சேதுபதி மன்னர் வரலாறு - உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன்
I. உடையான் ரெகுநாத சேதுபதி (எ) சடைக்கன் - I (1601 – 1622)
தமிழக வரலாற்றில் குறிப்பாகச் சேதுபதி மன்னர்களது வரலாறு பதினேழாவது நூற்றாண்டிலிருந்து முரண்பாடுகள் இல்லாத வகையில் தொடக்கம் பெறுவதுடன் இந்த மன்னர்களது தெய்வீகத் திருப்பணிகள் தொடர்வதனால் அவரது ஆட்சிக்காலம் சிறப்புப் பெறுகிறது.
இதற்கு முன்னிருந்த சேது மன்னர்களைப் பற்றிய சரியான தொடர்பான ஆவணங்கள் கிடைக்கவில்லை. போகலூரில் வாழ்ந்த சேதுபதி மன்னர்களின் வரிசையில் முதல் மன்னராக அறிமுகமாகும் சடைக்கன் சேதுபதிக்கும், மதுரை நாயக்கப் பேரரசிற்கும் நெருங்கிய தொடர்பு நிலவிவந்ததால் இந்த மன்னரைப் பற்றிய செய்திகள் வரலாற்றில் தெளிவாகப் பதிவு பெற்றுள்ளன.
இந்த மன்னர் கி.பி. 1601 முதல் கி.பி. 1622 வரை ஆட்சி புரிந்திருக்க வேண்டும். ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்த மன்னரது ஆட்சித் தொடக்கம் கி.பி. 1603 என வரைந்துள்ளனர். இந்த மன்னரது தந்தையார் பெயர் என்ன என்பதும் அவர் சேதுபதிப் பட்டத்திற்கு எந்த முறையில் தகுதி பெற்றவர் என்பதும் அறியத்தக்கதாக இல்லை. இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வழங்கிய அறக்கொடைகள் பற்றிய கி.பி. 1607ஆம் ஆண்டு செப்பேட்டின்படி இவரது இயற்பெயர் திருமலை சடைக்கன் என்றும், உடையான் ரகுநாத சேதுபதி காத்தத்தேவர் என்றும் தெரியவருகிறது. சூரியகுலத்தவரான ரெகுநாத சேதுபதி என்பது இராமபிரானைப் பின் பற்றுபவர்கள் என்றும், காத்தத்தேவர் என்பது சேது அணைக்குக் காவலர் என்ற பொருளில் அனைத்து சேதுபதி மன்னர்களுக்கும் ஆட்சிப்பெயராக அமைத்து வழங்கப்பட்டுள்ளது உடையான் என்பது சிவபெருமானது அடியாரைக் குறிக்கும் சொல் இராமனுக்கு ஈஸ்வரனாகிய சிவனை, இராமநாதசாமியை வழிபடும் பக்தன் என்ற முறையில் இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனைப் போன்றே இந்த மன்னர் இராமனது அடியார் (அ) இராமபிரானால் நியமனம் பெற்றவர் என்ற வகையில் இராமபிரானது சூரிய வம்சத்தினர் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரகுநாத என்ற சிறப்புப்பெயர் இவரின் இயற்பெயருடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் இன்றைய இராமநாதபுரம் நகருக்கு மேற்கே எட்டுக்கல் தொலைவில் உள்ள போகலூர் தலைமையிடமாக இருந்தது. ஆனால் இந்த ஆட்சியின் பரப்பைக் குறிப்பிடும் ஆவணங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. பொதுவாக கோடிநாடு என்று வழங்கப்பெற்ற இராமேஸ்வரம் தீவுப்பகுதியும் அதனையடுத்து மேற்கே உள்ள கீழ்ச்செம்பிநாடு என்ற பகுதியும் இதற்கும் மேற்கேயுள்ள செவ்விருக்கைநாடு, தாழையூர் நாடு, முத்துர் நாடு, கைக்கிநாடு ஆகிய பகுதிகளைக் கொண்ட அரசின் தலைவராக இந்த மன்னர் இருந்திருக்க வேண்டும்.
இதுபோலவே இந்த மன்னனது தலைநகரான போகலூர் எப்பொழுது கோநகராக மாற்றப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால் இந்த மன்னரது சமகாலத்தவரான மதுரைப் பேரரசர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரது இராஜகுரு இராமேஸ்வரம் யாத்திரை சென்றபோது "புகழுரிலிருந்த சடைக்கத் தேவர் இராஜகுருவைப் பின்தொடர்ந்து இராமேஸ்வரம் யாத்திரைக்கு உதவி செய்தார்' என்று ஒரு ஆவணத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதால் போகலூர் தலைநகர் என்பது உறுதியாகின்றது[1].
ஆனால் இந்த மன்னர் கி.பி. 1607 முதல் வழங்கியுள்ள செப்பேடுகளில் 'துகலுர் கூற்றத்து குலோத்துங்க சோழன் நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும்' என்ற தொடர் காணப்படுவதால் இவரது (அ) இவரது மூதாதையரது பூர்வீக இடம் விரையாத கண்டன் என்பது உறுதிப்படுகிறது.
மதுரை மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரோடு ஏற்பட்ட தொடர்பு காரணமாக இந்த மன்னரை மதுரை நாயக்க மன்னர்களது தளவாய்களில் ஒருவராக நியமனம் பெற்றதுடன் அதற்கான சிறப்புப் பரிசில்களையும் சேதுபதி மன்னருக்குப் பெற்றுத் தந்தது. இத்தகைய சிறப்பினைச் சேது மன்னருக்கு மதுரை மன்னர் வழங்கியதற்கு ஒரு பின்னணியும் இருந்தது. தென்பாண்டிநாடு முழுவதும் மதுரை நாயக்க மன்னருக்குக் கட்டுப்பட்ட பகுதியாக இருந்தாலும் தூத்துக்குடி கடற்கரையிலுள்ள பரவர்களும், போர்த்துக்கீசியர்களும் நாயக்கமன்னருக்குக் கட்டுப்பட்ட குடிகளாக இருக்கவில்லை. ஏறத்தாழ 100 ஆண்டுகாலமாக மன்னார் வளைகுடாப் பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கீசியர் கி.பி. 1658இல் தங்களது ஆதிக்கத்தை டச்சுக்காரர்களிடம் இழந்து விட்டனர் என்றாலும் அவர்களது அதிகாரம் பாண்டியநாட்டின் கீழ்க்கடற்கரையில் தொடர்ந்து வந்தது. அதனையடுத்து நிறுத்தவோ எதிர்த்து அழிப்பதற்கோ மதுரை மன்னரிடம் போதுமான படைபலம் இல்லாத பரிதாபநிலை போர்த்துக்கீசிய பாதிரியார்களிடம் ஞானஸ்நானம் பெற்ற பரவர்கள் போர்ச்சுகல் நாட்டு மன்னர்களது குடிமக்களாக மாறினர். அந்த நாட்டுச் சட்ட திட்டங்களையும் பரவர்களது குடியிருப்புகளான மணப்பாடு, பெரியதாழை, வீரபாண்டியன் பட்டினம், வேம்பார் குடியிருப்புகளும் போர்ச்சுகல் நாட்டு வீரர்களது பாதுகாப்பிலும் இருந்து வநதன.
- ↑ 1. J. W. Taylor- Old historical manuscripts- Vol- II (1881)
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி, மன்னர், மதுரை, என்பது, மன்னரது, இராமேஸ்வரம், வேண்டும், மன்னர்களது, என்றும், போகலூர், இவரது, சேது, சடைக்கன், பற்றிய, என்பதும், உடையான்