சேதுபதி மன்னர் வரலாறு - திருமலை ரெகுநாத சேதுபதி
திருமலை ரெகுநாத சேதுபதி
தளவாய் இரண்டாவது சடைக்கன் சேதுபதி ஆண்வாரிசு இல்லாமல் இறந்து போனதால் சேதுநாட்டின் அரசுரிமை யாருக்கு என்ற பிரச்சனை எழுந்தது. சேதுபதிப் பட்டத்திற்கு மறைந்த மன்னரான தளவாய் சேதுபதியின் தங்கை மக்களான தனுக்காத்த தேவர், நாராயணத் தேவர், திருமலைத் தேவர் ஆகிய மூவர்களில் ஒருவரை சேது மன்னர் ஆக்குவதற்கு அரண்மனை முதியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த கூத்தன் சேதுபதியின் மகனான தம்பித்தேவர் மதுரை மன்னர் திருமலை நாயக்க மன்னரை மீண்டும் அணுகி சேதுநாட்டிற்குத் தம்மை மன்னராக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஏற்கனவே மறவர் சீமையைத் தமதாக்கிக் கொள்ள முயன்ற திருமலை நாயக்க மன்னர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள சேதுநாட்டு அரசியலில் தலையிட்டார். தம்பித் தேவரையும் அவரது எதிர்த் தரப்பினரான தனுக்காத்த தேவர் முதலியோரையும் கலந்து ஆலோசித்து அவரது முடிவினை அவர்களிடம் தெரிவித்தார். இதன்படி ஏற்கனவே காளையார் கோவில் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த தம்பித் தேவருக்கு அந்தப் பகுதியினை ஆளும் உரிமையினையும், தனுக்காத்த தேவருக்கு சேதுநாட்டின் வடகிழக்குப் பகுதியான அஞ்சுகோட்டை பகுதியையும், திருமலை ரெகுநாதத் தேவர் இராமநாதபுரம் கோட்டை உள்ளிட்ட தென் பகுதியையும் ஆள வேண்டும் என்பதுதான் திருமலை நாயக்கரது தீர்ப்பு ஆணைத் திட்டம். வலிமையுடனும், ஐக்கியத்துடனும் ஒன்றுபட்ட சேதுநாட்டை இந்த மூன்று பகுதிகளாகப் பிரிவினை செய்வதன் மூலம் திருமலை நாயக்க மன்னரது இரகசிய திட்டத்திற்கு ஏற்ப இந்தப் பிரிவினை அமைந்தது.
இராமேஸ்வரம் போரினால் பலத்த பொருளாதாரச் சிதைவும் பொதுமக்களுக்குப் பலவிதமான சிரமங்களும் ஏற்பட்டிருந்த நிலையில் மேலும் இரத்தக்களரியையும், குழப்பத்தையும் தவிர்க்கும் வகையில் திருமலை நாயக்க மன்னரது தீர்ப்பினை மூவரும் ஏற்றுக்கொண்டு முறையே காளையார் கோவிலிலும், அஞ்சுக்கோட்டையிலும். போகலூரிலும் தங்களது ஆட்சியினை அந்த மூவரும் தொடங்கினார்கள். ஆனால் திருமலை நாயக்க மன்னருக்கு ஏமாற்றம் தரும் வகையில் சேதுநாட்டில் அரசியல் நிகழ்ச்சிகள் அமைந்தன. காளையார் கோவிலில் தம்பித்தேவரும், அஞ்சுக்கோட்டையில் தனுக்காத்தத் தேவரும் அடுத்தடுத்து, காலமானார்கள். அவர்களுக்கு உரிய வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அந்த இரு பகுதிகளும் திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிப்பகுதியாக அமைந்து சேது நாட்டின் புகழினைப் பரப்பும் வாய்ப்பாக அமைந்தது.
இப்பொழுது மதுரை மன்னர் திருமலை நாயக்கருக்கு அடுத்தடுத்து பல சோதனைகள எழுந்தன. முதலாவதாக அந்த மன்னரது எழுபத்து இரண்டு பாளையக்காரர்களில் ஒருவரான எட்டையபுரத்துப் பாளையக் காரர் மதுரை மன்னருக்கு எதிராக திருநெல்வேலிச் சீமையில் சில பாளையக்காரர்களைத் திரட்டி திருமலை நாயக்கருக்கு எதிராகக் கலகக்கொடி உயர்த்தினார். மதுரை நாயக்க அரசினால் பாளையக்காரர் பதவியைப் பெற்ற எட்டயபுரம் பாளையக்காரர் உள்ளிட்ட தெற்கத்திய பாளையக்காரர்கள் இத்தகைய இக்கட்டான நிலையை உருவாக்கக் கூடும் என்பதைச் சிறிதும் எதிர்பாராத திருமலை நாயக்க மன்னர் செய்வது அறியாது திகைத்தார். முடிவில் ஒருவாறாகத் தேறுதல் பெற்றுச் சேதுபதி மன்னரை அணுகினார்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்'
என்ற பொதுமறைக்கு ஏற்ப மதுரை மன்னர் சேதுநாட்டிற்கு இழைத்த தீங்குகளை மறந்து சேதுபதி மன்னர் மதுரை மன்னருக்கு உதவச் சென்றார்.
மதுரை மீது கன்னடியர் படையெடுப்பு
எட்டயபுரம் பாளையக்காரரையும் அவரது கூட்டணியையும் முறியடித்து எட்டையபுரம் பாளையக்காரரைக் கைது செய்து மதுரையில் திருமலை நாயக்கர் அரசவையில் நிறுத்தினார்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமலை ரெகுநாத சேதுபதி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - திருமலை, நாயக்க, மன்னர், மதுரை, தேவர், சேதுபதி, அந்த, மன்னருக்கு, மன்னரது, அவரது, தனுக்காத்த, சேதுபதியின், காளையார்