சேதுபதி மன்னர் வரலாறு - சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை
இந்த விளம்பரத்துடன் அமைந்துவிடாமல் தளபதி அக்னியூ புதுக்கோட்டை தொண்டைமானது உதவியுடன் அறந்தாங்கிக் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த சிவகங்கை மன்னரது வழியினரான படைமாத்துர் கெளரி வல்லப பெரிய உடையாத் தேவர் என்பவரைத் தேடிப்பிடித்து வந்து, சிவகங்கையை அடுத்த சோழபுரம் கிராமத்தில் 12.09.1801-ல் அவருக்குச் சிவகங்கை ஜமீன்தார் என்ற பட்டத்தினையும், கிழக்கிந்தியக் கம்பெனியார் வழங்கினர். தமிழகத்தில் முதன்முறையாக ஜமீன்தாரி முறையினை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட முதல் ஜமீன்தார் சிவகங்கை கெளரி வல்லப உடையாத் தேவர் ஆவார்.
இராமநாதபுரம் ஜமீந்தாரி:
இராமநாதபுரம் சீமையைப் பொறுத்தவரை மன்னர் முத்து ராமலிங்க சேதுபதி 08.02.1795-இல் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். கும்பெனியார் அவரது தமக்கையார் ராணி மங்களேஸ்வரி நாச்சியாரது உரிமையினை ஏற்றுக்கொண்டனரேயொழிய அவருக்கு இராமநாதபுரம் சீமையை ஆளும் உரிமையை வழங்கவில்லை. மாறாகக் கும்பெனியார் இராமநாத புரம் சீமை நிர்வாகத்தைத் தமது கலெக்டர்கள் லாண்டன், பவுனி, ஜாக்சன், லூசிங்டன் ஆகியோர் மூலமாக கி.பி. 1803 வரை நடத்தி வந்தனர்.
ஆனால் மன்னரது இராஜ விசுவாசியான சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரரது கிளர்ச்சிகளின் காரணமாக கும்பெனியாருக்கு மிகுந்த இடையூறுகளும், இழப்புகளும் கி.பி. 1802 வரை ஏற்பட்டு வந்தது. மேலும் மேலும் அத்தகைய இழப்புகள் தொடர்வதைத் தவிர்க்க இராமநாதபுரம் சீமையில் ஒரு பாரம்பரிய ஆட்சிமுறையை அமுல் நடத்த வேண்டுமென அப்பொழுதைய கலெக்டர் லூசிங்டன் கும்பெனித் தலைமையை வற்புறுத்தி வந்தார்[1].
கும்பெனித் தலைமையும் கலெக்டர் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு அன்றைய கும்பெனியாரது நடைமுறைகளின்படி இராமநாதபுரம் சீமையை ஜமீன்தாரியாக மாற்றி உத்திரவிட்டதுடன் முதல் ஜமீன்தாரினி யாக மங்களேஸ்வரி நாச்சியாரை நியமனம் செய்தது.
- ↑ 1 Raja Ram Rao. T-Manual of Ramnad Samasthanam. 1891. Page-269
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - இராமநாதபுரம், சிவகங்கை