சோழர் வரலாறு - சோழரது இருண்ட காலம்
(5) மஹேந்திரன் மகனான முதலாம் நரசிம்மவர்மன் சோழர் உள்ளிட்ட பல தென்னாட்டு அரசரை வென்றதாகப் பட்டயம் பகர்கின்றது.
(6) முதலாம் பரமேசுவரவர்மன் சோழநாட்டை வென்றதாகக் கூரம் பட்டயம் கூறுகின்றது[25].
(7) பரமேசுவரவர்மனை முதலில் தோற்கடித்த முதலாம் விக்கிரமாதித்தன் சோணாட்டு உறையூரில் தங்கியிருந்தான். அப்பொழுது 'கத்வல்' பட்டயம் விடுத்தான். அதன் காலம் கி.பி. 674. அவன் அதனில், தான் சோழ நாட்டை வென்றதாகக் குறித்துள்ளான்[26]. பல்லவரும் தமிழ் அரசரும் அவனைத் தாக்கி வென்றனர் என்று அவன் மகன் கூறியுள்ளான்.
(8) இரண்டாம் நந்திவர்மனை நந்திபுரத்தில் முற்றுகையிட்டவர் தமிழ் அரசர் என்று உதயேந்திரப் பட்டயம் உரைக்கின்றது[27].
(9) இவன் பெயரனான மூன்றாம் நந்திவர்மன் சோழ, பாண்டியரைத் தெள்ளாற்றுப் போரில் முறியடித்தான்[28].
(10) பாண்டியன் கோச்சடையன் தணதீரன் சோழன் செம்பியன் என்று கூறிக்கொள்கிறான் என்று வேள்விக்குடிப் பட்டயம் விளம்புகிறது[29].
(11) முதலாம் வரகுண பாண்டியன் (மாறன் சடையன் - கி.பி. 765-816) தன்னைச் சோழ பாண்டியர் மரபில் வந்தவன் எனத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டிற் குறித்துள்ளான்[30]. ரேனாண்டு-சோழர்: கடப்பை-கர்நூல் கோட்டங்களைத் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் ஆண்டிருந்த நான்கு அரசர்கள் பெயர்களைக் கொண்ட பட்டயமும் சில கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவர் தம்மை 'ரேனாண்டுச் சோழர்' என்றும் 'கரிகாலன் மரபினர்’ என்றும் கூறிக்கொண்டனர். அவர்கள் ஆண்ட பகுதியில் ஏழாயிரம் சிற்றூர்கள்[31] இருந்தன. அவர்கள் நாட்டைக் கி.பி. 639-640-இல் பார்வையிட்ட ஹியூன்-ஸங் தன் குறிப்புப் புத்தகத்தில், தான் சோழ நாட்டைப் பார்த்ததாகக் குறித்துள்ளான்[32]. அவர்கள் எந்தக் காலத்தில் அந்த வடபகுதிக்குச் சென்றனர் - கரிகாலன் காலத்திலா? அல்லது சிம்ம விஷ்ணு சோணாட்டைக் கைப்பற்றிச் சோழ மரபினரைத் தன் வடபகுதி நாட்டைத் தனக்கடங்கி நடக்க ஆளனுப்பினானா?- என்பன விளங்கவில்லை. அவர்களை வென்றதாகப் புலிகேசி கூறுவதால், அச்சோழர் பல்லவர்க்கு அடங்கி - ஆனால் தம் உரிமையோடு ஆண்டவராவர் எனக் கோடலே பொருத்தமாகும். அந்தச் சோழர் இலச்சினை சிங்கம் ஆகும். அவர் பரம்பரை இதுவாகும்.[33]
நந்திவர்மன் │ ┌────────────────────────┼─────────────────────────┐ │ │ │ சிம்மவிஷ்ணு சுந்தரானந்தன் தனஞ்சயவர்மன் சோழமகாராசன் மகேந்திர விக்கிரமவர்மன் (முதித சிலாகூடிரன், நவராமன், சேர-சோழ-பாண்டியர் │தலைவன்) ┌─────────────────────────────────────────┴──────────┐ │ │ குணமுதிதன் புண்யகுமாரன், போர்முகராமன், மார்தவசித்தன், மதனவிலாசன், பிருதிவி வல்லவன் முதலிய பெயர்கள் உடையவன்.
இப்பெயர்களுள் பல பல்லவ மன்னர்கள் பெயர்கள் அல்லவா? நந்திவர்மன், முதல் நந்திவர்மனைக் குறிப்பது. சிம்ம விஷ்ணு, மகேந்திர வர்மன் என்பன பல்லவர் பெயர்கள். எனவே, இச்சோழர் தம் பேரரசர் பெயர்களைத் தாமும் வைத்துக் கொண்டனர் போலும்! மகேந்திர விக்ரமவர்மன் என்பவன் தன்னை 'முத்தமிழ் வேந்தன் தலைவன்’ என்று கூறியதை நோக்க, அவன் பல்லவர் பொருட்டு முத்தமிழ் மன்னரைப் பொருதனன் போலும் என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இறுதி அரசனான புண்ணிய குமரன் பிருதிவி வல்லபன் என்னும் பெயர் கொண்டிருத்தலால், சாளுக்கியர்பால் சார்பு கொண்டவன் போலும்! அவன் மனைவி பெயர் 'வசந்த போற்றிச் சோழ மாதேவி என்பது. இப்பெயரும் சாளுக்கியர் தொடர்பையே உணர்த்துகிறது.
இப்பட்டியலிற் கண்ட அரசர் அன்றி, சோழ மகா ராசாதி ராசன் விக்கிரமாதித்த சத்தியாதித்யன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி இளஞ்சோழமாதேவி என்பவள். அவன் பேரரசன் என்பது அவனது பட்டத்தால் விளங்குகின்றது. அவன் ரேனாண்டு ஏழாயிரத்துடன் சித்தவுட்[34] ஆயிரமும் சேர்த்து ஆண்டவன். இங்ஙனமே தெலுங்கு, கன்னடப் பகுதிகளிலும் பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் என்று கூறிக்கொண்டு ஆண்டனர். இவற்றை நோக்கச் சங்ககாலச் சோழர் மரபு அழியாது தொடர்ந்து வந்தமை நன்கறியலாம்[35].
- ↑ 25. S.I.I. Vol. I. p. 151.
- ↑ 26. Ep. Ind. Vol. 10, p. 103.
- ↑ 27. S.I.I. Vol. II, p.365.
- ↑ 28. Ibid, II.p.508.
- ↑ 29. Ep. Ind. Vol. 17, p. 291-293
- ↑ 30. A.S. of India. 1903-4, p.275.
- ↑ 31. கிராமங்கள் என்பர் சிலர், 'மக்கள்' என்பர் சிலர்.
- ↑ 32. Watters, 2, pp. 225 and 341.
- ↑ 33. Ep, Ind. Vol. 11 p.345.
- ↑ 34. இதன் ஒரு பகுதியே இன்று சித்தவட்டம் என்பது
- ↑ 35. K.A.N. Sastry’s Cholas ‘Vol.1, pp. 124, 125.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சோழரது இருண்ட காலம் - History of Chola - சோழர் வரலாறு - அவன், சோழர், பட்டயம், முதலாம், போலும், பெயர்கள், என்பது, நந்திவர்மன், குறித்துள்ளான், கரிகாலன், மகேந்திர