்குகள் அருகே செல்லக்கூடாது.
வீட்டை விட்டுப் புறப்படுமுன் வீட்டின் தலைவன், தெய்வம், மலர், ஆபரணம், நெய் அல்லது மதிக்கத் தகுந்த ஒருவர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டுப் புறப்பட வேண்டும். நாட்டிலும், காட்டிலும் நடக்கும் பொழுது கையில் ஒரு தடிக் கொம்புடனும், காலில் செருப்புடனும் நடக்க வேண்டும். ஒருவன் உண்மையே பேச வேண்டும். அந்த உண்மை பேசுவதால் பிறருக்குத் தீங்கு உண்டாகும் என்ற நிலை வந்தால் பேசாமல் இருக்க வேண்டும்.
மகன், மகள் ஆகியோர் திருமணம், புதுமனை புகுதல், குழந்தைகட்குப் பெயர் சூட்டல், முதன்முறையாகப் பிறந்த சிசுவைப் பார்த்தல் ஆகியவை நிகழும் பொழுது அவ்வவற் றிற்குரிய சடங்குகளைச் செய்ய வேண்டும். ஒருவர் இறந்த பொழுது ஒற்றைப் படை எண்ணுள்ள பிராமணர்களுக்குச் சாதாரண உணவு படைத்தால், பிதுர்கள் ஒரு மாதத்திற்கும் மீன் விருந்து கொடுத்தால், இரண்டு மாதத்திற்கும் முயல் கறி கொடுத்தால், மூன்று மாதத்திற்கும் பறவைக் கறி தந்தால், நான்கு மாதத்திற்கும் பன்றிக் கறி கொடுத்தால், ஐந்து மாதத்திற்கும் ஆட்டுக் கறி கொடுத்தால், ஆறு மாதத்திற்கும் மான் கறி கொடுத்தால், ஏழு மாதத்திற்கும் சிறப்பான மான் கறி தந்தால், எட்டு மாதத்திற்கும் கயல் இறைச்சி தந்தால், ஒன்பது மாதத்திற்கும் வெள்ளாட்டுக் குட்டி கறி கொடுத்தால், பத்து மாதத்திற்கும் மாட்டுக்கறி கொடுத்தால், பதினோரு மாதத்திற்கும் குறிப்பிட்ட பறவையின் இறைச்சி கொடுத்தால், கால முழுவதற்கும் திருப்தி அடைவார்கள். சிரார்த்தம் செய்வதற்குச் சிறந்த இடம் கைலை என்ற ஊரேயாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விஷ்ணு புராணம் - பகுதி 10 - Vishnu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மாதத்திற்கும், வேண்டும், கூடாது, கொடுத்தால், தந்தால், பிறந்த, பிச்சை, பொழுது