சோழர் வரலாறு - இராசாதிராசன்
குலசேகரன் மீட்டும் இலங்காபுரியைச் சீவில்லிபுத் துரில் தாக்கினான். போர் கடுமையாகவே நடந்தது.ஆயினும், குலசேகரனே தோல்வியுற்றான்; ‘சாத்தனேரி’ என்னும் இடத்திற்கு ஓடிவிட்டான். இலங்காபுரி அதனை அறிந்து அங்குச் சென்றான். அவன் வருவதை அறிந்த குலசேகரன் ஏரிக்கரையை உடைத்து அவன் வரவைத் தடுக்க முயன்றான்; பயனில்லை. உடனே அவன் பாளையங்கோட்டைக்குப் போய்த் தங்கினான்; சோழ அரசனுக்கு ‘உதவி வேண்டும்’ என்னும் வேண்டுகோளை விடுத்தான்.
ஈழத்துடன் செய்த முதற்போர் : சோழநாட்டை ஆண்டு வந்தவன் இராசாதிராசன் ஆவன். அவனுக்குப் பேருதவியாக இருந்தவன் திருச்சிற்றம்பலம் உடையானான பெருமான் நம்பிப் பல்லவராயன் என்பவன். அப் பெருந்தகை திரண்ட படைகளுடன் பாண்டியன் நாட்டை அடைந்தான். அவனுக்கு உதவியாகச் சென்ற மற்றொரு தலைவன் நரசிங்க வர்ம ராயன் என்பவன். பாண்டியன் படை, கொங்குப் படை, சோழர் படை யாவும் ஒன்று கூடின, அதுகாறும் பாண்டிய நாட்டுக் கோவில்களை இடித்துக் கொள்ளை-கொலைகளால் குடிகளைத் துன்புறுத்திவந்த ஈழப்படைகளைத் தாக்கின. அதனால் திருக்கானப்பேர், தொண்டி, பாசிபொன் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி, என்னும் இடங்களில் போர் நடந்தது, இறுதியில் ஈழப்படை தோற்று ஒழிந்தது. குலசேகரன் அரியணை ஏறி அரசாளத் தொடங்கினான்.[4]
இலங்காபுரி செய்த கொடுமைகளை அறிந்த எதிரிலி சோழச் சாம்புவராயன் என்னும் சிற்றரசன் ஒருவன் உமாபதி தேவர் என்ற ஞானசிவ தேவர் என்னும் பெரியார் ஒருவரிடம் முறையிட்டான். அவர் ‘ஈழப்படை விரைவில் அழிந்து ஒழியும் கவலற்க’ என்று அருளி 28 நாள் அகோர பூசை செய்தனர். முடிவில் ஈழப்படை தோற்ற செய்தி எட்டியது. உடனே அத்தலைவன் அச்சுவாமி தேவர்க்குக் காஞ்சியை அடுத்த ஆர்ப்பாக்கம் என்னும் சிற்றுரைத் திருப்பாத பூசையாக அளித்தான். இச்செய்தி இராசராசனது 5-ஆம் ஆட்சி ஆண்டில் நடைபெற்றதாகும்.[5] எனவே, இலங்காபுரியின் தோல்வி கி.பி.167 அல்லது 1168-இல் நிகழ்ந்ததாதல் வேண்டும்.
ஈழத்துடன் செய்த இரண்டாம்போர் : இராசராசன் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பனும் முதல் அமைச்சனும் சிறந்த வீரனும் ஆகிய பல்லவராயன் மேற்சொன்ன போருக்குப் பின் நோய்வாய்ப்பட்டுக் காலமானான். உடனே அந்தப் பதவிக்கு வேதவனம் உடையான் அம்மையப்பன் ஆன அண்ணன் பல்லவராயன் என்பவன் வந்தான். இவன் ஆற்றலும் போர்ப் பயிற்சியும் மிக்கவன். இவன் அரசனது நன்மதிப்புப் பெற்றவன். இவன், முதலில் பல்லவராயனிடம் தோற்றதற்கு வருந்திய ஈழத்தரசன் சோணாட்டைத் தாக்கப் படைகளைப் பலப்படுத்துவதையும், ஊரத்துறை, புலைச்சேரி,மாதோட்டம்,வல்லிகாமம்,மட்டிவால் என்னும் இடங்களிற் கப்பல்களைக் கட்டுவதையும் கேள்வியுற்றான்; உடனே பராக்கிரம பாகுவுடன் பூசலிட்டுத் திரிந்து கொண்டிருந்த அவன்மருமகனான சீவல்லபன் என்பவனைப் படையுடன் அனுப்பி ஈழத்தைத் தாக்கத் துண்டினான். சீவல்லபன் சோழர் படையுடன் சென்று மேற்சொன்ன இடங்களிற் பலவற்றை அழித்தான் போரில் யானைகளைக் கைப்பற்றினான்; கிழக்கு மேற்கில் இருபது காதவழியும் தெற்கு வடக்கில் எழுபது காதவழியும் தீ மூட்டி ஊர்களை அழித்தான்; பல தலைவரைக் கொன்றான்; பலரைச் சிறைப்பிடித்தான்.
இந்நிலையில், பராக்கிரமபாகு ஒரு சூழ்ச்சி செய்தான். அவன் உடனே குலசேகரனுக்குத் துது விடுத்தான்; நீண்ட காலமாகப் பாண்டியர்க்கும் ஈழ அரசர்க்கும் சோழர்க்கு எதிராக இருந்து வந்த ஒற்றுமையை உணர்த்தித் தன்பால் நட்புக் கொள்ளுமாறும் சோழர்பால் பகைமை கொள்ளுமாறும் செய்தான். சோழர் தயவால் பட்டம் பெற்ற குலசேகரன் நன்றி கெட்டவனாய்ச் சோழர் மீது பகைமை கொண்டான், ஈழத்தரசன் பேச்சைக் கேட்டுச் சோணாட்டின்மீது படையெடுத்தான்; சோழர்பால் என்றும் அன்பு கொண்டிருந்த ஏழகத்தார்[6] (ஏடகத்தார். மதுரை தாலுக்காவில் உள்ள ஊர்) என்பவரையும் சோழருடைய மறவ சாமந்தரும் குலசேகரன் ஆட்சியில் இருந்தவருமான ‘இராசராச கற்குடி மாராயன்’ இராச கம்பீர ஐந்து கோட்டை நாடாள்வான்’ என்பாரையும் நாட்டைவிட்டு விலக்கினான்; சோழ அரசன் ஆணைப்படி மதுரைவாயிலில் அறையப்பட்டிருந்த ஈழத்துத் தானைத் தலைவர் தலைகளை அப்புறப்படுத்தினான். பராக்கிரம பாகு குலசேகரன் தானைத் தலைவர்கட்கு அனுப்பிய கடிதங்களும் பரிசுகளும் சோழ சேனைத் தலைவர்களிடம் அகப்பட்டன. இவை அனைத்தையும் கேள்வியுற்ற இராசாதிராசன் அண்ணன் பல்லவராயனுக்கு ஆணை விடுத்தான்.அஃதாவது, குலசேகரனை விரட்டிப்பராக்கிரம பாண்டியன் மகனான வீரபாண்டியனை அரசனாக்க வேண்டும் என்பது. உடனே அண்ணன் பல்லவராயன் பெரும் படை அனுப்பிக் குலசேகரனை ஒழித்து, வீரபாண்டியனை அரியணை ஏற்றினான். இச்செயற்காக இப் பெரு வீரன் பழையனூரில் பத்து வேலி நிலம் இறையிலியாகப் பெற்றான்.[7]
- ↑ 4. இவ்வரலாறு மகாவம்சம், சோழர் கல்வெட்டுகள், பல்லவராயன் பேட்டைச் சாசனம் இவற்றைக் கொண்டு வரையப்பட்டது.20 of1899,433 of1924,465 of 1905.
- ↑ 5. S.I.I. Vol 6. No. 456.
- ↑ 6. S.I.I.I. Vol. 3, p.212.
- ↑ 7. 465 of 1905
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இராசாதிராசன் - History of Chola - சோழர் வரலாறு - என்னும், குலசேகரன், உடனே, பல்லவராயன், சோழர், அவன், அண்ணன், இவன், செய்த, விடுத்தான், என்பவன், பாண்டியன்