சேதுபதி மன்னர் வரலாறு - பாஸ்கர சேதுபதி
அந்த ஆலயத்திற்கு வருகை தந்த சிருங்கேரி சுவாமிகள் புதிய சக்கரம் ஒன்றை கருவறையில் ஸ்தாபித்து, ஏனைய திருக்கோயில்களில் நடைபெறுவது போன்ற வாம பூஜையை அங்கும் கைக் கொள்ளுமாறு அர்ச்சகர்களுக்கு அறிவுறுத்தினார். அன்றிலிருந்து அந்த ஆலயத்தில் உயிர்ப்பலி கொடுப்பது நிறுத்தப்பட்டது.
சிருங்கேரி மடாதிபதிகள் மன்னர் பாஸ்கர சேதுபதியின் ஒய்வு மாளிகையான சங்கர விலாசத்தில் தங்கியிருந்த பொழுது நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்ச்சி, ஒன்றினை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
வழக்கம் போல ஒரு நாள் முற்பகலில் மன்னர் பாஸ்கர சேதுபதி சுவாமிகளைச் சந்திப்பதற்காக அங்கு வந்தார். அப்பொழுது சுவாமிகள் தாம் இராமநாதபுரத்திற்கு வருகை தந்த பணி முடிவுற்றதால் ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதை தெரிவித்தார். அத்துடன் தமது பணிக்காக மன்னர் குரு தட்சணையாக எதனைக் கொடுக்க விரும்புகிறார் என வினவினார். உடனே மன்னர் நாம் அணிந்திருந்த அரச சின்னங்களை அழகிய தலைப்பாகையையும் உடை வாளையும் சுவாமிகளது திருவடிகளில் சமர்ப்பித்து, 'இந்த சேது சமஸ்தானத்தை எனது குரு தட்சணையாக அருள் கூர்ந்து சுவாமிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்." என பணிவுடன் கேட்டுக்கொண்டார். சற்றும் எதிர்பாராத மன்னரது அந்த பதிலைக் கேட்ட சுவாமிகள் மிகவும் வியப்புக்குள்ளானார். ஒருவாறு நிலைமையை சமாளித்துக்கொண்டு, 'இயல்பாகவும் வேடிக்கையாகவும் தான் குருதட்சணை கோரினேன் தங்களது அன்பும் ஆன்மீக உணர்வும் மிக்க இந்த தானத்தை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அதனை தங்களது குமாரருக்கு நான் தானம் வழங்கிவிட்டேன்." என்று சொல்லி மன்னரது அருகில் நின்று கொண்டிருந்த மன்னரது மகன் முத்து ராமலிங்கத்தின் தலையில் தலைப்பாகையை அணிவித்து இடையில் உடைவாளையும் அணிவித்தார். அப்பொழுது அங்கிருந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் ஒரு அதிசய சாதனையாகத் தோன்றியது. இது நடத்து கி.பி. 1894ல்.
ஏற்கனவே இந்த மன்னருக்கு தமிழ்ப்பணியில் மிகுந்த ஈடுபாடு இருந்ததால் தமது அவைப்புலவர் மகா வித்துவான் இரா. இராகவ ஐயங்கார் சுவாமிகளை ஒரு பல்லக்கில் அமர வைத்து ஏனைய பல்லக்கு போகிகளுடன் தாமும் நின்று அந்தப் பல்லக்கை சுமந்து தாம் தமிழுக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் கட்டுப்பட்டவர் என்பதை உலகறியச் செய்தார். மேலும் இந்த நிகழ்ச்சியினைக் குறிப்பிட்டு வரைந்து ஒரு பத்திரம் ஒன்றையும் மதுரை பதிவாளர் அலுவலத்தில் 4.11.1901ல் பதிவு செய்து கொடுத்தார். இந்தப் பத்திரத்தின்படி தமிழ் மொழியினை வளர்ப்பதற்கும் தமிழ்ப்புலவர்களைக் காப்பதற்கும் தாம் கடமைப்பட்டவர் என்பதை குறிப்பிட்டு இருப்பதுடன் அந்த அழகிய பல்லக்கை மகாவித்துவான் அவர்கள் இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து செல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான நிவந்தமாக ரூபாய் 360 இராம நாதபுரம் சமஸ்தான கருவூலத்திலிருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் அந்த ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.
சிறந்த சொற்பொழி வாளராகவும், தமிழ்ப்புலவராகவும் வரையாது வழங்கும் வள்ளலாகவும் வாழ்ந்த இந்த மன்னர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள திருவாவடுதுறை மடத்திற்குச் சென்றிருந்தபோது 27.12.1903-இல் காலமானார். ஜமீன்தாரி ஆட்சி காலத்தில் இவருடைய ஆட்சிகாலமே பொற்காலமாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாஸ்கர சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - அந்த, மன்னர், சுவாமிகள், மன்னரது, தாம்