பவிஷ்ய புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
இந்த பூமி ஏழு துவீபங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: ஜம்புதுவீபம், பலக்ஷதுவீபம், வில்மலதுவீபம்; குசத்துவீபம் கிரெளஞ்சதுவீபம், புஷ்கர துவீபம் சகதுவீபம் ஆகியவை. பரதவர்ஷம் ஜம்பு துவீபத்தில் அமைந்து உள்ளது.
சகதுவீபத்தைச் சுற்றி தாதி சமுத்திரம் சூழ்ந்துள்ளது. இந்த துவீபத்தில் உள்ளவர்கள் நீண்டநாள் வாழ்க்கை உடையவர்களாகவும், புண்ணியம் செய்தவர்களாகவும் இருக்கின்றனர். பஞ்சம், நோய், முதுமை இவை அந்த அரசாட்சியை நெருங்கவில்லை. இங்கு நவரத்தினங்கள் நிரம்பப் பெற்ற ஏழு வெண்மையான மலைகள் உள்ளன. இங்குள்ள நதிகளில், ஆபரணங்கள் கிடைக்கப்பெறும்.
முதலாவது மலை மேரு எனப்படும். இங்குதான் முனிவர்களும், கந்தர்வர்களும் வாழ்கின்றனர். கிழக்குப் புறமாக சிறிது சாய்ந்தாற்போல் இருக்கும் மலை உதயா எனப்படும். இம்மலை உச்சி தங்கத்தினால் ஆனது. மூன்றாவது மலை மகாகிரி எனப்படும். இம்மலை ஆறுகளால் சூழப் பெற்றது. இந்த ஆறுகளில் இருந்து இந்திரன் நீர் எடுத்துச் சென்று மேகங்களாக மாற்றுவான். நான்காவது மலை ரைவடகா. இதிலிருந்து ரேவதி என்னும் நட்சத்திரத்தை எப்பொழுதும் பார்க்கலாம் என்பதினால் இம்மலை முகட்டிற்கு ரைவடகா என்ற பெயர் வந்தது. இம்மலை சகதுவீபத்தின் சொர்க்கம் எனப்படும். ஐந்தாவது மலை சியாமா எனப்படும். இது கருமை நிறம் கொண்டது. ஆறாவது மலை அந்தகிரி எனப்படும். இது வெள்ளியைப் போன்ற நிறமுடையது. ஏழாவது மலை அம்பிகேயா எனப்படும். இம்மலை எப்பொழுதும் பனியால் மூடப்பட்டு இருக்கும். நுழைவதற்கு மிகவும் கடினமானது.
சக என்ற பெயருடைய மரம் இங்கு வளர்கின்றது. இதனாலேயே இப்பகுதி சகதுவீபம் என்ற பெயர் பெற்றது. இந்த மரம் அனைவராலும் வணங்கப்பெறும். தேவர்களும், கந்தர்வர்களும் சகதுவீபத்தில் திறைந்திருக்கின்றனர்.
இங்கு ஏழு புனித நதிகள் உள்ளன. இவை புனிதத் தன்மையில் கங்கைக்கு இணையாகப் பேசப்பட்டாலும், வெவ்வேறு பெயர் கொண்டவையாகும். முதல் நதி சிவஜலா அல்லது அனுதப்தா என்றும், இரண்டாவது நதி குமாரி அல்லது வாசவி என்றும், மூன்றாவது நதி நந்தா அல்லது பார்வதி என்றும், நான்காவது நதி சிவேதிகா அல்லது பார்வதி என்றும், ஐந்தாவது நதி இக்ஷீ அல்லது கிரது என்றும்; ஆறாவது நதி தேனுகா அல்லது மிருதா என்றும் வழங்கப் படுகிறது. ஏழாவது நதியின் பெயர் கொடுக்கப்படவில்லை. இவை அனைத்தும் கடலில் சென்று கலக்கின்றன. புனிதத் தன்மை வாய்ந்த இந்த நீரே அனைவரின் தாகத்தையும் தணிக்கிறது.
சகதுவீபத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன. இங்கு வாழ்பவர்கள் தர்ம, ஞாயங்களுக்குக் கட்டுப்பட்டு நேர்மையாக வாழ்பவர்கள். பொறாமை, வெறுப்பு, துக்கம் எதுவுமின்றி வாழ்பவர்கள். முன்பே குறிப்பிட்டபடி, இங்குள்ள நான்கு பிரிவுகள் மகர்கள், மககர்கள், கனகர்கள், மந்தர்கள் எனப் படுவர். மகர்கள் பிராமணர்களாகவும், மககர்கள் கடித்திரியர்களாகவும், கனகர்கள் வைசியர்களாகவும், மந்தகர்கள் சூத்திரர்களாகவும் கருதப்படுவர்.
இத்துவீபத்தில் வழிவழியாக வந்தோர் சூரிய தேவனை வணங்குபவர்கள். பல விரதங்கள் அனுஷ்டிக்கும் இவர்களுக்குச் சூரியதேவன் ஆசி என்றும் உண்டு. சகதுவீபாவைச் சுற்றி சிரோதா எனப்படும் பாற்கடல் சூழப்பட்டு உள்ளது.
(இறுதியாக பவிஷ்ய புராணம் மண்வந்திரங்கள் பற்றிக் கூறுகிறது. இதனை முன்னரே சில புராணங்களில் கூறி இருப்பதால், இங்கு தவிர்த்துள்ளோம்.)
பொதுவாக எல்லாப் புராணங்களும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களைப் பற்றியே பேசுகிறது. ஆனால் பவிஷ்ய புராணம் அவற்றினின்று மாறுபட்டு சூரியதேவனைப் பற்றியே பேசுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பவிஷ்ய புராணம் - பகுதி 13 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, எனப்படும், என்றும், அல்லது, இம்மலை, இங்கு, பெயர், வாழ்பவர்கள், சகதுவீபம்