வாயு புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
சிப்ரா நதிக் கரையில் உள்ள அவந்தியில் வேதப்பிரியா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தேவப்பிரியா, பிரியமேதா சுவரிதா, சுவரதா என்ற 4 பிள்ளைகள் இருந்தனர். இந்த பிராமணன் வேத வழியைப் பற்றி சிவனை வழிபட்டதோடு, தன் பிள்ளைகளையும் அதே வழியில் பழக்கி இருந்தான். இவர்கள் வாழ்ந்த இடத்திற்குப் பக்கத்தில் ரத்னமலை' என்று ஒரு மலை இருந்தது. அம்மலையில் துஷ்ணன் என்ற ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். இந்த பிராமணர்கள் சிவ வழிபாடு செய்வது அவனுக்குப் பிடிக்க வில்லை. இதனிடையில் இந்தப் பிள்ளைகளின் தந்தை இறந்து விட்டார். என்றாலும், பிள்ளைகள் சிவனை வணங்குவதில் தீவிரமாக இருந்தனர். இதைக் கண்ட அரக்கன் அவந்தியை முற்றுகையிட்டு இவர்களை அழிக்க முயன்றான். நால்வரும் சிவலிங்கத்திடம் சென்று தங்கள் குறைகளைக் கூறி வேண்டினர். திடீரென்று ஒரு பெரிய சப்தம் கேட்டது. அங்கு வெளிப்பட்ட சிவபெருமான் அரக்கனான துஷ்ணனை எரித்துச் சாம்பலாக்கி விட்டார். அன்றிலிருந்து பக்தர்களின் வேண்டுகோளின்படி மகாகாளர் அங்கேயே தங்கிவிட்டார்.
4. ஓம்கார லிங்கம்
விந்திய மலை எல்லா மலைகளையும்விடத் தான் உயர்ந்த தாகவும், தன்னிடம் எல்லாப் பொருளும் இருக்கின்றன என்றும் அதிகக் கர்வம் கொண்டிருந்தது. ஒருமுறை நாரதர் அங்கே வந்த பொழுது விந்தியம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டது. உடனே நாரதர், “அதிக கர்வம் பட வேண்டாம். சிவன் வாழ்கின்ற காரணத்தால் மேருமலை உன்னை விட உயர்ந்தது” என்று கூறினார். அதைக் கேட்ட விந்தியம் உடனே சிவனை நோக்கித் தவம் செய்தது. ஆறு மாதம் தவம் செய்த பின் சிவன் வெளிப்பட்டார். விந்தியம் தன்னிடத்தில் சிவன் தங்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டதால் ஓம்கார லிங்கமாக அங்கேயே தங்கிவிட்டார்.
5. கேதார லிங்கம்
விஷ்ணு ஒருமுறை தன்னையே நரன் என்றும், நாராயணன் என்றும் இரு முனிவர்களாக மாற்றிக் கொண்டார். இமயமலையில் உள்ள பத்ரிகாசரமம்' என்ற இடத்தில் இந்த இரு முனிவர்களும் சிவனைக் குறித்து நெடுங்காலம் தவம் செய்தனர். கடைசியாக சிவன் தோன்றி, “என்னை ஏன் அழைத்தீர்கள்? நீங்களே வணங்கத் தகுந்தவர்கள் தானே?’ என்றார். இருவரும் ஆசிரமத்தின் பக்கத்தில் உள்ள கேதாரம் என்னும் மலை உச்சியில் சிவன் என்றும் லிங்க வடிவில் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அவர் அவ்விதம் தங்கிய இடமே கேதாரம். அந்த லிங்கத்தின் பெயரே கேதார லிங்கம்.
6. பீம சங்கர லிங்கம்
சகிய என்ற மலையில் பீமன் என்ற அரக்கனும், அவன் தாயும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் பீமன் தன் தாயைப் பார்த்து, “நாம் ஏன் தனியாக இங்கு வாழ்கிறோம்? என் தந்தை யார்?' என்று கேட்டான். மிக்க வருத்தத்துடன் தாய் கர்கதி தன் வரலாற்றைச் சொன்னாள். விராதன் என்ற ராட்சச னுக்குத் தான் மனைவியாக இருந்ததாகவும், விராதனை இராமன் கொன்று விட்டபடியால் இராவணன் தம்பியான கும்பகர்ணனைத் தான் மணந்து பீமன் என்ற இப்பிள்ளையைப் பெற்றதாகவும், இலங்கைக்குச் சென்ற கும்பகர்ணனை இராமன் கொன்றுவிட்டான் என்றும், அதனால் வேறு போக்கிடம் இல்லாமல் காட்டிலே இருப்பதாகவும் கூறினாள். இராமன் விஷ்ணுவின் அவதாரம் ஆகையால், விஷ்ணுவைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பீமன் 1000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மன் வெளிப்பட்டவுடன் அனைவரையும் வெல்லக்கூடிய சக்தி தனக்கு வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான். அது கிடைத்தவுடன் பக்கத்தில் உள்ள விஷ்ணு பக்தனாகிய அரசன் காமரூபனை வென்று அவனைச் சிறையிலும் அடைத்துவிட்டான். சிறையில் அகப்பட்ட பீமன் சிறைக்குள் வந்து காமரூபனை வாளால் வெட்ட முயன்றான். சிவன் எதிரே தோன்றி தன்னுடைய சூலாயுதத்தால் பீமனுடைய வாளைக் கீழே விழச் செய்தான். பீமன் பயன்படுத்திய எல்லா ஆயுதங்களும், சிவனுடைய திரிசூலத்தால் பொடியாயின. இறுதியில் சிவன் பீமனைக் கொன்று விட்டான். காமரூபனின் வேண்டுகோளின்படி பீமசங்கரன் என்ற பெயருடன் அங்கேயே லிங்க வடிவாகத் தங்கிவிட்டார். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் இது ஆறாவது ஆகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 11 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், பீமன், என்றும், தவம், உள்ள, லிங்கம், சிவனை, வாழ்ந்து, இராமன், பக்கத்தில், விந்தியம், தான், அங்கேயே, தங்கிவிட்டார்