சோழர் வரலாறு - இராசாதிராசன்
இங்ஙனம் இராசாதிராசன் ஆட்சியில் சோழர்க்கும் ஈழ அரசர்க்கும் இரண்டு முறை போர் நடத்தது. இருமுறையும் பாண்டிநாடு சம்பந்தமாகவே நடந்தது. முதற்போரில் வெற்றி பெற்ற சோழர் படைத்தலைவன் பல்லவராயன், இரண்டாம் போரில் வெற்றிபெற்ற பெருவீரன் அண்ணன் பல்லவராயன், இந்த இருபோர்களிலும் ஈழத்தரசன் காலாட்படையையும் கப்பற்படையையும் இழந்தான். இரு போர்கட்கும் பிறகு இராசாதிராசன், மதுரையும் ஈழமும் கொண்டருளிய தேவர்[8], ‘என்னும் விருதுப் பெயர் பூண்டான். இங்கு ‘ஈழம் கொண்டது’ என்பது, சீவல்லபனை ஏவி ஈழத்தரசன் வலிதொலைத்தது’ என்னும் பொருள் கொண்டதே ஆகும். இந்த இரண்டு போர்களும் நடைபெற்ற காலம் கி.பி.1169 முதல் 1177 வரை என்னலாம்.
அரசு நெல்லூர், காளத்தி, நந்தலூர்[9], கங்கபாடி[10] முதலிய இடங்களிற் கிடைத்த சிற்றரசர் கல்வெட்டுகளில் இராசாதிராசன் பேரரசனாகக் குறிக்கப்படலாம், இராசாதிராசன் காலத்திற் சோழப்பெரு நாடு இராசராசன் காலத்தில் இருந்த நிலையிலே இருந்ததென்று கூறலாம்.
சிற்றரசர் : 1. சிற்றரசர் பலருள் முதலிற் குறிப்பிடத் தக்கவன் ‘காரிகைக் குளத்துர் திருச்சிற்றம்பலம் உடையான் பெருமான் நம்பிபல்லவராயன் ஆவன்.இவன் இராசராசன் உள்ளங் கவர்ந்தவன்; அவனது பேரன்பிற்குப் பாத்திரன் ஆனவன்; அங்ஙனமே இராசாதிராசன் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவனாக இருந்தான். (2) இவனுக்கு அடுத்து அப்பதவியில் இருந்து அருந்தொண்டாற்றிய சிற்றரசன் ‘வேதவனம் உடையான் அம்மையப்பன் என்ற அண்ணன் பல்லவராயன்’ என்பவன். ஈழ வெற்றிகட்கு இவ்விருவரே பொறுப்பாளிகள்.இவர்கள் இன்றேல் சோழப் பேரரசு பல துண்டுகளாகப் பிரிந்து ஒழிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அண்ணன் பல்லவராயன் திருவாரூர், திருவாலங்காடு முதலிய இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் நிபந்தங்கள் விடுத்துள்ளான்.இவனது சொந்த ஊர் பழையனூர் (3) தென் ஆர்க்காடு கோட்டத்திலும் வட ஆர்க்காடு கோட்டத்திலும் சாம்புவராயரும் காடவராயரும் வன்மையுற்று இருந்தனர். செங்கேணி அம்மையப்பன் சாம்புவராயன் என்பவன் சில இடங்களில் வந்த வருவாயைத் திருப்புலிவனம் சிவன் கோவில் திருப்பனிகட்குச் செலவிட்டதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. (4) கண்டர் சூரியன் என்பவன் ஒருவன். இவன் ‘பாண்டி நாடு கொண்டான்’ எனப்பட்டான். இவன் திருவக் கரையில் கோவில் கோபுரம் ஒன்றைக் கட்டித் தன் பெயரிட்டான்; சிற்றாமூரில் நிலங்களைப் பள்ளிச்சந்தமாக விட்டான்[11]. (5) ‘செங்கேணி அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான்’ என்பவன் ஒருவன். இவன்திலவரியும் பிறவரியும் முன்னூரில் உள்ள கோவிலைப் புதுப்பிக்கவோ அல்லது கட்டவோ செலவழித்தவன்[12]. (6) சாம்புவராயர் பலராதல் போலவே மலையமான் சிற்றரசரும் பலராவர்; இவருள் அருளாளப் பெருமாள் என்ற இராசராச மலையமான் ஒருவன். இவன் ‘கண்ணப்பன் மலையமான்’ என்பவன் புதல்வன். இவன் திரிசூலம் கோவிலில் விளக்கிட்டான்[13]. (7) சேதிராயர் என்பவர் சிலர், கோவல ராயர் சிலராவர். இவர்கள் கீழுர், அத்தி (கேரளாந்தக நல்லூர்) முதலிய இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் விடுத்தனர். (8) திருவரங்கம் உடையான் என்ற இராசாதிராசமலையராயன் திருப்பாசூர்க் கோவிலுக்குப் பல தானங்கள் செய்துள்ளான்[14], (9) கோலன் திருக்கொடுங்குன்றம் உடையான் ஆன பொன்னமராவதி நிஷதராசன் என்பவன் ஒருவன். (10) குணமாலைப் பாடி உடையான் ஆட்கொண்டான் கங்கை கொண்டான் என்ற பொத்தப்பிச் சோழன் ஒருவன். (1) நெல்லூரை ஆண்ட சிற்றரசன் ஒருவன், (12) திட்ட குடியில் உள்ள கோவிலுக்கு ஐந்து வேலி நிலதானம் செய்த இராசராச வங்கார முத்தரையன் ஒருவன். இவருள் பலர் இராசராசன் ஆட்சிக்காலத்திலும் இருந்தவராவர்.
இச்சிற்றரசருள் அண்மையில் இருப்பவர் இருவரோ பலரோ தமக்குள் உடன்படிக்கை செய்து கொண்டு உறவாடல் மரபு. இருவர் ஒருவர்க்கொருவர் உற்றுழி உதவி புரிவதென்று வாக்களித்துக் கொண்டனர். பலர் ஒன்று கூடி உறவாடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். இவ்வொப்பந்தங்கள் பேரரசின் சம்மதம் பெறாமலே செய்து கொள்ளப் பட்டவை. அதனால், தேவை உண்டாயின், இச் சிற்றரசர் பேரரசரையே ஆட்டிப் படைக்கலாம் அன்றோ?
இளவரசன் : இராசாதிராசன், விக்கிரம சோழ தேவன் பெயரனான ‘நெறியுடைப்பெருமாள்’ மகன். சங்கர சோழன் உலாவிற் குறிக்கப்பட்ட ‘சங்கமராசன்’ என்பவனே நெறியுடைப்பெருமாள்; உலாவிற் குறிக்கப் பெற்ற ‘நல்லமன் என்பவனே எதிரிலிப் பெருமாள் என்ற இராசாதிராசன், இரண்டாம் மகனான குமாரமகிதரன் என்பவனே குமார குலோத்துங்கன் என்ற மூன்றாம் குலோத்துங்கன்; மூன்றாம் மகன் சங்கர ராசன். இவனே சங்கர சோழன் என்பவன். இம்மூவரும் ஒரே தந்தையின் மக்களாவர்.[15] ஆதலின், மூன்றாம் குலோத்துங்கனே இளவரசனாக இருந்தான்.
- ↑ 8. 36 of 1906, 731 of 1909, 474 of 1995, etc.
- ↑ 9. Nellore Ins. edited by Butterworth and Venugopala Chetty, Nos. 105, 108 of 1922; 571 of 1907
- ↑ 10. 48 of 1893
- ↑ 11. 195 of 1904, 202 of 1902
- ↑ 12. 71 of 1919
- ↑ 13. 321 of 1901
- ↑ 14. 150 of 1930
- ↑ 15. Vide V.R. Dikshitar's ‘Kulothunka III. pp. 160-163. லால்குடிக்கு நேர்கிழக்கே 5 கல் தொலைவில் ‘சங்கரராசபுரம்’ என்னும் பெயர்கொண்ட சிற்றூர் இருக்கிறது. இவ்வூரில் உள்ள கோவில் கல்வெட்டுகள் சோதித்தற்குரியவை. V.R. Dikshitar's K-III.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசாதிராசன் - History of Chola - சோழர் வரலாறு - ஒருவன், இராசாதிராசன், என்பவன், இவன், உடையான், உள்ள, சிற்றரசர், சோழன், செய்து, மூன்றாம், என்பவனே, சங்கர, அம்மையப்பன், பல்லவராயன், அண்ணன், முதலிய, இராசராசன், இடங்களில்