சேதுபதி மன்னர் வரலாறு - நூலினைப் பற்றி
தமிழக முடியுடை மன்னர்கள் பற்றிய பல நூல்கள் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், ஆற்காட்டு நவாப் என்ற ஆட்சியாளர்களைப் பற்றி அந்த நூல்களில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர் வரிசையில் இறுதியாகப் பிரதான இடம் வகித்து வந்த இந்திய நாடு விடுதலை பெறும் வரை ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர்களைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரவில்லை.
இதனைப் போன்றே கொங்குச் சோழர்கள், மதுரை சுல்த்தான்கள், வானாதிராயர்கள், சேது நாட்டு மன்னர்கள் ஆகியோர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் வரையப்படவில்லை. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இவர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் இன்றியமையாதவை.
இந்தக் குறைபாட்டினை நீக்கும் வகையில் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வரலாற்றில் இடத்தைப் பெற்று பின்னர் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் சீரழிவு எய்தி மீண்டும் கி.பி.17 ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்ற சேதுநாட்டு மன்னர்களைப் பற்றிய முழுமையான நூலாக இது வெளியிடப்படுகிறது.
பாண்டிய நாட்டில் கிழக்குக் கடற்கரையினை ஆட்சிக்களமாகக் கொண்ட இந்த மன்னர்கள் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழர்களது ஆன்மீக வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் செழுமைக்கும் தளராது பணியாற்றிய வர்கள் ஆவர். ஆதலால் இவர்களது வரலாற்றைத் தமிழக வரலாற்றின் ஒரு சிறப்புப் பகுதியாகக் கொள்ளலாம்.
இதுவரை இந்த மன்னர்களைப் பற்றி வெளிவந்த ஆங்கில, தமிழ் நூல்களில் இடம் பெறாத பல செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த வரலாற்றுத் தொகுப்பினை வரைவதற்கு சேதுபதி மன்னர்களது கல்வெட்டுக்கள், செப்பேடுகள். ஒலை முறிகள், ஆவணங்கள் ஆகியவற்றைத் தந்து உதவிய அன்பர்கள் பலருக்கும் எனது இதயங்கனிந்த நன்றியினைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.
மற்றும் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தளராத தொண்டுசெய்து இறவாப் புகழ் கொண்ட சேது மன்னர்களின் வரலாற்றினை வெளியிட வேண்டும் என்ற பெரு விருப்புடன் என்னைப் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வந்ததுடன் இந்த வெளியீட்டிற்கு பல்லாற்றானும் உதவியும் ஒத்தாசையும் நல்கிய தஞ்சாவூர்த் தமிழ்ப் பேராசிரியர் திரு மது.ச. விமலானந்தம் அவர்களுக்கு எனது ஆழிய நன்றி.
இந்த நூலின் மெய்ப்புக்களைப் பொறுமையுடன் இரவு பகலாக மூலப் பிரதியுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துச் செம்மை செய்துதவிய இராமநாதபுரம் அரசினர் சேதுபதி கலைக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு. மை. அப்துல்சலாம் அவர்களுக்கும் எனது ஆழிய நன்றி.
எஸ்.எம். கமால்
நூலாசிரியர்
நூலாசிரியர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நூலினைப் பற்றி - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - பற்றிய, நூல்கள், மன்னர்கள், எனது, தமிழ், இடம், தமிழக, வரலாற்று